Tuesday, October 31, 2017

நானா படேகர்

"தற்கொலைக்கு முன் என்னை
ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...! "
- இது ஒரு சூப்பர் ஸ்டாரின் உதடுகள்
அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்!
இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல!
நடைமுறையில் நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி வாழ்வதற்கான நம்பிக்கை தந்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள்!
அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல! இந்தி நடிகர் நானா படேகர் தான்!
(தமிழில் இவர் நடித்த படம் : பொம்மலாட்டம்)
-----------
சம்பாத்தியத்தில் 90 சதவீதத்தை நன்கொடையாக வழங்கிய சூப்பர் ஹீரோ!
வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்ட்ராவின் மராத்வாடா. கூரைகள் இல்லாத வீடுகள். கொடூர வெயிலில், விவசாய நிலங்கள் பாளம் பாளமாக வெடித்திருக்கும். மின்சாரமும் இருக்காது. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பார். அரசியல்வாதிகளே எட்டிப் பார்க்க தயங்கும் மக்கள் நிறைந்த பகுதி. இங்கு அடிக்கடி ஒரு பிரபலத்தை மட்டும் காண முடியும். இருட்டிலும் கூட செல்போன் வெளிச்சத்தில், அந்த பிரபலத்தின் கைகள் செக் விநியோகித்துக் கொண்டிருக்கும். சினிமா உலகில் அவரது பெயர் நானா படேகர். சையிரட்டுக்கு முன் நம்மிடம் அறிமுகமான மராத்திய நடிகர்.
திரையுலகுக்கு வருதற்கு முன் போஸ்டர் ஒட்டியும், சாலைகளில் ஜீப்ரா கோடு வரைவதும்தான் நானாவின் பிழைப்பு. தினச்சம்பளம் 35 ரூபாய். சொற்ப சம்பளத்தில் தாயும் மகனும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். மராத்தி நாடகங்களில் நடித்து, ஹிந்தி சினிமாவில் புகுந்த பிறகு, வருமானம் கொட்டியது. மூன்றே மாதங்களில் முழு சினிமாவை முடித்து விடும் இன்றைய காலத்தில், 'பிரகார் ' என்ற படத்தில் நடிப்பதற்காக, இந்திய ராணுவத்திடம் 3 ஆண்டுகள் சிறப்பு பயிற்சி பெற்ற, சற்றே வித்தியாச நடிகர் நானா.
மகாராஷ்ட்ராவில் கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத வறட்சி. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை. அரசாலும் தடுக்கமுடியவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராடியும் இயலவில்லை. நடிகர் என்பதையும் தாண்டி, சொந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கொத்து கொத்தாக செத்து மடிவது நானாவை என்னவோ செய்தது. குறிப்பாக மராத்வாடாப் பகுதியில் நாக்பூர், லாத்தூர், ஹிங்கோலி, பிரபானி, நான்டெட் மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகம்.
விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க என்ன செய்யலாம் என யோசித்தார் நானா. சில காலம் சினிமாவை ஒதுக்கி வைத்தார். சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து 'நாம் ' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். முதல் நாளே 80 லட்ச ரூபாய் நன்கொடை குவிந்தது. நானா படேகர் என்ற அந்த பெயருக்கு மக்களிடம் அத்தனை செல்வாக்கு. 2 வது வாரத்தில் 7 கோடியாக உயர்ந்தது. மொத்தம் 22 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது.
நன்கொடை பணம் முழுவதும் விவசாயிகளுக்கு முழுமையாக சேர வேண்டும் என்பது நானாவின் அடுத்த இலக்கு. இந்த விஷயத்தில் நானா படேகர் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார். நன்கொடையும் ஏராளமாக வந்துவிட்டது. வேறு ஏதாவது அமைப்பு வழியாக வழங்கிடுவோம் என்று அவர் ஒதுங்கி விடவில்லை. மூன்றாவது அமைப்பின் தலையீட்டை அவர் அனுமதிக்கவில்லை. எந்த அமைப்பையும் அணுகவில்லை. அவரே நேரடியாக களத்தில் குதித்தார்.
மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை வீடு வீடாக சென்று நானாவே நேரடியாக சந்தித்தார். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வறட்சியால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர்க்கு நேரடியாக சென்று நிதியுதவி வழங்கினார். கணவரை இழந்த மனைவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மகாராஷ்ட்ராவில், இப்போது 700க்கும் மேற்பட்ட கிராமங்களில், நானா படேகரின் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து உதவி செய்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை குறைந்திருப்பது நானாவுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நிதியுதவி போக, எஞ்சிய பணத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு கோடிக்கு மேல் மரங்கள் நடப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்துக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது நானா படேகரின் அடுத்த இலக்கு. அறக்கட்டளை வழியாக சேர்ந்த பணத்தை மட்டுமல்லாது, சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கே நானா படேகர் வழங்கி விட்டார்.
திரையில் ஆன்டி ஹீரோவாக நடிக்கும் நானாதான், மராத்வாடா மக்களின் நிஜ ஹீரோ.கோடி கோடியாக பணம் சம்பாதித்த போதும், மும்பையில் ஒரு பெட்ரூம் கொண்ட பிளாட்டில்தான் இப்போதும் தாயுடன் வசிக்கிறார் நானா. ''சம்பாதித்த பணத்தை அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டீர்களே'' என்றால் , 'இப்போதுதான் நான் பிறந்ததற்கான அர்த்தத்தை உணர்ந்திருக்கிறேன்'' என 'நச்' பதில் வருகிறது.
'தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...'! - நானாவின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இது.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Monday, October 30, 2017

மனமும் நோயும்

ஒரு கடிகாரத்தை உருவாக்கியவன் அதன் செயல்பாடுகளை நன்கு அறிவான். அவனால் எப்போதும் அதை பிரிக்கவோ சேர்க்கவோ சரிசெய்யவோ முடியும். ஏனெனில் அதைப் பற்றிய முழு அறிவும் அவனிடம் உள்ளது.

அதேபோல் இந்த உடலை உருவாக்கிய முடிவில்லா பேரறிவுக்கும் அனைத்து செயல்பாடுகளும் தெரியும். ஆழ்மனத்தில் இந்த உடலை பற்றிய அனைத்து அறிவும் உள்ளது.

நீங்கள் உறங்கும்போது உங்களை உயிரோடு வைத்துள்ளதும், சுவாசிக்க செய்வதும், இதயத்தை இயங்க செய்வதும் இந்த ஆழ்மன அறிவுதான்.

வெளிமனம் உண்மையென நம்பும் அனைத்தும் ஆழ்மனத்தில் பதியும். ஆழ்மனத்தில் பதிந்த அனைத்தும் உங்கள் அனுபவத்தில் வரும்.

உங்களின் உணர்வுகளுக்கு ஒத்தவாறே உங்கள் உடல் செயல்படுகிறது. நோய்க்கான காரணம் உங்கள் மனதில் ஏற்படும் சமநிலை மாறுபாடே.

பயம் கோபம் பழியுணர்வு விரக்தி போன்ற எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளே நோயாக வெளிப்படுகிறது. உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் அதை உங்கள் நேர்மறையான எண்ணங்களால் முறியடிக்க முடியும் என்பதே நிதர்சனம்.

புறவுலகில் இருக்கும் கடவுளைவிட உன்னுள் இருக்கும் கடவுளே சிறந்தவர். ஆம் பிரமாண்டமான சக்தி உங்களுக்குள்தான் உள்ளது. அதை உங்கள் சிந்தனை சக்தியால் தட்டி எழுப்புங்கள்.

VASTU CONSULTANT

B.V.SUBRAMANI
9884437677

Saturday, October 28, 2017

அன்னை முறைப்படி வீட்டை சுத்தம் செய்வது எப்படி :---

ஸ்ரீ அன்னை ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அங்கிருந்த அலுவகத்திற்குள் நுழையும்போது  மிக நுட்பமான அழுகுரல் அன்னையின் காதில் விழுகிறது . அங்கிருந்த ஒரு அலமாரியை சுட்டிக் காட்டி அதை திறக்கும்படி சொல்ல அங்கிருந்த பணியாளரும் திறக்கிறார் .  திறந்தவுடன் அடுக்கி வைக்கப்படாமல் திணித்து வைக்கப்பட்டிருந்த அத்தனை கோப்புகளையும் மறுபடி ஒழுங்காக  அடுக்கச் சொல்கிறார் அன்னை .  அவைகளை அழகாக அடுக்கி வைத்த பிறகு அந்த அழுகுரல் மகிழ்ச்சியாக மாறி ஒலித்தது . " ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்ட இந்த அலமாரி,  கோப்புகளின்  மகிழ்ச்சி ,  நேர்மறை சக்திகளை அறையில் பரப்பும்.  அதனால் ஊழியர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள் "  என்று .    ஸ்ரீ அன்னை கூறுகிறார்.   
இதை படித்திருந்த உஷா பாஸ்கர் என்ற ஸ்ரீ அன்னையின்பக்தர்  ,  அன்னை சொன்ன முறைப்படி வீட்டை சுத்தம் செய்த  பிறகு குடும்பத்தில் அபரிமிதமான வளம் குவிந்த்தாக குறிப்பிடுகிறார் .அழுக்கான வீட்டில் செல்வம் சேராது .  வீட்டை சுபிக்ஷமாக்க வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு திருவிழா போல வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.வீட்டில் உள்ள பாத்திரங்களை எல்லாம் கழுவி, துடைத்து வைக்க வேண்டும். நாற்காலிகளின் அடிப்புறம் ,  கட்டிலின் கீழே ,  அலமாரிகளின் பின்புறம் எல்லாம் ஒட்டடை இருக்கும். அதை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும்.  வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் போட்டோக்களில் புழுதி இருக்கும் .அதை சுத்தமாகத் துடைக்க வேண்டும் .  ஜன்னல் , கதவு என வீட்டின் ஒவ்வொரு    அங்குலமும் ஆயிரம் சதவிகிதம்  சுத்தம் என்கிற இலக்கோடு செய்ய வேண்டும் .தேவை இல்லாத பொருட்கள், உடைந்த பொருட்கள்,  ஆகியவற்றை வீட்டை விட்டே அப்புறப்படுத்த வேண்டும் . உடைந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் விபத்து ஏற்படும்.  ஆரோக்கிய குறைவு ஏற்படும்.ரிப்பேரான பொருட்களை சரி செய்து வைக்க வேண்டும்    சுவர்களில் ஒட்டடை படிய விடக்கூடாது.  ஒருமுறை கஷ்டப்பட்டு சுத்தம் செய்து  சாம்பிராணி புகை போட்டு வீட்டை தெய்வீகமாக்கி விட்டால்  மகாலட்சுமி குடியேருவாள் .  அதனால் செல்வம் பெருகும் .  தடைபடும் திருமணம் விரைவில் நடக்கும் . குடும்பத்தில் அன்பு , அமைதி அதிகமாகும் .  கெட்ட கனவுகள் வராது . நாணயமானவர் என்ற நல்ல பெயர் கிடைக்கும்.      வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அந்த வீட்டை இது போன்று சுத்தமாக  வைத்துக் கொண்டால் விரைவில் சொந்த வீடு வாங்குவார்கள்.  கடன்கள் கண்ணுக்கு தெரியாமல் மறையும் .கோர்ட் வழக்குகள்  சாதகமாகும் .      கடைகளில் இப்படி சுத்தம் செய்ய லாபம் குவியும் ..

B.V.SUBRAMANI
VASTU CONSULTANT
9884437677

Thursday, October 26, 2017

ஜகத்குரு மகா பெரியவாள்

"ஆரோக்யமாக வாழ அருமையான உபதேஸம்"

பெரியவாளுக்கு வந்து நமஸ்காரம் செய்தாள் ஒரு பக்தை.

"பெரியவா...... மனுஷாளுக்கு.... பணம், புகழ், ஆயுஸ் எல்லாமே வேணும்தான்! ஆனா, எல்லாம் இருந்தும், ஒடம்பு ஆரோக்யமா இல்லேன்னா ப்ரயோஜனமில்ல....  நன்னா ஆரோக்யமா இருக்கறதுக்கு பெரியவாதான் வழி சொல்லணும்..... ஸ்லோகமோ, வேற பாராயணமோ, கோவில் கோவிலா போகறதுக்கோ.... எனக்கு நேரமேயில்ல பெரியவா! simple-ஆ... என்னால ஆகக்கூடியதா பெரியவாதான் வழி காட்டணும்"

எளிமையான பஞ்சிலிருந்து, எளிமையான ஆனால் இதமான, நன்மையை மட்டுமே தரும் பருத்திதானே வரும்?

அதே போல், எளியனான, ஸர்வ ஸுலபனான பகவானான பெரியவாளிடமிருந்தும்...... பக்தையை முன்னிட்டு, தறிகெட்டலைய மட்டுமே நேரம் இருக்கும் நமக்காக...... எளிய, மிக மிக ஸுலபமான உபதேஸம் சட்டென்று உதிர்ந்தது.

"இதென்ன பெரிய விஷயம்? ஓம் நமோ பகவதே ஸூர்ய நாராயணாய நமஹ....ன்னு தெனோமும் 12 தடவை சொல்லிட்டு, கெழக்கப் [கிழக்கு]  பாத்து, 12 நமஸ்காரம் பண்ணு! போறும்......"

திருக்கரம் உயர்ந்து அபயமும், ஆஶீர்வாதமும் தந்தது.

"பெரியவா சொன்னதை.... நானும், குடும்பத்துல எல்லாருமே பல வர்ஷங்களா விடாம பண்ணிண்டு வரோம்! பெரியவாளோட ஆஶீர்வாதத்துல.... எங்களுக்கு ஒரு குறையும் இல்லாம, ஆரோக்யமா இருக்கோம்"

ஏன்? எதற்கு? என்று துளி கூட ஸந்தேஹம் எழாத தூய அன்பால் [unconditional love], திட பக்தியில் பிறக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமே போதும்.

அதுதான் பகவான்! அதுதான் அவனுடைய அனுக்ரஹம்!

ஸ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்.

B.V.SURBAMANI
VASTU CONSULTANT
9884437677

Wednesday, October 25, 2017

கந்தசஷ்டி வரலாறு!

கந்தசஷ்டி தோன்றிய கதை தெரியுமா?
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)
அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.
இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.
அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க... அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.
கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

B.V.SUBRAMANI
VASTU CONSULTANT
9884437677

Tuesday, October 24, 2017

தாம்பத்தியம்

படித்து நெகிழ்ந்தது.
அந்த முதியவர் தடுத்தடுமாறியபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். எனது டூ வீலரை நிறுத்தி, அருகில் சென்று பார்த்தேன். அவரது காலில் கட்டை விரல் நசுங்கி ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
"என்னங்க ஆச்சு"னு கேட்டேன்.
"வேகமாக வந்த ஆட்டோ சக்கரம் காலுல ஏறிடுச்சு தம்பி" என்றார்.
"வாங்க ... எனக்கு தெரிந்த டாக்டர் பக்கத்துல தான் இருக்கார், கட்டுப் போட்டு மொதல்ல ரத்தம் கசியறத நிறுத்தணும். கூடவே டி.டி இஞ்செக்‌ஷனும் போட்டுக்கலாம்!" என்றேன்.
வேண்டாம் என்று மறுத்தவரை விடாப்பிடியாக அழைத்து சென்றேன்.
எல்லாம் முடியவும்.... "மணி என்ன தம்பி.... நேரமாயிடுச்சே.. நேரமாயிடுச்சே...!" என்று பறந்தார் பெரியவர்.
"அப்படி என்னங்க அவசரம்..?! என்றேன் நான்.
"என் பெண்டாட்டி பசியோட வீட்டில இருக்கா. அவளுக்கு இட்லி வாங்கிட்டு போகணும்..!" என்றார்.
"என்ன பெரியவரே... உங்க காலுல அடிப்பட்டிருக்கு... இப்ப இட்லியா முக்கியம்...?! லேட்டா போன தான் என்ன... திட்டுவாங்களா...?!" என்று சீண்டினேன்.
அதற்கு அவர் "அவ அஞ்சு வருஷமா மனநிலை பாதிச்சு நினைவில்லாம இருக்கா தம்பி. எல்லா ஞாபகமும் போயிடுச்சி! நான் யார்னுகூட அவளுக்குத் தெரியாது...!" என
நான் "அப்படிப்பட்டவங்க உங்களை ஏன் லேட்டுன்னு எப்படி கேப்பாங்க...? அவங்களுக்குத் தான் உங்களை யாரென்றே தெரியாதே! கவலை படாதீங்க" என்றேன்.
அதற்கு அந்த முதியவர் புன்னகைத்தபடியே என்னை பார்த்து சொன்னார் "ஆனா அவ யாருன்னு எனக்குத் தெரியுமே தம்பி..!"
இது தான் தார்மீகத் தாம்பத்யமோ..?!!
Image may contain: one or more people and close-up

B.V.SUBRAMANI

9884437677

Saturday, October 21, 2017

லட்சிய தடை

ஒரு நாட்டில் உள்ள அரசன் ஒருவன் இறைவன் மீது மிக்க பக்தி கொண்டிருந்தான்.
தினமும் கடவுளுக்கு பூஜை செய்யாமல் அவன் உணவு அருந்தியதே இல்லை. ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்ற மன்னன், இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், அங்கேயே தங்க வேண்டி வந்தது. மறுநாள் வழக்கம்போல் விழித்தெழுந்த மன்னன், காலைக்கடன்களை முடித்தபின் இறைவனை பூஜிக்கத் தயாரானான்.சற்றே மேடான இடத்தில் மண்ணைக் குவித்து அதனையே கடவுளாக பாவித்து, காட்டு மலர்களால் பூஜித்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்தான்.அப்போது, அந்தப் பக்கமாக ஒரு வேடன், மான் ஒன்றைத் துரத்திக் கொண்டு வந்தான். மான் ஓடிய பாதையில் தாண்டி, தாவிக் குதித்து ஓடித் துரத்தினான்.
அப்போது அவனது கால், மன்னன் கடவுளாக பாவித்து வழிபட்ட மண்மேட்டின் மேல் போடப்பட்டிருந்த பூக்களின் மேல் பட்டது. ஆனால், வேடன் அரசனையோ அங்கிருந்த மற்றவர்களையோ அர்ச்சிக்கப்பட்டிருந்த மலர்களையோ கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. அவனது கவனம் முழுக்க மான்மீதே இருந்தது.தொடர்ந்து மானைத் துரத்தியபடி ஓடினான். எல்லாவற்றையும் கவனித்த அரசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
பூஜிக்கப்பட்ட பூக்களை மிதித்ததோடு என்னையும் மதிக்காமல் போகிறான்.
என்ன ஆணவம்? பிடியுங்கள் அந்த வேடனை...! என்று ஆணையிட்டான்.
உடனே புறப்பட்ட வீரர்கள், காட்டில் ஓடிப் பழக்கப்படாததால் வேடனின் வேகத்துக்கு ஈடுதர முடியாமல் தோல்வியோடு திரும்பினார்கள்.
அதனால் மன்னனின் கோபம் மேலும் அதிகரித்தது.கொஞ்சநேரம் கழிந்தது.
அந்த வேடன், வேட்டையாடிய மானை சுமந்து கொண்டு அந்தப் பக்கமாக வருவதைப் பார்த்தார்கள் வீரர்கள்.ஓடிப்போய் அவனைப் பிடித்து அரசன் முன் நிறுத்தினார்கள்.அப்போதுதான் மன்னரைப் பார்த்தான் வேடன்.
வேந்தே வணக்கம். வேடர்களின் வசிப்பிடமான இங்கே வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். வணங்குகிறேன்! என்று அரசரைப் பணிந்தான்.
அவனை எரித்து விடுபவர் போல் பார்த்தார் மன்னர்.இதே வழியாக மானைத் துரத்தியபடி சென்ற நீ, நான் இறைவனுக்கு சமர்ப்பித்த பூக்களை மிதித்ததோடு என்னையும் கவனிக்காதவன் போல் அவமானப் படுத்திவிட்டல்லவா போனாய். இப்போது மாட்டிக்கொண்டதும், பணிவானவன்போல் நடிக்கிறாயா? சீற்றமாக கேட்டார்.
மன்னிக்க வேண்டும் மன்னா, வேட்டையின் போது என் கவனம் முழுதும் மான் மேல்தான் இருந்தது.அதனால்தான் நான் எதையும் கவனிக்கவில்லை.
வேடன் சொல்ல அரசனுக்கு ஏதோ உறுத்தியது;வேட்டையில் இருந்த வேடனின் கவனம் இரை மீது குவிந்திருந்திருக்கிறது. ஆனால் தியானத்தில் ஆழ்ந்திருந்த நம் மனம் இறை மீது குவிந்திருக்கவில்லையே.. அதனால் அல்லவா நாம் வேடனை கவனிக்க முடிந்தது..நினைத்த அரசன், தனக்குப் பாடம் உணர்த்திய வேடனுக்கு வெகுமதியளித்து அனுப்பினான். பிறகு மவுனமாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான். தன் மனம் இறை நினைவில் இருந்து விலகியது ஏன்? வழக்கம்போல் தன்னால் இறை தியானத்தில் ஆழமுடியாமல் போனது எதனால்? புதிய சூழல், அச்சமூட்டும் இடம், முதல் நாள் வேட்டையாடிய களைப்பு, சுற்றிலும் விதவிதமான பறவை, விலங்குகளின் சத்தம் இப்படி ஒவ்வொன்றாகப் புரிந்தது அரசனுக்கு.
இந்த மன்னனைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும்.
லட்சியப் பாதையில் இருந்து மனம் விலகி சோர்வடைவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.
லட்சியத்துக்குத் தடையாக இருப்பதைக் கண்டுபிடித்து நீக்கிவிட்டால் போதும், வெற்றி நிச்சயம் நமக்கு கிட்டும்.

B.V.SUBRAMANI
W.APP/MOB 9884437677

Tuesday, October 17, 2017

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்


தீபாவளி பாவம் தொலைக்கும் நீராடல்

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நீரை கொதிக்க வைத்து விடுகிறோம். தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது. அன்றைய தினத்தில் நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். அதுபோல நம் வீட்டிலிருக்கும் சுத்தமான நீரில் கங்கை தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறாள். அதனால் கங்கையில் குளித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும்.
இதனால்தான் தீபாவளி குளியலை கங்கா ஸ்நானம் என்றே சொல்கிறார்கள். கங்கா ஸ்நானத்தால் நம் பாவங்கள் நீங்குகின்றன.
பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியை ஆட்கொள்வதற்காக உலகளந்தார். அவர் தன் பாதத்தை மேல் லோகத்துக்கு தூக்கியவுடன், பிரம்மா அந்த பாதங்களுக்கு தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார்.
அது ஆகாயகங்கையாகக் கொட்டியது. அது அப்படியே பூமியில் விழுந்தால் உலகம் தாங்காது என்பதால், சிவன் அதைத் தன் தலையில் தாங்கினார். பின்னர், பகீரதனின் கோரிக்கைக்கு இணங்க பூமி தாங்கும் வேகத்தில் இங்கு அனுப்பி வைத்தார்.
புனிதநீர் எதுவாயினும் அது கங்கையே ஆகும். நம் வீட்டுக்குடத்தில் புனிதநீரிட்டு நூல் சுற்றி மந்திரங்களை ஓதும்போது கங்கை அதற்குள் ஆவாஹனம் ஆகிவிடுகிறது. எனவே, விஷ்ணுவுக்கும், சிவனுக்கும் கங்கை தீர்த்தம் சம்பந்தப்படுகிறது.
ஆக, பிரம்மா, சிவன், விஷ்ணு என்ற முப்பெரும் தெய்வங்களுக்கும் சம்பந்தப்பட்ட கங்கை நதியை நம் வீட்டு தண்ணீரில் ஆவாஹனம் செய்து தீபாவளியன்று நாம் கங்கா ஸ்நானம் செய்கிறோம்.
Vastu Enquires
B.V.SUBRAMANI
W.APP / MOB 9884437677

Saturday, October 14, 2017

மன முதிர்ச்சி என்றால் என்ன?


1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)  ஏற்றுக்கொள்வது.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்  நிரூபிப்பதை விடுவது.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்

For Vastu Inquiries
B.V.SUBRAMANI
VASTU CONSULTANT
W.APP/MOB 9884437677

Friday, October 13, 2017

பரிகாரத் தலங்கள்

*ஆயுள் பலம் வேண்டுதல்..*
1.அ/மிகு. அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர்,
2.
அ/மிகு. எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.
அ/மிகு. காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்,
4.
அ/மிகு. சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்,
5.
அ/மிகு. தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி,
6.
அ/மிகு. ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி.
7.
அ/மிகு. வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம்,
*ஆரோக்கியத்துடன் வாழ...*
1.அ/மிகு. தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
2.
அ/மிகு. பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில்,திருத்துறைப்பூண்டி.
3.
அ/மிகு. பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
4.
அ/மிகு. மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
5.
அ/மிகு. மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
6.
அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.
அ/மிகு. வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.
*எதிரி பயம் நீங்க...*
1.அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.
2.
அ/மிகு. அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.
3.
அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4.
அ/மிகு. காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.
5.
அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6.
அ/மிகு. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில்,அதியமான்கோட்டை.
7.
அ/மிகு. தில்லைகாளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.
8.
அ/மிகு. பிரத்யங்கராதேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
9.
அ/மிகு. மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.
10.
அ/மிகு. முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11.
அ/மிகு. ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.
12.
அ/மிகு. வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி
*கடன் பிரச்சனைகள் தீர...*
1.அ/மிகு. அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி
2.
அ/மிகு. கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.
3.
அ/மிகு. சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
4.
அ/மிகு. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5.
அ/மிகு. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.
*கல்வி வளம் பெருக...*
1.அ/மிகு. கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
2.
அ/மிகு. தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3.
அ/மிகு. மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4.
அ/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.
*குழந்தைப்பேறு அடைய...*
1.அ/மிகு. ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.
2.
அ/மிகு. சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.
3.
அ/மிகு. சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4.
அ/மிகு. தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
5.
அ/மிகு. பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி, தென்காசி.
6.
அ/மிகு. மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7.
அ/மிகு. முல்லைவனநாதசுவாமி திருக்கோவில், திருக்கருகாவூர்.
8.
அ/மிகு. நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.
9.
அ/மிகு. விஜயராகவபெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.
*குடும்பத்தில் ஒற்றுமை ஓங்க...*
1.அ/மிகு. அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.
2.
அ/மிகு. அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.
3.
அ/மிகு. அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்
4.
அ/மிகு. கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.
5.
அ/மிகு. சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.
6.
அ/மிகு. நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.
7.
அ/மிகு. பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.
8.
அ/மிகு. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.
9.
அ/மிகு. மாரியம்மன்,காளியம்மன் திருக்கோவில், ஊட்டி
10.
அ/மிகு. லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.
11.
அ/மிகு. வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்
12.
அ/மிகு. ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.
*செல்வ வளம் சேர...*
1.அ/மிகு. அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
2.
அ/மிகு. அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.
3.
அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
4.
அ/மிகு. பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
5.
அ/மிகு. மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.
*திருமணத்தடைகள் நீங்க...*
1.அ/மிகு. உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.
2.
அ/மிகு. கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.
3.
அ/மிகு. கல்யாணவேங்கடரமணசுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.
4.
அ/மிகு. கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
5.
அ/மிகு. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.
6.
அ/மிகு. பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.
7.
அ/மிகு. நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.
8.
அ/மிகு. வரதராஜபெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.
9.
அ/மிகு. வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.
*தீவினைகள் அகன்றிட...*
1.அ/மிகு. காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.
2.
அ/மிகு. காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3.
அ/மிகு. குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.
4.
அ/மிகு. சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.
5.
அ/மிகு. சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6.
அ/மிகு. பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.
*நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர...*

1.அ/மிகு. அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.
2.
அ/மிகு. தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.
3.
அ/மிகு. பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
4.
அ/மிகு. வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல். காஞ்சீபுரம்.
For Vastu Enquiries
B.V.SUBRAMANI
VASTU CONSULTANT
W.APP/MOB 9884437677

Wednesday, October 11, 2017

குமாரஸ்தவம்

1. ஓம் ஷண்முக பதயே நமோ நம!!
ஆறுமுக தலைவனுக்குப் போற்றி போற்றி.
2. ஓம் ஷண்மத பதயே நமோ நம!!
ஆறுவகை சமயங்களின் தலைவனுக்குப் வணக்கம்.
3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம!!
ஆறு கழுத்துக்களையுடைய தலைவனுக்கு வணக்கம்.
4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம!!
ஆறு கிரீடங்களை (முடிகளை) அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்.
5. ஓம் ஷட்கோன பதயே நமோ நம!!
அறுகோண (சக்கரத்தில் எழுந்தருளியுள்ள) தலைவனுக்கு வணக்கம்.
6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம!!
ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்.
7. ஓம் நவநிதி பதயே நமோ நம!!
ஒன்பது வகையான நிதிகளின் தலைவனுக்கு வணக்கம்.
8. ஓம் சுபநிதி பதயே நமோ நம!!
பேரின்ப முக்தி நிலையத் தலைவனுக்கு வணக்கம்.
9. ஓம் நரபதி பதயே நமோ நம!!
அரசர் தலைவனுக்கு வணக்கம் (நரபதி - மக்கள் அரசன்).
10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம!!
தேவ ராஜனான தேவேந்திரனுக்கும் மகா தேவனான சிவனாருக்கும் முறையே ஆட்சியையும் உபதேசமும் அளித்த அண்ணலான சுரபதிக்கு வணக்கம்.
11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம!!
கூத்தப் பிரானான அறுமுகச் சிவனாருக்கு வணக்கம்.
12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம!!
ஆறெழுத்து இறைவனுக்கு அநேக வணக்கம்.
13. ஓம் கவிராஜ பதயே நமோ நம!!
கவிராஜ ராஜனாகிய தலைவனுக்கு வணக்கம்.
14. ஓம் தபராஜ பதயே நமோ நம!!
தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்.
15. ஓம் இஹபர பதயே நமோ நம!!
இவ்வுலகத்திற்கும் மறுமையிலடையும் சுவர்க்கம் முதலிய உலகத்திற்கும் தலைவனான குமரனுக்கு வணக்கம்.
16. ஓம் புகழ்முநி பதயே நமோ நம!!
திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரினாதருடைய தலைவனுக்கு வணக்கம்.
17. ஓம் ஜயஜய பதயே நமோ நம!!
வெற்றி மிக்க இறைவனுக்கு வணக்கம்.
18. ஓம் நயநய பதயே நமோ நம!!
மிக்க இனிமையைச் செய்யும் தலைவனுக்கு வணக்கம்.
19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம!!
அழகு குருவான தலைவனுக்கு வணக்கம்.
20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம!!
தேவகுஞ்சரி என்னும் தெய்வானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்.
21. ஓம் வல்லீ பதயே நமோ நம!!
வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்.
22. ஓம் மல்ல பதயே நமோ நம!!
மல் போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்.
23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம!!
வேல் முதலிய தெய்வப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்.
24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம!!
சாஸ்திரங்கள் என்ற கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்.
25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம!!
சஷ்டி திதியில் அமைந்த கந்த விரதத் தலைவனுக்கு வணக்கம்.
26. ஓம் இஷ்டி பதயே நமோ நம!!
(வேள்வி) யாகத் தலைவனுக்கு வணக்கம்.
27. ஓம் அபேத பதயே நமோ நம!!
வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்.
28. ஓம் ஸுபோத பதயே நமோ நம!!
மெய்யுணர்வு அருளும் தலைவனுக்கு வணக்கம்.
29. ஓம் (வ்) வியூஹ பதயே நமோ நம!!
சேனைகளின்) அணிவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்.
30. ஓம் மயூர பதயே நமோ நம!!
மயூர நாதனுக்கு வணக்கம்.
31. ஓம் பூத பதயே நமோ நம!!
பூதங்களின் தலைவனுக்கு வணக்கம்.
32. ஓம் வேத பதயே நமோ நம!!
வேதநாதனுக்கு வணக்கம்.
33. ஓம் புராண பதயே நமோ நம!!
பழமையான (புராணங்களுக்குத்) தலைவனுக்கு வணக்கம்.
34. ஓம் (ப்) பிராண பதயே நமோ நம!!
ஆன்ம நாதனுக்கு வணக்கம்.
35. ஓம் பக்த பதயே நமோ நம!!
அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்.
36. ஓம் முக்த பதயே நமோ நம!!
பாச பந்தங்களில் இருந்து விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்.
37. ஓம் அகார பதயே நமோ நம!!
38. ஓம் உகார பதயே நமோ நம!!
39. ஓம் மகார பதயே நமோ நம!!
மூல மந்திரமாகிய "ஓம்" என்ற பிரணவம் அகரம், உகரம், மகரம் என்று பிரியும். இம்மூன்று ஒலிகளும் முறையே ஆகல, காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் அவற்றை செய்யும் அயன், அரி, அரன் என்ற மும்மூர்த்திகளையும் உணர்த்தும். அந்த மும்மூர்த்திகளையும் அதிஷ்டித்து நிற்கும் முருகனே மூவர் தேவாதிகள் தம்பிரான் ஆவான். அவனே பிரணவ வைசியன் என்க.
40. ஓம் விகாச பதயே நமோ நம!!
எங்கும் துன்றி நிறைந்த இறைவனான குகபதிக்கு வணக்கம்.
41. ஓம் ஆதி பதயே நமோ நம!!
எல்லாவற்றிற்கும் முதற் காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்.
42. ஓம் பூதி பதயே நமோ நம!!
சகல ஐஸ்வரியங்களுக்கும் அண்டங்களுக்கும் நாயகனுக்கு வணக்கம்.
43. ஓம் அமார பதயே நமோ நம!!
மாரவேளை எரித்த மாதேவருக்குத் தலைவனுக்கு வணக்கம்.
44. ஓம் குமார பதயே நமோ நம!!
குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.
குமாரஸ்த்வம் என்ற இச்சிறுநூல்
ஓர் ஆறெழுத்து மந்திர மறையாகும். இந்நூலின் முதல் ஆறு அடிகள் ஆறு என்ற எண் அமையவருவது குறிப்பிடத்தக்கது. இதில் குமாரபிரானது திருமுகம், திருக்கைவேல், மயில், இரு தேவியர் முதலிய அனைத்தும் பேசப்படுவதால் இதனைப் பாராயணம் செய்வோர் குமாரப்பெருமானை இரு தேவியற்களோடும் மயில்மீது தரிசிக்கப் பெறுவர் என்பதும் குமாரப் பெருமான் திருவருளும், பாம்பனடிகள் குருவருளும், சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வையும் தந்தருளும் என்பதும் திண்ணம்.
For Vastu Enquires
B.V.SUBRAMANI
VASTU CONSULTANT
W.APP / WEB 9884437677

Tuesday, October 10, 2017

நேசத்தின் மூலமே அன்பை செலுத்த முடியும்!

கிருஷ்ணரின் அண்ணன் பலராமனிடம் ஒரு அரக்கன் சண்டைக்கு வரும்படி சவால் விட்டான். பலராமனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டார். பலராமன் தனது புஜத்தை உயர்த்தி அந்த அரக்கனின் தலையை நசுக்கப் போனார். அப்போது அந்த அரக்கன் பலராமனின் உருவத்தை விட இரண்டு மடங்கு வளர்ந்து நின்றான். பலராமனும் தனது வரத்தைப் பயன்படுத்தி, இரண்டு மடங்கு வளர்ந்து அரக்கனைத் தாக்கச் சென்றார். அரக்கனோ மேலும் வளர்ந்து பலராமன் மீது குன்றுகளைப் பிடுங்கி எறியத் தொடங்கினான். ஒருகட்டத்தில் பலராமன் தன்னால் அரக்கனை வெல்லமுடியாதென்று உணர்ந்து கொண்டான். சகோதரன் கிருஷ்ணனிடம் சென்று உதவி கேட்டான்.
“அண்ணா, இந்தப் பிரச்சினையை என்னிடம் விடுங்கள். நான் அந்த அரக்கனைப் பார்த்துக் கொள்கிறேன்.” என்று உறுதியளித்த கிருஷ்ணன் அரக்கன் இருக்குமிடத்திற்கு வந்தார்.
கிருஷ்ணனின் கையில் எந்த ஆயுதமும் இல்லை. இரண்டு கைகளையும் அகலவிரித்து அரக்கனைப் பார்த்து புன்னகை பூத்தார். அரக்கனின் உருவம் சாதாரண மனித வடிவை அடைந்தது.
“வா என் தோழனே” என்று மீண்டும் கூப்பிட்டு அவன் அருகில் சென்றார். அரக்கனின் உருவம் சிறியதாகிக் கொண்டே சென்றது. அரக்கன் அருகில் சென்ற கிருஷ்ணன், அவனை அரவணைத்து தட்டிக்கொடுத்தார். இன்னும் சிறியவனாகிவிட்டான் அரக்கன். இதைப் பார்த்த பலராமனுக்கோ ஆச்சரியம்.
“தம்பி, எனக்கு இந்த விஷயம் புரியவேயில்லை. அவனை எப்படி இத்தனை சிறியனவனாக்கினாய்?” என்று கேட்டார்.
“இந்த அரக்கனின் பெயர் குரோதம். நீ கோபமாகும் போது, அவனுக்கு அது உணவாகும். மற்றவனின் கோபத்தில் தன்னை வளர்த்துக் கொள்பவன் இவன். நீ உன்னுடைய கோபத்தைத் துறந்துவிட்டு அன்பை அவனுக்கு ஊட்டினால் அவன் மிகவும் சிறியவனாகி விடுவான்.”
புத்தரின் பிரதானமான அறிவுரையும் இதுதான். வெறுப்பால் வெறுப்பை நீங்கள் சமாதானப்படுத்தவே இயலாது. நேசத்தின் மூலமாக அன்பின் மூலமாக எல்லாரையும் எல்லாவற்றையும் வெல்லமுடியும்.
FOR VASTU ENQUIRY
B.V.SUBRAMANI
VASTU CONSULTANT
W.APP / MOB 9884437677

கேரி பேக்

காலை நேரம். கொஞ்சம் மருந்தும் காலைச் சிற்றுண்டியும் கடையில் வாங்க வேண்டிய சூழல். ஒரு பெரிய, இரண்டு சிறிய பாத்திரங்களோடு புறப்பட்டேன். மருந்துக் கடையில் சிரப்ஒரு பாட்டிலும், மூன்று மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டு மருந்துக்கு கை நீட்டினேன், மருந்துப் பாட்டில், மாத்திரையோடு ஒரு கேரி பேக்கை அந்தப் பையன் நீட்டினான்.
இப்பொழுதெல்லாம் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினாலும் கூட,”விய்ஷ்க்என பிய்த்து, ”ப்பூஎன ஊதி ஒரு கேரி பேக்கில் போட்டுக் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். 
தம்பி…. கேரி பேக் வேணாம்என்றேன். 
பரவால்ல சார் வாங்கிக்கங்கஎன்றான். 
மறுத்து விட்டு மருந்துப் பாட்டில், மாத்திரை மட்டும் வாங்கி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு திரும்பினேன். திடீரென அந்தப் பையனை திரும்பிப் பார்க்கத் தோன்றியது.  பார்த்தேன். அருகிலிருந்த பெண்ணிடம் ஏதோ சொல்லி முடித்திருக்க, அந்தப் பெண் கண்கள் சிலிர்க்க சிரித்துக் கொண்டிருந்தார். நான் அவர்களைப் பார்ப்பதை கண்டவுடன், சிரிப்பை நிறுத்தி தங்கள் வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பது போல் நகர்ந்தார்கள். சிற்றுண்டிக் கடையில் ஆறு இட்லிகள் வேண்டுமென்று கூறி பாத்திரங்களைக் கொடுத்தேன். இட்லிகளை பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டு, சாம்பார் மற்றும் சட்னிகளை தயாராக வைத்திருந்த பாலித்தீன் மூட்டை முடிச்சுகளாக அள்ளிக் கொடுத்தார். அதை மறுத்து விட்டு, என்னிடமிருந்த பாத்திரத்தில் ஊற்றித் தருமாறு கேட்டேன். பணியாளர் மறுத்தார். ஏனென்று கேட்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளாகத் தான் கொடுக்கச் சொல்லி தங்களுக்கு உத்தரவென்று சொல்லிவிட்டு என்னை எளிதில் ஒதுக்கிவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை கவனிக்க, நான் ஒருவித வெறுமை நிறைந்த கோபத்துடன், பணம் கொடுக்குமிடத்தில் இருந்த நபரிடம் ஏங்க நா கொண்டுவந்த பாத்திரத்தில் ஊத்தித் தராம, பிளாஸ்டிக் பொட்டலமா தர்றீங்கஎன சற்றே எரிச்சலோடு கேட்டேன். 
யார் சார் இப்பல்லாம் பார்சல் வாங்க பாத்திரம் கொண்டு வர்ராங்க! எல்லாரும் பிஸி, வர்ற வேகதில சட்னு, கட்டி வச்சிருக்க சாம்பார், சட்னினு ஈஸியாக வாங்கிட்டு போறாங்க, அது தான் எங்களுக்கும் ரொம்ப ஈஸிங்கஎனச் சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளரிடம் சார் குடுங்கஎன்று என்னை எளிதாகப் புறந்தள்ளினார். 
மனது சுருங்கி வெளியில் வந்தேன், அங்கேயே மேசை மேல் வைத்து பொட்டலங்களைப் பிரித்து சாம்பார், சட்னியை பாத்திரத்தில் ஊற்றலாமா என்று நினைத்தேன், எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பார்களோ என வெட்கப்பட்டது வெட்கங்கெட்ட மனது. 
சாலையோரம் இறைபட்டு கிடக்கும் கசங்கிய கேரி பேக்குகள் போல் மனது கசங்கிப் போனது. எந்த நாகரிகம், கேரி பேக்குகளுக்காக மனிதர்களை இப்படி அடிமைப்படுத்தியது. 
நான்கு கடைகளில் நான்கு பொருட்கள் வாங்கினால் நான்கு கேரி பேக்குகள் இலவசமாய்க் கிடைக்க, நமது கைகள் மகிழ்ச்சியோடு வாங்கி ஊஞ்சலாட்டிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. 
வீட்டுக்கு போனவுடன் கசங்கிய அந்த கேரி பேக் குப்பைத்தொட்டி ஓரத்திலோ, சன்னல் வழியாகவோ தூக்கி வீசப்படுகிறது. சில சமயம் பின்னர் பயன்படுமென்று அரிசி மூட்டை சந்திலே சொருகி வைக்கப்பட்டு கிடக்கிறது. சில நாட்களில் அதுவும் வீதிக்கு வருகிறது. 
பெரும்பாலும் அந்த நாள் குப்பை கேரி பேக்கில் மூட்டையாகக் கட்டப்பட்டு வாசலில் குப்பை சேகரிப்பவருக்காக வைக்கப்படுகிறது. 
கேரி பேக்குகளுக்கு இணையாக, உபயோகித்தவுடன் தூக்கியெறியும் பிளாஸ்டிக் டம்ளர்களும், பாட்டில்களும், தட்டுகளும் பார்க்கும் இடமெல்லாம் பரவிக் கிடக்கின்றன. 
பயன்படுத்திய பின் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களில், வெறும் பத்து சதவிகிதம் கூட மறு சுழற்சிக்காக சேகரிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் சாலையோரமும், பயன் படுத்தாமல் கிடக்கும் காலி இடங்களிலும் படர்ந்து பரவிக் கிடக்கின்றன. 
காமுகனின் மனதில் ஊறும் வெற்றுக் காமம் போல், மண்ணோடு ஊடுருவிக் கிடக்கிறது. மண்ணில் ஊறிய இந்த பிளாஸ்டிக் சனியன் மண்ணோடு மண்ணாக மட்கிப் போக எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்? மிக எளிதாக பிளாஸ்டிக்கை மண்ணில் கலக்கச் செய்யும் கொலை பாதகத்தை மனித சமுதாயம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்து கொண்டேயிருக்கிறது. 
மழை கொட்டி வெள்ளம் வடிந்த பின் ஒவ்வொரு சாக்கடை பள்ளத்தின் குறுக்கே இருக்கும் குழாய்களிலும் கொத்துக் கொத்தாக பிளாஸ்டிக் குப்பைகள் குட்டிச் சாத்தான்கள் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மோசமான சாட்சியம் மனித சமூகத்திற்கு மிகப் பெரிய எச்சரிக்கை மணி. 
சாக்கடைகள் அடைபட்டு கலங்கிய கழிவுநீர் சர்வ சாதாரணமாய் வீடுகளுக்குள் வருவதை சிறு முகச் சுழிப்போடு நகரத்தில் மன்னிக்கவும் நரகத்தில் வாழும் மனித சமூகம் சகித்து வாழப் பழகிவிட்டது. அடுத்த பத்து இருபது ஆண்டுகளில் இந்த பிளாஸ்டிக் நகரத்தின் தரை முழுதும் பரவி விடலாம். மழை நீர் மண்ணில் செல்ல வாய்ப்பற்று நிலமெல்லாம் மலடாகிவிடலாம். 
பெய்யும் நீரும் சாக்கடை அடைப்புகளை மேவி ஆற்றுக்கு ஓடி கடலை எட்டிவிடலாம். நகரத்தின் தாகம் தீர்க்க எங்கிருந்து நீர் கிடைக்கும், 2000 அடி தோண்டுவோமா இல்லை 3000 அடி இல்லையில்லை 10,000 அடி அல்லது பூமிப் பந்தின் மறுபக்கம் வரை தோண்டுவோமா, நம் விஞ்ஞானம் தோண்ட வைக்கலாம்ஆனால் விஞ்ஞானத்திற்கு தண்ணீரை சிதைத்து சீரழிக்கத் தெரியும், புதிதாய் ஒரு சொட்டு தண்ணீரை உருவாக்கத் தெரியுமா?
B.V.SUBRAMANI
VASTU CONSULTANT
W.APP / MOB 9884437677

Friday, October 6, 2017

வெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான்......

ஆழ்மனதைப் பற்றி ஓர் ஆய்வு.
நமது ஆழ்மனம் நாம் விரும்பும் எதையும் நமக்கு கொடுக்கவல்லது! மனத்தில் இரண்டு நிலைகள் உண்டு.
1.மேல் மனம் அல்லது வெளிமனம்
2. ஆழ்மனம் ...
மனமென்பது ஆர்டிக் கடலில் மிதக்கும்பனிப் பாறைகளைப் போன்றது. கடலுக்கு மேல் கண்ணுக்குத் தெரிகின்ற 20% பனிப்பாறையைப் போன்றது மேல் மனம். கடலில் மூழ்கியிருக்கின்ற கண்ணுக்குத்த தெரியாத 80% பனிப்பாறையைப் போன்றது ஆழ்மனம்.
மேல்மனத்தை விடப் பல மடங்கு பெரியதும், ஆற்றல் மிக்கதும் ஆழ்மனம் ஆகும்.
மேல்மனம் என்பது விழிப்பு, உணர்வு நிலை எனப்படும். நினைவு நிலைக்கு இதுவே காரணமாகிறது. ஆனால் ஆழ்மனம் துயில் நிலைக்கும், துயிலுக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மெய்மறதி நிலைக்கும் காரணமானது!
நாம் படிப்பதும், பேசுதலும், செயல்படுவதும் மேல் மனத்தின் மூலமாகத்தான், ஆனால் என்ன படிக்கிறோம், ஏன் – எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம், ஏன் – எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம் காரணம் அடிமனம் தான் (ஆழ்மனம்)
எனவே நமது குறிக்கோள்களை நமது அடிமனம் ஏற்றுக்கொள்ளுமாறு எண்ணங்களைச் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது இதுதான்.
1. நமது ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
2. உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன என்பதை ஆழ்மனதிற்கு தெரிவிக்க வேண்டும்.
உங்கள் குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ஆழ்மனம், அந்த குறிக்கோள்களை விரைவில் அடைய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, உடனே உங்களைச் செயல்படுத்த தூண்டும்.
நமது குறிக்கோள்களை ஆழ்மனத்திற்கு எப்படி கொண்டு செல்வது:
1. நமது எண்ணங்கள் எல்லாம் நமது குறிக்கோள்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.
2. ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் (காலையில் 15 நிமிடங்கள்) குறிக்கோளை அடைவதற்கான மனப்பயிற்சியை செய்துவர வேண்டும்.
3. நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்ட குப்பை எண்ணங்களை எண்ணாமல், நமது குறிக்கோளைப் பற்றிய எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்.
உதாரணமாக வீடு வேண்டும் என்றால் அந்த வீட்டில் (கற்பனை வீட்டில்) எத்தனை அறைகள் இருக்க வேண்டும். அதனுடைய அளவுகள் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில் கதவுகள், வர்ணங்கள் என்ன என்பதை பற்றிய கற்பனைகளையே உங்களது எண்ணம் முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும்.
நமது முன்னால் குடியரசுத் தலைவர் திரு ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் கூட இதன் அடிப்படையில் தான் ‘கனவு காணுங்கள்’ என்று சொன்னார்.
4. உங்கள் மனதில் குறிக்கோள் விதையை வலுவாக ஊன்றுங்கள்… அதை உங்களது தீவிர எண்ணங்களால் உரமேற்றுங்கள்.. நிச்சயம் உங்களது குறிக்கோளை அடைந்துவிடுவீர்கள். விதைத்ததையே அறுவடை செய்து விடுவீர்கள் என்பது நிச்சயம்.
5. உங்களது கற்பனையில் உங்களது குறிக்கோளை ஒரு படமாக மாற்றி அதை உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டும். என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து முடிப்பதாக நினக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனில், கற்பனையில் வீடுகட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் செய்து முடித்ததாக எண்ண வேண்டும்.. உங்கள் கற்பனை எண்ணங்கள் மேலோங்கி , எண்ணங்கள் வலுப்பெற்று அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிடும்.
6. குறிக்கோள்களை அடைவதற்கு, தற்காலத்தில் அனுபவிக்கக் கூடிய சிறுசிறு சுகங்களை தியாகம் செய்யவும் தயங்கக் கூடாது.
7. உங்கள் ஆழ்மனத்தை, பிடிவாதத்துடன் நம்ப வைத்துவிடுங்கள். ஆழ்மனம் வெகு சீக்கிரம் உங்கள் குறிக்கோளில் கொண்டு சேர்த்துவிடும்…
8. உங்களது குறிக்கோளை தெளிவாக ஒரு அட்டையில் எழுதி / உங்கள் கண்களில் அடிக்கடி படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் போதெல்லாம், எண்ணங்கள் உங்கள் குறிக்கோளின் மீது குவியட்டும்.
எனவே நாம் நமது குறிக்கோளைத் தெளிவாக ஒரு காலவரையில் முடித்தே தீருவேன் என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
ஆழ்மன எண்ணங்களே ஒருவரின் நிஜங்கள்!
பழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான்.அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி தோல்வியையும், அவன் பலங்கள் பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.
ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது .
நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம்.. அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்..
ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது.
ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.
எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி.
வெற்றி நிச்சயம்!.
B.V.SUBRAMANI
VASTU CONSULTANT
9884437677