Thursday, March 22, 2018

உங்கள் ஆசையின் படைப்பாளி நீங்கள்.

உண்மையில் இங்கே எதுவுமில்லை.
எல்லாம் ஆசையிலும் கனவிலும் இருப்பவை.
உங்கள் ஆசையால் நீங்கள் படைத்தது அது.
உங்கள் ஆசையின் படைப்பாளி நீங்கள்.
பலவாக உள்ள உலகைப் படைத்தது நீங்களே.
ஒரு கார் இருக்கிறது. அழகான கார்தான். ஆனால், இந்தப் பூமியில் மனிதரே இல்லையென்றால், அந்தக் காருக்கு என்னதான் மதிப்பு?
அதைப் பாராட்டப் போவது யார்? அதைப் பற்றிக் கவலைப்படப் போவது யார்?
பறவைகள் அதைப் பார்க்குமா? விலங்குகள் அதைக் கவனிக்குமா? யாரும், எதுவும் கவனிப்பாரற்று அது ஓட்டை உடைசலாய் மாறிவிடும்.
மனிதன் இருந்தால் தான் அதற்கு மதிப்பு.
அந்த மதிப்பு எங்கிருந்து வருகிறது? உங்கள் ஆசையிலிருந்து வருகிறது. நீங்கள் ஆசைப் பட்டால்தான் அதற்கு மரியாதை.
நீங்கள் ஆசைப்படவில்லை என்றால், அதன் மதிப்பீடு மறைந்து விடும். மதிப்பு, அந்தப் பொருளில் இல்லை.
உங்கள் ஆசையில் இருக்கிறது.
பொருளாதாரத்தின் பழைய விதி, "விநியோகம், தேவையைப் பொருத்தே அமைகிறது" என்பது.
இந்த விதி, இப்போது முற்றிலும் மாறி விட்டது. "விநியோகம் செய்யுங்கள். தேவை வந்து விடும்!"
வியாபாரி, புதிய புதிய பொருள்களைக் கண்டுபிடித்து, விளம்பரப்படுத்தி, புதிய ஆசைகளைத் தூண்டிக் கொண்டே இருப்பான்.
ஒவ்வொரு ஆண்டும் புதிய மாதிரி கார்கள், புதிய மாதிரி வீடுகள் தோன்றும். உங்களுக்கும் புதிய இலட்சியங்கள் தோன்றி விடும்.
தொடர்ந்து, நீங்கள் வெளிதிசை நோக்கியே செல்லும் படியான புதிய தேவைகளை, பொருள்களை, உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறார்கள்.
சிந்தித்துப் பார்க்க ஒரு சிறு இடைவெளி கூட அவர்கள் கொடுப்பதில்லை.
--ஓஷோ--
Vastu Consultant
B.V.Subramani
9884437677

Thursday, March 15, 2018

தீப ஆரத்தி எடுப்பது எதற்காக?

நம் வழிபாட்டு முறைகளில் பலவும் காரணம் புரியாத சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் ஆகி விடுகின்றன. அவற்றை அப்படியே நாமும் பின்பற்றுகிறோமே ஒழிய அவற்றில் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளை நாம் உணரத்தவறி விடுகிறோம். உதாரணத்திற்கு கோயில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எடுப்பதை நாம் நாள் தோறும் பார்க்கிறோம் என்றாலும் அது எதற்காக என்றும், ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்றும் நம்மில் பெரும்பாலானோர் அறிவதில்லை.
அதன் உண்மைப் பொருளை இப்போது பார்ப்போம்.
பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று. அதை வட மொழியில் ஷோடச உபசாரா என்று சொல்வார்கள். பூஜை காலத்தில் தீப ஆரத்தி எடுப்பதற்கு முன்பு இறைவன் விக்கிரகத்தின் முன் திரைபோட்டு இருப்பார்கள். அந்தத் திரை மறைப்பதால் நம்மால் இறைவனைக் காண முடியாது. "நான்" என்னும் அறியாமைத் திரை நம்முள் இருக்கும் வரை அதைத் தாண்டி உள்ள எல்லாம் வல்ல இறைவனை நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்பதை அது குறிக்கிறது.அந்தத் திரை விலகினால் மட்டுமே இறைவனைக் காண முடியும். அப்போதும் கூட இறைவன் மிகத் தெளிவாகத் தெரிவது இல்லை.
இறைவனை மிகத் தெளிவாக அறிய ஞானம் என்ற விளக்கு வேண்டும்.
அந்த ஞான விளக்கொளி இருந்தால் தான் இறைவனை முழுமையாகத் தரிசிக்கும் அனுபவம் வாய்க்கும். அந்த ஞான ஒளி தான் தீப ஆரத்தி. நான் என்னும் ஆணவத் திரை விலகிய பின்னர் ஞானத்தின் துணையுடன் இறைவனைக் காண முடியும் என்பதை தீப ஆரத்தி விளக்குகிறது.
திரை விலகுதல், தீப ஆரத்தி காட்டுதல், இருள் நீங்குதல், இறைவனைக் காணல் எல்லாம் ஏக காலத்தில் நிகழ்வது போல ஆணவம் விலகி, ஞானம் பெற்று, அறியாமை நீங்கி, இறைவனை உணர்தல் எல்லாம் ஏக காலத்தில் மனிதன் மனதில் நிகழ வேண்டும் என்பதை தீப ஆரத்தி குறிப்பால் உணர்த்துகிறது.உள்ளத்தில் ஞான விளக்கேற்றுவது குறித்து பத்தாம் திருமுறையில் திருமூலர் மிக அழகாகக் கூறுவார்.
#விளக்கினை_ஏற்றி வெளியை அறிமின்     
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”
இதன் பொருள் உங்களுக்குள் இருக்கும் ஞான விளக்கை ஏற்றி பரஞான வெளியாக இருக்கும் பரம் பொருளை அறியுங்கள்.
அந்த ஞான விளக்கின் முன்னே உங்கள் வேதனைகள் மாறும்.
அந்த ஞான விளக்கை விளங்கிக் கொள்ளும் ஞானம் உடையவர்கள் தாங்களே ஞான விளக்காக விளங்குவார்கள். ஞான விளக்கின் ஒளியின் அனைத்தையும் காணும் போது அறியாமையால் நாம் உணர்கின்ற துன்பங்கள் தானாக மாறி விடும் என்றும் ஞானம் பெற்றவர்கள் தாமாக மற்றவர்களுக்கு ஞான விளக்காக இருந்து வழிகாட்டுவார்கள் என்றும் திருமூலர் விளக்குகிறார்.கற்பூர தீப ஆரத்தியில் இன்னொரு மெய்ஞான உண்மை வலியுறுத்தப் படுகிறது. கற்பூரம் ஏற்றப்படும் போது அது எரிந்து ஒளி கொடுத்து பின் கடைசியில் இருந்த சுவடே இல்லாமல் முடிந்து விடுகிறது.கற்பூரம் நான், எனது என்ற எண்ணங்களால் ஏற்படும் வாசனைகளைக் குறிக்கிறது.இறைவனில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் தன்மையைக் குறிக்கிறது. ஆனால் எல்லாம் இறைவன் என்ற ஞானம் பற்றிக் கொள்ளும் போது மனிதனின் வாசனைகளும், அறியாமையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிய மற்றவர்களுக்கு ஒளி தரும் வாழ்க்கையை மனிதன் வாழ ஆரம்பிக்கிறான். அவன் காலம் முடிந்து விடும் போது அவன் வாசனைகளும் முடிந்து போகின்றன. ஒளிமயமான, உபயோகமான வாழ்க்கை வாழ்ந்து முடித்து இருந்த சுவடில்லாமல் அவன் இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான். இது கற்பூர தீப ஆரத்தி மூலமாக உணர்த்தப்படும் இன்னொரு மாபெரும் தத்துவம்.தீப ஆரத்தியின் முடிவில் தீபத்தின் மேல் நம் கைகளை வைத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு தலையையும் தொட்டுக் கொள்கிறோம். "இந்த ஞான ஒளி என் அகக் கண்களைத் திறக்கட்டும்.என் எண்ணங்களும், நோக்கங்களும், அறிவும் மேன்மையானதாக இருக்கட்டும்." என்ற பாவனையில் செய்யப்படும் செயலே அது. எந்திரத்தனமாகக் கோயிலுக்குச் சென்று தீப ஆரத்தியைக் கண்டு இறைவனை வணங்கி அங்கிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் கிளம்பி விடாமல் மேற்கண்ட தத்துவக் கண்ணோட்டத்தோடு தீப ஆரத்தியைக் கண்டு வணங்குங்கள். அதுவே உண்மையான பயனுள்ள வழிபாட்டு முறை. அப்படி உயர்ந்த பாவனையுடன் வழிபட ஆரம்பிக்கும் போது மிக மேன்மையான ஆன்மிக அனுபவத்தை உணர்வீர்கள்.
உண்மையான வழிபாட்டின் பலனை அடைவீர்கள்!
சரி அப்படியானால் மனிதர்களுக்கும் ஆரத்தி எடுக்கிறார்களே அது எதற்காக என்ற கேள்வி ஒருவர் மனதில் எழுவது இயற்கை.
அதற்கான பதிலையும் பார்ப்போம். புதிதாய் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதியர், குழந்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் தாய், தொலைதூரங்களுக்குச் சென்று வெற்றிகரமாக ஒரு செயலை முடித்து விட்டு வருபவர் முதலானோருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது.அவர்களுக்கு ஆரத்தி எடுப்பது இறைவனுக்கு ஆரத்தி எடுக்கும் முறையில் இருப்பதில்லை. அவர்களுக்கு ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீருடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்து தண்ணீரை சிவப்பாக்கிக் கொள்கிறார்கள். பின் எண்ணெய் தோய்த்த திரியை விளிம்பில் வைத்து தீபமாக்கி ஆரத்தி எடுக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா(aura) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி மணமக்கள், தாய் - சேய் வெற்றியாளர் மீது அதிகம் விழ வாய்ப்பு அதிகம் உள்ளது.
மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு இரண்டிற்கும் விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாக நம் முன்னோர் கண்டிருந்தார்கள் எனவே தான் திருஷ்டி கழிக்கும் சக்தி உள்ள கிருமி நாசினிகளான மஞ்சளையும் சுண்ணாம்பையும் தண்ணீரில் கலந்து திருஷ்டி கழித்து அந்தத் தண்ணீரை வெளியேயே கொட்டி விடுகிறார்கள்.வீட்டினுள் நுழையும் முன்பே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது. எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

VASTU CONSULTANT
B.V.SUBRMANI
9884437677

Tuesday, March 13, 2018

கேட்டவரங்களை அள்ளிதரும் ஸ்ரீபாலாம்பிகை

வெல்லக் கட்டியில் எந்தப் பக்கம் இனிப்பு என்று கேட்பதைப் போலத்தான் சக்தி வழிபாட்டில் எந்த வழிபாடு உயர்ந்தது என்பதும்!அதாவது சக்தியை எந்த உருவில் எப்படி வழிபட்டாலும் அது உள்ளம் நெகிழச் செய்யும் அற்புத ஆராதனைதான்.அந்த வகையில், இந்த பாலா திரிபுரசுந்தரி வழிபாடு.
அருணகிரண ஜாலை: ரஞ்சிதாசாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகாபீதி ஹஸ்தா
இதரகரவராட்யா: புல்ஹ கல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா:
-பாலா திரிபுரசுந்தரி தியானம்
பொதுப் பொருள்: செந்நிறக் கிரணங்களால் சூழப்பட்டவள் பாலா திரிபுரசுந்தரி. கைகளில் அபயமுத்திரையுடன் அக்ஷமாலையையும் புத்தகத்தையும் ஏந்தி அருள்பவள். தாமரைப்பூவில் அமர்ந்து கோலோச்சுபவள். அந்த பாலா தேவி என்னைக் காக்கட்டும்.
இதே தியான சுலோகக் கருத்து தமிழ் துதியான பராசக்தி மாலையிலும் உள்ளது. அது:
செங்கதிராற்றிசை பத்தையும் செம்மை செய் செவ்வுருவும்
அங்கைகள் நான்கில் வரதாப மணியக்கவடம்
துங்க நற்புத்தகம் தாங்கியணீன் செந்தாரணியும்
பங்கய வாசனப் பாலைக் கமலைப் பராசக்தியே.
- அக்ஷமாலைதான் வித்ருத ஜப படீகா. ஜபம் செய்ய ஏற்றது அக்ஷமாலை. அ முதல் க்ஷ வரையிலான 51 மாத்ருகா எழுத்துக்களை தன்னுள் கொண்டதால் அக்ஷமாலை என்று அழைக்கப்படுகிறது.
அம்பிகையை பல வடிவங்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அவற்றில் குழந்தை வடிவமாக பாலா திரிபுரசுந்தரியாக அருளும் வடிவத்தின்
பெருமைகள் சொல்லில் அடங்காதவை. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உற்பத்தியானவன் பண்டன் எனும் அசுரன். ஒரு பெண்ணைத் தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த உற்சாகத்தில் அவன் தேவர்களையும் ஏனையோரையும் துன்புறுத்தினான். அவர்கள் பராசக்தியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு போர்புரிந்து பண்டனை வதைத்தாள். அந்த சரித்திரமே லலிதோபாக்யானம் எனும் பிரசித்தி பெற்ற நூலாக விளங்கி வருகிறது.
பிரம்மாண்ட புராணத்தில் உள்ள லலிதோபாக்யானத்தில் பாலாவின் பெருமையை விளக்கும் 125 சுலோகங்கள் உள்ளன.
பண்டாசுர வதம் நடந்தபோது பண்டாசுரனின் புதல்வர்கள் போருக்கு வந்ததும் அவர்களை வதம் செய்ய பாலாதேவி தோன்றினாள். லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். இப்போதும் ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால் ‘ஸதாநவவர்ஷா’ எனவும் (ஸதா - எப்போதும், நவவர்ஷா - ஒன்பது வயதினள்) வெள்ளை அன்னங்கள் பூட்டிய கர்ணீ ரதத்தில் ஏறி பண்டனின் புதல்வர்களை அழித்ததால் ‘பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா’ எனவும் லலிதா ஸஹஸ்ரம நாமத்தில் வஸின்யாதி வாக்தேவதைகள் இத்தேவியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இந்த வசின்யாதி வாக்தேவதைகள் எட்டு பேர்களே திருமீயச்சூரில் அன்னையின் அருளாணைப்படி லலிதா ஸஹஸ்ரநாமத்தை அரங்கேற்றியவர்கள். காஞ்சி காமாட்சியின் முன் ஆதிசங்கரர் நிறுவிய சக்கரத்தில் அமர்ந்து கருணையுடன் ஆட்சி புரிபவர்கள். சிறு குழந்தையைப் போல விளையாட்டில் ஆசை கொண்டதால் அம்பிகைக்கு பாலா எனும் பெயர் ஏற்பட்டதாக திரிபுரா ரகஸ்யம் எனும் நூல் விளக்குகிறது.
அம்பிகை வழிபாட்டின் உச்சபட்ச வழிபாடான மஹாக்ஷோடஸி தேவிக்கு உள்ள பெருமைகள் யாவும் பாலா லீலா வினோதியான இந்த திரிபுரசுந்தரிக்கும் உண்டு. பாலாதேவியின் திருவருள் கிட்டினால் லலிதாம்பிகையின் திருவருளும் உடனே கிட்டும் என்பது உபாசனா ரகஸ்யம். இந்த பாலா மந்திரம் த்ரைலோக்ய வசகாரிணீ என்று மந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
பட்டத்து இளவரசியான பாலா, அருணகிரண ஜாலங்கள் எனும் இளஞ்சூரியனின் நிறத்தைப் போன்ற தன் மேனியில் பேரொளியால் திக்குத் திசைகளையெல்லாம் செம்மை நிறப்படுத்துகிறாள். லலிதமான பேரழகுடைய பாலா தன் அதிரூப சௌந்தர்யத்தால் அழகாய்ப் பொலிந்து அருள்கிறாள்.
இவள் தன் இடக்கரத்தில் நூலை ஏந்தியிருப்பது சகல வித்யைகளையும் சாதகர்களுக்கு அருளவே. இவள் மறு கரத்தில் கொண்டுள்ள ஜபமாலை, அம்பிகையின் நாமத்தை அனைவரும் ஜபிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே. அபய வரத கரங்கள் பக்தர்களைக் காக்கவும் கேட்ட வரங்களைத் தரவும் தயாராக உள்ளன. நித்ய கல்யாண சீலையான இவள், சகல நலன்களையும் இம்மையில் தந்து, மறுமையில் வீடு பேற்றையும் அளிக்க வல்லவள்.
பட்டுப்பாவாடை, சட்டையுடன், சர்வ ரத்னாலங்காரங்களுடன் நட்சத்திரங்களைப் பழிக்கும் மூக்குத்தியை அணிந்திருக்கிறாள். இதை ‘தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரணபாஸுரா’ எனும் லலிதா ஸஹஸ்ரநாமம் உணர்த்துகிறது. மேலும் அது த்ரயக்ஷரீ, பாலா லீலா விநோதினீ என்று பல்வேறாக பாலாம்பிகையை போற்றுகிறது.
இத்தேவிக்கு நவாவரணம், ஸஹஸ்ர நாமம், கட்க மாலா போன்ற பல்வேறு பூஜை முறைகள் உண்டு. இருப்பினும் பேரன்பால் அவளை வழிபடுவதையே அவள் மிகவும் விரும்புவாள்.
திரிபுரம் என்பதற்கு பல்வேறு பொருட்கள் உண்டு. இவள் மும் மூர்த்திகளுக்கும் மூத்தவள் என்றும் பொருள் கொள்ளலாம். புரை எனில் மூத்தவள் என்று பொருள். மும்மலங்கள், முச்சக்திகள், மூன்று காலங்கள், மூவுலகங்கள் முதலிய மூவகை பிரிவுகளுக்கெல்லாம் இவள் உரியவள் என்பதை கௌடபாத சூத்திர உரை கூறுகின்றது. சந்திர கண்டம், சூரிய கண்டம், அக்கினி கண்டம் என்னும் முப்பிரிவுடைய சக்ரத்திற்கு இவளே தலைவி என்பதை அபிராமி பட்டர்,
பொருந்திய முப்புரை செப்புரை
செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குன்
மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய
அம்பிகை யம்புயமேல்
திருந்திய சுந்தரி பாதமென்
சென்னியதே
-என்று பாடிக் கொண்டாடியுள்ளார்.
இதில் மனோன்மணி என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. மனதை அழித்து ஞான நிலைக்கு அழைத்துச் செல்பவள் என்பது மனோன்மணியின் பொருள். புருவ மத்திக்கு மேலே பிரம்மரந்திரத்திற்கு கீழ் உள்ள பிந்து முதலிய எண்வகை நிலைகளில் இறுதி நிலை உன்மனி எனும் மனோன்மணியாகும். அங்கு உறைவதால் இவளுக்கு மனோன்மணி என்றும் பெயர். பற்றற்ற மனம் இயங்குதல் அற்று நிற்கும் நிலை உன்மனி. அந்நிலையில் அருள்புரிவதால் அம்பிகைக்கு இப்பெயர் ஏற்பட்டது. மனோன்மணி வடிவாய் இயங்குபவள் இந்த பாலாதேவி.
குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்கரங்களில் அம்பிகை பாலாவாகவும் அடுத்த இரண்டு ஆதாரங்களில் தருணியாகவும் அடுத்த இரண்டு ஆதாரங்களில் சுமங்கலியாகவும் ஸஹஸ்ராரத்தில் சுவாசினியாகவும் பூஜிக்கப்படுகிறாள்.
திருமூலர் தன் திருமந்திரத்தில்,
சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்
பத்தியை பாழில் உருத்த அப்பாவிகள்
சுத்திய நாய் போல கதறுகின்றனவே (1199)
-பராசக்தி சாதகர்களுக்கு சாதகமான பாலாவாவாள். அவளே முக்திக்கும் தலைவி. இதை மக்கள் அறியாமலிருக்கிறார்களே என்று
பாடியுள்ளார்.
கருவூர் சித்தர்,
ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு
-என்று பாடியுள்ளார். அம்பிகையை வாலை பெண்ணாக முன் வைத்து அவளது மாயை முதலான கூறுகளை பல வடிவங்களாக்கி அவளை கன்னியாகவும் மன அடக்கத்தை சோதிக்கும் சிவகாமசுந்தரியாகவும் விளையாட்டு வம்புக்காரியாகவும் சித்தரித்துள்ளார்.
கொங்கண சித்தர் அருளிய வாலைகும்மி பிரசித்தி பெற்றது. பாலா நம் உடம்பில் குடி கொண்டுள்ளவள் என்பதை, ‘மானுடக் கோட்டையை பிடித்தனளாம்’ என்கிறார். நாம் தூங்கும் போதும் அவள் நம்மைக் காப்பதையே கடமையாகக் கொண்டவள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவள் பாலா என்கிறார், கொங்கணர்.
ஆழ்வார்கள் காலத்தில் ஒருவர் கூட குருவாயூரப்பனை மங்களாசாஸனம் செய்யவில்லை. ஏனெனில் அக்காலத்தில் குருவாயூரப்பன் கோயில் பாலா க்ஷேத்திரமாக இருந்ததுதான். திருக்கடவூரில் மிருத்யுஞ்ஜய சக்கரத்திற்கு, ‘பாலாசமேத ம்ருத்யுஞ்ஜயாய நமஹ’ என்றே அர்ச்சனை செய்யப்படுகிறது.
இந்த பாலாம்பிகையின் மந்திரத்தில் உள்ள ‘ஐம்’ எனும் வாக்பவ பீஜம், ஜபிப்பவர்களுக்கு சகல வித்யைகளையும் தரும். ‘க்லீம்’ எனும் மன்மத பீஜம், ஜபிப்பவர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும். ‘ஸௌ:’ எனும் சக்தி பீஜம் அம்பிகைக்கு உரியது. அதை ஜபித்தால் தேவியின் பேரருள் கிட்டும்.
ஒரு முழு நிலவு நாளில் குபேரன் அம்பிகையை லலிதா ஸஹஸ்ரநாமத்தால் பூஜித்துக் கொண்டிருந்தான். அப்போது ‘நித்ய யௌவனா’ எனும் நாமம் வந்த போது அந்த நாமத்திற்குரிய அம்பிகையின் திருவுருவைக் காண ஆவல் கொண்டு ஈசனை தியானித்தான். பாரதத்தின் தென் மூலையில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், கன்னியாகுமரி எனும் பெயரில் நித்ய யௌவனா எனும் திருநாமத்திற்குரிய திருவுருவில் அம்பிகையை தரிசிக்கலாம் என்று ஈசன் திருவாய் மலர்ந்தருளினார். உடனே புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்று தேவியை தரிசித்தான் குபேரன்.
திரும்பி வரும் வழியில் காவிரிப்பூம்பட்டினத்தின் அழகில் மயங்கி சிவபூஜைக்கான நேரத்தையும் மறந்து அந்நகரின் அழகில் லயித்தான். பிறகு தன்னிலை உணர்ந்து ஈசனிடம் மன்னிப்பு கேட்க, ‘எந்நகரில் உன் மனம் லயித்ததோ அந்நகரிலேயே வணிகர் குலத்தில் பிறப்பாய். யாமே உமக்கு மகனாவோம்’ என்று சொன்னதோடு, மருதவாணன் எனும் பெயரில் அவருக்கு மகனாகப் பிறந்து, ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்று உணர்த்தி, அந்த வணிகர் குல கோமானை, பட்டினத்தார் ஆக்கினார். அந்த குபேரனைக் கவர்ந்த கன்னியாகுமரி, அம்பிகை பாலாம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். அந்த கன்னியாகுமரியின் மூக்குத்தியும் உலகப்பிரசித்தி பெற்றது.
குமரகுருபரருக்கு பாலா எனும் சிறுகுழந்தை வடிவிலேயே அம்பிகை மீனாட்சி வந்து, அவர் பாடிய மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் கேட்டு மகிழ்ந்து முத்து மாலையை பரிசளித்தது வரலாறு.
பாலா எனில் சிறுமி எனவும் பொருள் உண்டு. பொதுவாகவே சிறுவர்கள் எவரிடமும் பேதமில்லாமல் இருப்பர். தீய எண்ணங்கள் இருக்காது. அதேபோல் சிறுமியாக இருக்கும் இவளும் பக்தர்களுக்கு பேதம் பாராட்டாமல் அருள்வாள். இவளைத் தியானிக்க உடனே மனதில் பிரசன்னமாவாள்; அன்பைப் பொழிவாள்.
சிறுவனாக கண்ணனுடன் சுலபமாகப் பழக முடிந்த குசேலன்,பெரியவனானதும் துவாரகை சென்று வாயிற்காப்போன் அனுமதி பெற்றுத்தான் கண்ணைக் காண முடிந்தது. ஆனால், சிறுவன் பிரஹலாதன் பேதமில்லாமல் எங்கும் நாரணனைக் கண்டதால் அவனை யாராலும் எதனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பால முருகன், பால கிருஷ்ணன், பால ஐயப்பன், பால கணபதி எனத் தெய்வங்களை பால ரூபத்தில் வழிபடுவதால் நமக்கு அவர்கள் அருள் எளிதில் கிட்டும். தேவி பாலா, ஸர்வேஸ்வரி. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். இங்கே தெய்வமே குழந்தையாக வரும்போது கொண்டாட்டத்திற்குக் கேட்கவும் வேண்டுமோ?
இந்த பாலா வழிபாடு ஸ்ரீவித்யையில் மிக முக்கியமானது. அந்த ஸ்ரீவித்யையில் விடாமுயற்சி என்ற வைராக்கிய குணமும் பற்றின்மையும் மிக மிக முக்கியம். அவை இரண்டையும் அஸ்திவாரமாக அமைக்காமல் ஸ்ரீவித்யை எனும் மாளிகையை எழுப்ப முடியாது. குழந்தைகள் ஒரு பொருள் வேண்டும் என்று அழுது ஆகாத்தியம் செய்யும். இது விடாமுயற்சி. அப்பொருள் கிடைத்ததும் அதை பத்திரமாக வைத்துக் கொள்ளாமல் தூக்கி எறிந்து விடும். அது பற்றற்ற நிலை. பாலா வழிபாடு பலமடைந்தால்தான் ஸ்ரீவித்யை பரிபூரணமாக சித்திக்கும். இந்த ஸ்ரீவித்யை எனும் தேவி வழிபாட்டை பெரும்பாலானோர் பாலா மந்திர உபதேசத்துடனே நிறுத்தி விடுவர். எனவே பாலா உபாசனை லகு ஸ்ரீவித்யை என்று போற்றப்படுகிறது. அரக்கோணத்திற்கு அருகில் உள்ள நெமிலியில் பாலா திரிபுரசுந்தரிக்கு தனி ஆலயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாலாம்பிகை உபாசனை புரிபவர்களுக்கு தேவி சொற்திறன், அழியாத செல்வங்களோடு சகல மங்களங்களையும் அருள்வாள் என்பது திண்ணம்

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Saturday, March 3, 2018

பலரும்அறியாதஇந்துகடவுள்களின்_அற்புதங்கள்

1 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

2  ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.

3  தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

4  தாராசுரம் (கும்பகோணம்) ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

5  கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.

6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே  கோட்டையூரில் 
 நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

7  சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )

8  சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.

9  திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்

11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான  வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.

12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

13 ஈரோடு  காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.

14  மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.

16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.

18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது  பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.

19  தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.

20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை

21  தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.

22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி  சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை        செங்குத்தாக    நிற்கிறது.

23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.

24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும்  சுடுவதில்லை.

25  சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.

26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

27  திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில்  பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

28  ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

33 திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.

34  திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

35  சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.  அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.

36.நாகர்கோவில் கேரளபுரம்  சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!   

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…! 

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677