Monday, October 8, 2018

உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கோங்க. நாம கேட்குற கேள்விக்கு டக்கு டக்குன்னு அதுல பதிலை எழுதிட்டு வாங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு போங்க.
அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ஓகே?
1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..
2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களை ஒரு நாலு பேரை சொல்லுங்க பார்க்கலாம்…
3. சர்வதேச அளவுல நடக்குற அழகிப் போட்டிகள்ள ஜெயிச்ச இந்திய பெண்கள் (மிஸ் யூனிவர்ஸ்…மிஸ் வேர்ல்ட் இப்படி) ஒரு நாலு பேரை சொல்லுங்க….
4. #நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேரை சொல்லுங்க…..
5. கடைசியா #ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பேரை சொல்லுங்க பார்க்கலாம்…
உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே?
நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல. அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள். மிகப் பெரிய சாதனையாளர்கள். ஆனால்……? கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன. சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன. விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.
இதோ மற்றொரு வினாடி வினா…
1) *உங்கள் பள்ளிக் காலத்தில் மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று #ஆசிரியர்களை சொல்லுங்கள்*.
2) *உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று #நண்பர்களை சொல்லுங்கள்*…
3) *உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்*…
4) *உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை பட்டியலிடுங்கள்*….
5) *நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்*…
அட… விடைகளை பட் பட்டென்று எழுதிக் குவித்திருப்பீர்களே!!!..
இதிலிருந்து என்ன தெரிகிறது?
உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் பணக்காரர்களோ, புகழ்பெற்றவர்களோ அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல. உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே. மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.
பணம் பட்டம் பதவி இவற்றின் மூலம் பெரும் புகழோ வெற்றியோ நிலையானதல்ல. பிறருக்கு உதவி செய்து, பிறர் மீது அக்கறை கொண்டு ஒருவர் பெறும் புகழே வெற்றியே நிலையானது.
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு, அவர்கள் ஒருவராவது விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்… நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். (கேட்டுப் பாருங்களேன்!)
எனவே அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கவேண்டுமென்றால் ...
#கோவிலுக்கு போய் விழுந்து கும்பிட்டு #கடவுள் மனசுல இடம்பிடிக்கிறது இருக்கட்டும். முதல்ல நம்மை சுத்தி இருக்குற மனுஷங்க மனசுல நமக்கு இடம் இருக்கான்னு முதல்ல பார்ப்போம்*.
*கடவுள் தானா தன் மனசுல இடம் கொடுப்பார்*.
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Friday, July 20, 2018

கபாலீஸ்வரரும் ஆறு சிவாலயங்களும்

புகழ் பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் அருகே,6 பழமையான ,அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இவை அனைத்தும் மைலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும்.
கபாலீஸ்வரரும் ஆறு சிவாலயங்களும்
மயிலாப்பூர் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது, அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்தான். ஆனால், கபாலீஸ்வரர் கோயிலை வழிபடுவதற்கு முன்பாக, மற்ற ஆறு கோயில்களையும் தரிசித்து வழிபட்ட பிறகுதான், நிறைவாக கபாலீஸ்வரர் கோயிலை தரிசித்து வழிபடவேண்டும். ஒரே நாளில் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்பதற்கான வழிமுறைகளையும் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள்.
இந்த ஏழு கோயில்களுமே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஶ்ரீராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த முறையிலேயே நாமும் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்போம்.
காரணீஸ்வரர்
1) ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில்:
இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
12 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஶ்ரீகாரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார். அம்பிகை ஶ்ரீசொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தீர்த்தபாலீஸ்வரர்
2) ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில்:
மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும்.
வெள்ளீஸ்வரர்
3) ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில்:
மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகா விஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.
வழிபடும் முறை
வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாக தலவரலாறு. எனவே, ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். வெள்ளீஸ்வரரை 'கண் டாக்டர்' என்றே கொண்டாடுகிறார்கள்.
விருபாக்ஷீஸ்வரர்
4) ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில்:
மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் நான்காவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சந்நிதியும் சூரியனார் சந்நிதியும் அம்பாளின் சந்நிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது.
வாலீஸ்வரர்
5) ஶ்ரீவாலீஸ்வரர் கோயில்:
‘மயிலாப்பூரின் காவல் தெய்வம்' என்றுகூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஶ்ரீவாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஶ்ரீபெரியநாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். ராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால்தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். 5-வதாக வழிபடவேண்டிய கோயில் இது.
மல்லீஸ்வரர்
6. ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில்:
மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலை)யில் காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஶ்ரீமரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 6-வதாக வழிபடவேண்டிய ஆலயம் இது.
கபாலீஸ்வரர்
7. ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில்:
மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் நிறைவாக தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாக தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர்.
புன்னை மரத்தினடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. மயிலையின் சப்த சிவஸ்தலங்களில் 7-வதாகவும், நிறைவாகவும் தரிசிக்கவேண்டிய தலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்.
இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், 'மயிலையே கயிலை; கயிலையே மயிலை' என்ற சிறப்பைப் பெற்றது போலும்.

VINAYAKAA VASTU
VASTU CONSULTANT
B.V. SUBRAMANI
9884437677

Friday, June 29, 2018

தீங்கு திரும்பி வரும்.நன்மை நான்கு பேரை அழைத்து வரும்.

மிகச்சிறந்த ஆசிரியர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் (தெய்வசிகாமணி) ஆசிரியர்கள் அனைவருக்கும் நனறி

பள்ளி மைதானத்தில் #மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆசிரியர் #தெய்வசிகாமணி அந்தப் பக்கமாக வந்தார். அவர் ஒரு மாற்றுத் திறனாளி.

அவர் தூரமாக வரும்போதே, மாணவன் சுரேஷ், ‘டேய்... அங்க பாருங்கடா யார் வர்றதுன்னு’ என்று கூறிவிட்டு காலில் ஊனம் இருப்பதுபோல நடந்து காட்டினான். மற்ற மாணவர்கள் எல்லாம் சிரித்தனர். ஆசிரியரோ கண்டும் காணாமல் சென்றுவிட்டார். இது வழக்கமாக நடந்து வந்தது.

வீட்டில் ஒரே பையன் என்பதால் சுரேசிற்கு செல்லம் அதிகம். அதனால் அதிகமாக குறும்புகள் செய்வான். பெற்றோரும் அவனைக் கண்டிப்பதில்லை. விளையாட்டுப் பிள்ளையாக இருந்தலும், சுரேஷ் நன்றாகப் படிப்பான். பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பின்னும் அவனது கலாட்டா குறைவில்லை.

ஒரு நாள் கல்லூரிக்குச் சென்று திரும்பிய #சுரேஸ், படுக்கைக்குப் போனான். அசதியில் தூங்கியவன் மறுநாள் எழுந்திருக்கவில்லை. உடலில் ஜூரம் கொதித்தது. உடனே ஆஸ்பித்திரியில் சோர்த்து சிகிச்சை அளித்தனர்.

பக்கவாதம் தாக்கியிருப்பதாக டாக்டர்கள் கூறினர். இறுதியில் ஒரு கால் நடக்க முடியாமல் போய்விட்டது. அதனால் கல்லூரிக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு சுரேஷ் வீட்டிலேயே முடங்கிவிட்டான்.

‘ஆசிரியரை நாம் எப்படியெல்லாம் கேலி செய்தோம். அதற்குச் சரியான தண்டனைதான்’ என்று எண்ணிக் கொண்டான்.

சுரேஷ் நிலையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஆசிரியர் தெய்வசிகாமணி, சுரேஷைப் பார்க்க வீட்டுக்கு வந்தார். படுக்கையில் கிடந்த சுரேஷைப் பார்த்துப் பேசினார்.

‘சுரேஷ், எப்படி துருதுருன்னு விளையாடிக்கிட்டு இருப்பே. இப்போ இப்படி முடங்கிவிட்டாயே. பள்ளியில் படிக்கும்போது நீதான் என்னைக் கேலி செய்யும் மாணவன் என்பது எனக்குத் தெரியும். அது அறியாப் பருவம். எனக்கு உன்மேல் கோபம் கிடையாது.

ஆனால் நீ இப்படி முடங்கிக் கிடப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. உடல் ஊனம் ஒரு குறையே அல்ல. ##மனம் ஊனம் அடைந்தால் தான் ஆபத்து. எனக்கும் உன்போலதான் திடீரென்று இப்படியானது. இதோபார் நான் உன் முன் ஆசிரியராக நிற்கிறேன். உன்னாலும் முடியும். முதலில் நீ வெட்கப்படுவதை விட்டுவிட்டு கல்லூரிக்குச் சென்று படி, மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

நாம் இவரை எவ்வளவோ கேலி செய்திருக்கிறோம். ஆனால் அவர் நம்மை ஊக்கப்படுத்திவிட்டு செல்கிறாரே, என்று எண்ணியவன், ஆசிரியர் தெய்வசிகாமணியை தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவரது அறிவுரைப்படி கல்லூரிக்குச் சென்றான். கல்லூரிப் படிப்புக்குப் பின் ஆசிரியப் படிப்பையும் முடித்தான்.

ஆனால் உடனே வேலை கிடைக்கவில்லை. சிறிது காலம் டயூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தான். ஆசிரியர் தெய்வசிகாமணி, தன் பதவிகாலம் முடிந்ததும் தனது வேலையை சுரேசுக்கு கொடுகக்குமாறு அதிகாரிகளிடம் பரிந்துரைத்து அவ் வேலையை வாங்கிக் கொடுத்தார்.

இப்போது சுரேஷ் அதே பள்ளியில் ஆசிரியராக வேலையில் சோர்ந்தான்.

“ஆசிரியரை கேலி செய்த நினைவுகளும், அவரே குருவாக மாறிப்போன நினைவுகளும் அவன் நெஞ்சில் அவ்வபோது வந்து போகும். ஆனால் இப்போது யாரையும் விளையாட்டுக்கு கூட கேலி செய்வதில்லை.

இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்தால் எல்லா மாணவர்களும் உலகம் போற்றும் நபராக நிச்சயமாக திகழ்வார்கள்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் தங்களது பொற்பாதங்களில் எனது நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன்.

VINYAKAA VASTU
B.V.SUBRAMANI
9884437677

Wednesday, May 16, 2018

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்....

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...நாளும் அது புரிவதில்லை

₹ பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!

₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...

₹ நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....

₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....

₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,மனஅமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

₹ இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ....
அதற்கும் ... "ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .

₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

₹ வேலை இல்லாதவனின் பகலும்,நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

₹ வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...

₹மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...

₹ எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....

₹ இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...

₹ பூனையை விட சிங்கம் வலிமையானது என்று எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

₹ தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!

₹ சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து  உனைசீரழிக்கும் துரோகியைவிட ...
 முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும் எதிரி_மேலானவன் !.....

₹ அவ்வளவு எளிதாக யாரிடமும் இருந்து பிரிந்து விட இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம் ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

₹ உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால் ஒருபோதும் இழந்து விடாதே..

₹ அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது கிடைப்பதில்லை...

₹பேரின்பம் வேண்டாம்...சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........

₹ நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட நம் காதுகளை மூடிக்கொள்வது மிகச் சிறந்தது......

£ வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

£ புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
 மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
 எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!

£ அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....

£ வாழ்வோடு போராடிச் சாவதிலும் சாவோடு போராடி வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!

அருமையான வாக்கியங்கள்........ எனக்கு வந்தவை.......உங்களுடன் பகிர்கிறேன்........

VASTHU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Monday, May 7, 2018

இறைவனிடம் எதை கேட்கவேண்டும்

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தான். வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி  எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ளம்  அவனை நிலை தடுமாற செய்தது.

இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே "ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே யாராவது காப்பாற்றுங்கள்" என்று கதறினான்.
அந்த ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது. உடனே அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி அந்த பணமூட்டையை எப்படியோ மீட்டு எடுத்து கரையை அடைந்தான்.
" இந்த பண மூட்டையை காப்பாற்ற சொல்லி யாரோ கதறினீர்களே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ? நான் உங்கள் பண மூட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சத்தம் போட்டு அழைத்தான். ஆனால் வெகு நேரம் ஆகியும் யாரும் அதை பெற வரவில்லை.

பிறகுதான் அவனுக்கு புரிந்தது, அந்த பண மூட்டைக்கு சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என்று. "ஐயோ பாவம், அந்த பணக்காரர் இந்த பண மூட்டைக்கு பதிலாக தன்னை காப்பாற்றும்படி குரல் கொடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருப்பேனே" என்று அந்த மீனவன் வருந்தினான்.

இப்படிதான் நாமும் நம் தேவைகளை சில நேரங்களில் இறைவனிடம் சரியாக கேட்காமல் வெறும் பணத்தை மட்டுமே கேட்கிறோம். அதனால் பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் உயிருக்கு சமமான நிம்மதியை இழக்க நேரிடுகிறது.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Thursday, March 22, 2018

உங்கள் ஆசையின் படைப்பாளி நீங்கள்.

உண்மையில் இங்கே எதுவுமில்லை.
எல்லாம் ஆசையிலும் கனவிலும் இருப்பவை.
உங்கள் ஆசையால் நீங்கள் படைத்தது அது.
உங்கள் ஆசையின் படைப்பாளி நீங்கள்.
பலவாக உள்ள உலகைப் படைத்தது நீங்களே.
ஒரு கார் இருக்கிறது. அழகான கார்தான். ஆனால், இந்தப் பூமியில் மனிதரே இல்லையென்றால், அந்தக் காருக்கு என்னதான் மதிப்பு?
அதைப் பாராட்டப் போவது யார்? அதைப் பற்றிக் கவலைப்படப் போவது யார்?
பறவைகள் அதைப் பார்க்குமா? விலங்குகள் அதைக் கவனிக்குமா? யாரும், எதுவும் கவனிப்பாரற்று அது ஓட்டை உடைசலாய் மாறிவிடும்.
மனிதன் இருந்தால் தான் அதற்கு மதிப்பு.
அந்த மதிப்பு எங்கிருந்து வருகிறது? உங்கள் ஆசையிலிருந்து வருகிறது. நீங்கள் ஆசைப் பட்டால்தான் அதற்கு மரியாதை.
நீங்கள் ஆசைப்படவில்லை என்றால், அதன் மதிப்பீடு மறைந்து விடும். மதிப்பு, அந்தப் பொருளில் இல்லை.
உங்கள் ஆசையில் இருக்கிறது.
பொருளாதாரத்தின் பழைய விதி, "விநியோகம், தேவையைப் பொருத்தே அமைகிறது" என்பது.
இந்த விதி, இப்போது முற்றிலும் மாறி விட்டது. "விநியோகம் செய்யுங்கள். தேவை வந்து விடும்!"
வியாபாரி, புதிய புதிய பொருள்களைக் கண்டுபிடித்து, விளம்பரப்படுத்தி, புதிய ஆசைகளைத் தூண்டிக் கொண்டே இருப்பான்.
ஒவ்வொரு ஆண்டும் புதிய மாதிரி கார்கள், புதிய மாதிரி வீடுகள் தோன்றும். உங்களுக்கும் புதிய இலட்சியங்கள் தோன்றி விடும்.
தொடர்ந்து, நீங்கள் வெளிதிசை நோக்கியே செல்லும் படியான புதிய தேவைகளை, பொருள்களை, உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறார்கள்.
சிந்தித்துப் பார்க்க ஒரு சிறு இடைவெளி கூட அவர்கள் கொடுப்பதில்லை.
--ஓஷோ--
Vastu Consultant
B.V.Subramani
9884437677

Thursday, March 15, 2018

தீப ஆரத்தி எடுப்பது எதற்காக?

நம் வழிபாட்டு முறைகளில் பலவும் காரணம் புரியாத சடங்குகளாகவும் சம்பிரதாயங்களாகவும் ஆகி விடுகின்றன. அவற்றை அப்படியே நாமும் பின்பற்றுகிறோமே ஒழிய அவற்றில் புதைந்துள்ள ஆழ்ந்த பொருளை நாம் உணரத்தவறி விடுகிறோம். உதாரணத்திற்கு கோயில்களில் இறைவனுக்கு தீப ஆரத்தி எடுப்பதை நாம் நாள் தோறும் பார்க்கிறோம் என்றாலும் அது எதற்காக என்றும், ஆரத்தி எடுப்பதன் பின்னால் உள்ள தத்துவம் என்ன என்றும் நம்மில் பெரும்பாலானோர் அறிவதில்லை.
அதன் உண்மைப் பொருளை இப்போது பார்ப்போம்.
பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று. அதை வட மொழியில் ஷோடச உபசாரா என்று சொல்வார்கள். பூஜை காலத்தில் தீப ஆரத்தி எடுப்பதற்கு முன்பு இறைவன் விக்கிரகத்தின் முன் திரைபோட்டு இருப்பார்கள். அந்தத் திரை மறைப்பதால் நம்மால் இறைவனைக் காண முடியாது. "நான்" என்னும் அறியாமைத் திரை நம்முள் இருக்கும் வரை அதைத் தாண்டி உள்ள எல்லாம் வல்ல இறைவனை நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்பதை அது குறிக்கிறது.அந்தத் திரை விலகினால் மட்டுமே இறைவனைக் காண முடியும். அப்போதும் கூட இறைவன் மிகத் தெளிவாகத் தெரிவது இல்லை.
இறைவனை மிகத் தெளிவாக அறிய ஞானம் என்ற விளக்கு வேண்டும்.
அந்த ஞான விளக்கொளி இருந்தால் தான் இறைவனை முழுமையாகத் தரிசிக்கும் அனுபவம் வாய்க்கும். அந்த ஞான ஒளி தான் தீப ஆரத்தி. நான் என்னும் ஆணவத் திரை விலகிய பின்னர் ஞானத்தின் துணையுடன் இறைவனைக் காண முடியும் என்பதை தீப ஆரத்தி விளக்குகிறது.
திரை விலகுதல், தீப ஆரத்தி காட்டுதல், இருள் நீங்குதல், இறைவனைக் காணல் எல்லாம் ஏக காலத்தில் நிகழ்வது போல ஆணவம் விலகி, ஞானம் பெற்று, அறியாமை நீங்கி, இறைவனை உணர்தல் எல்லாம் ஏக காலத்தில் மனிதன் மனதில் நிகழ வேண்டும் என்பதை தீப ஆரத்தி குறிப்பால் உணர்த்துகிறது.உள்ளத்தில் ஞான விளக்கேற்றுவது குறித்து பத்தாம் திருமுறையில் திருமூலர் மிக அழகாகக் கூறுவார்.
#விளக்கினை_ஏற்றி வெளியை அறிமின்     
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”
இதன் பொருள் உங்களுக்குள் இருக்கும் ஞான விளக்கை ஏற்றி பரஞான வெளியாக இருக்கும் பரம் பொருளை அறியுங்கள்.
அந்த ஞான விளக்கின் முன்னே உங்கள் வேதனைகள் மாறும்.
அந்த ஞான விளக்கை விளங்கிக் கொள்ளும் ஞானம் உடையவர்கள் தாங்களே ஞான விளக்காக விளங்குவார்கள். ஞான விளக்கின் ஒளியின் அனைத்தையும் காணும் போது அறியாமையால் நாம் உணர்கின்ற துன்பங்கள் தானாக மாறி விடும் என்றும் ஞானம் பெற்றவர்கள் தாமாக மற்றவர்களுக்கு ஞான விளக்காக இருந்து வழிகாட்டுவார்கள் என்றும் திருமூலர் விளக்குகிறார்.கற்பூர தீப ஆரத்தியில் இன்னொரு மெய்ஞான உண்மை வலியுறுத்தப் படுகிறது. கற்பூரம் ஏற்றப்படும் போது அது எரிந்து ஒளி கொடுத்து பின் கடைசியில் இருந்த சுவடே இல்லாமல் முடிந்து விடுகிறது.கற்பூரம் நான், எனது என்ற எண்ணங்களால் ஏற்படும் வாசனைகளைக் குறிக்கிறது.இறைவனில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் தன்மையைக் குறிக்கிறது. ஆனால் எல்லாம் இறைவன் என்ற ஞானம் பற்றிக் கொள்ளும் போது மனிதனின் வாசனைகளும், அறியாமையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிய மற்றவர்களுக்கு ஒளி தரும் வாழ்க்கையை மனிதன் வாழ ஆரம்பிக்கிறான். அவன் காலம் முடிந்து விடும் போது அவன் வாசனைகளும் முடிந்து போகின்றன. ஒளிமயமான, உபயோகமான வாழ்க்கை வாழ்ந்து முடித்து இருந்த சுவடில்லாமல் அவன் இறைவனுடன் ஐக்கியமாகி விடுகிறான். இது கற்பூர தீப ஆரத்தி மூலமாக உணர்த்தப்படும் இன்னொரு மாபெரும் தத்துவம்.தீப ஆரத்தியின் முடிவில் தீபத்தின் மேல் நம் கைகளை வைத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு தலையையும் தொட்டுக் கொள்கிறோம். "இந்த ஞான ஒளி என் அகக் கண்களைத் திறக்கட்டும்.என் எண்ணங்களும், நோக்கங்களும், அறிவும் மேன்மையானதாக இருக்கட்டும்." என்ற பாவனையில் செய்யப்படும் செயலே அது. எந்திரத்தனமாகக் கோயிலுக்குச் சென்று தீப ஆரத்தியைக் கண்டு இறைவனை வணங்கி அங்கிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் கிளம்பி விடாமல் மேற்கண்ட தத்துவக் கண்ணோட்டத்தோடு தீப ஆரத்தியைக் கண்டு வணங்குங்கள். அதுவே உண்மையான பயனுள்ள வழிபாட்டு முறை. அப்படி உயர்ந்த பாவனையுடன் வழிபட ஆரம்பிக்கும் போது மிக மேன்மையான ஆன்மிக அனுபவத்தை உணர்வீர்கள்.
உண்மையான வழிபாட்டின் பலனை அடைவீர்கள்!
சரி அப்படியானால் மனிதர்களுக்கும் ஆரத்தி எடுக்கிறார்களே அது எதற்காக என்ற கேள்வி ஒருவர் மனதில் எழுவது இயற்கை.
அதற்கான பதிலையும் பார்ப்போம். புதிதாய் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் தம்பதியர், குழந்தை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் தாய், தொலைதூரங்களுக்குச் சென்று வெற்றிகரமாக ஒரு செயலை முடித்து விட்டு வருபவர் முதலானோருக்கு ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் இருக்கிறது.அவர்களுக்கு ஆரத்தி எடுப்பது இறைவனுக்கு ஆரத்தி எடுக்கும் முறையில் இருப்பதில்லை. அவர்களுக்கு ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீருடன் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்து தண்ணீரை சிவப்பாக்கிக் கொள்கிறார்கள். பின் எண்ணெய் தோய்த்த திரியை விளிம்பில் வைத்து தீபமாக்கி ஆரத்தி எடுக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா(aura) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி மணமக்கள், தாய் - சேய் வெற்றியாளர் மீது அதிகம் விழ வாய்ப்பு அதிகம் உள்ளது.
மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு இரண்டிற்கும் விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதாக நம் முன்னோர் கண்டிருந்தார்கள் எனவே தான் திருஷ்டி கழிக்கும் சக்தி உள்ள கிருமி நாசினிகளான மஞ்சளையும் சுண்ணாம்பையும் தண்ணீரில் கலந்து திருஷ்டி கழித்து அந்தத் தண்ணீரை வெளியேயே கொட்டி விடுகிறார்கள்.வீட்டினுள் நுழையும் முன்பே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது. எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

VASTU CONSULTANT
B.V.SUBRMANI
9884437677

Tuesday, March 13, 2018

கேட்டவரங்களை அள்ளிதரும் ஸ்ரீபாலாம்பிகை

வெல்லக் கட்டியில் எந்தப் பக்கம் இனிப்பு என்று கேட்பதைப் போலத்தான் சக்தி வழிபாட்டில் எந்த வழிபாடு உயர்ந்தது என்பதும்!அதாவது சக்தியை எந்த உருவில் எப்படி வழிபட்டாலும் அது உள்ளம் நெகிழச் செய்யும் அற்புத ஆராதனைதான்.அந்த வகையில், இந்த பாலா திரிபுரசுந்தரி வழிபாடு.
அருணகிரண ஜாலை: ரஞ்சிதாசாவகாசா
வித்ருத ஜப படீகா புஸ்தகாபீதி ஹஸ்தா
இதரகரவராட்யா: புல்ஹ கல்ஹார ஸம்ஸ்தா
நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா:
-பாலா திரிபுரசுந்தரி தியானம்
பொதுப் பொருள்: செந்நிறக் கிரணங்களால் சூழப்பட்டவள் பாலா திரிபுரசுந்தரி. கைகளில் அபயமுத்திரையுடன் அக்ஷமாலையையும் புத்தகத்தையும் ஏந்தி அருள்பவள். தாமரைப்பூவில் அமர்ந்து கோலோச்சுபவள். அந்த பாலா தேவி என்னைக் காக்கட்டும்.
இதே தியான சுலோகக் கருத்து தமிழ் துதியான பராசக்தி மாலையிலும் உள்ளது. அது:
செங்கதிராற்றிசை பத்தையும் செம்மை செய் செவ்வுருவும்
அங்கைகள் நான்கில் வரதாப மணியக்கவடம்
துங்க நற்புத்தகம் தாங்கியணீன் செந்தாரணியும்
பங்கய வாசனப் பாலைக் கமலைப் பராசக்தியே.
- அக்ஷமாலைதான் வித்ருத ஜப படீகா. ஜபம் செய்ய ஏற்றது அக்ஷமாலை. அ முதல் க்ஷ வரையிலான 51 மாத்ருகா எழுத்துக்களை தன்னுள் கொண்டதால் அக்ஷமாலை என்று அழைக்கப்படுகிறது.
அம்பிகையை பல வடிவங்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அவற்றில் குழந்தை வடிவமாக பாலா திரிபுரசுந்தரியாக அருளும் வடிவத்தின்
பெருமைகள் சொல்லில் அடங்காதவை. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உற்பத்தியானவன் பண்டன் எனும் அசுரன். ஒரு பெண்ணைத் தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த உற்சாகத்தில் அவன் தேவர்களையும் ஏனையோரையும் துன்புறுத்தினான். அவர்கள் பராசக்தியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு போர்புரிந்து பண்டனை வதைத்தாள். அந்த சரித்திரமே லலிதோபாக்யானம் எனும் பிரசித்தி பெற்ற நூலாக விளங்கி வருகிறது.
பிரம்மாண்ட புராணத்தில் உள்ள லலிதோபாக்யானத்தில் பாலாவின் பெருமையை விளக்கும் 125 சுலோகங்கள் உள்ளன.
பண்டாசுர வதம் நடந்தபோது பண்டாசுரனின் புதல்வர்கள் போருக்கு வந்ததும் அவர்களை வதம் செய்ய பாலாதேவி தோன்றினாள். லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். இப்போதும் ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால் ‘ஸதாநவவர்ஷா’ எனவும் (ஸதா - எப்போதும், நவவர்ஷா - ஒன்பது வயதினள்) வெள்ளை அன்னங்கள் பூட்டிய கர்ணீ ரதத்தில் ஏறி பண்டனின் புதல்வர்களை அழித்ததால் ‘பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா’ எனவும் லலிதா ஸஹஸ்ரம நாமத்தில் வஸின்யாதி வாக்தேவதைகள் இத்தேவியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இந்த வசின்யாதி வாக்தேவதைகள் எட்டு பேர்களே திருமீயச்சூரில் அன்னையின் அருளாணைப்படி லலிதா ஸஹஸ்ரநாமத்தை அரங்கேற்றியவர்கள். காஞ்சி காமாட்சியின் முன் ஆதிசங்கரர் நிறுவிய சக்கரத்தில் அமர்ந்து கருணையுடன் ஆட்சி புரிபவர்கள். சிறு குழந்தையைப் போல விளையாட்டில் ஆசை கொண்டதால் அம்பிகைக்கு பாலா எனும் பெயர் ஏற்பட்டதாக திரிபுரா ரகஸ்யம் எனும் நூல் விளக்குகிறது.
அம்பிகை வழிபாட்டின் உச்சபட்ச வழிபாடான மஹாக்ஷோடஸி தேவிக்கு உள்ள பெருமைகள் யாவும் பாலா லீலா வினோதியான இந்த திரிபுரசுந்தரிக்கும் உண்டு. பாலாதேவியின் திருவருள் கிட்டினால் லலிதாம்பிகையின் திருவருளும் உடனே கிட்டும் என்பது உபாசனா ரகஸ்யம். இந்த பாலா மந்திரம் த்ரைலோக்ய வசகாரிணீ என்று மந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
பட்டத்து இளவரசியான பாலா, அருணகிரண ஜாலங்கள் எனும் இளஞ்சூரியனின் நிறத்தைப் போன்ற தன் மேனியில் பேரொளியால் திக்குத் திசைகளையெல்லாம் செம்மை நிறப்படுத்துகிறாள். லலிதமான பேரழகுடைய பாலா தன் அதிரூப சௌந்தர்யத்தால் அழகாய்ப் பொலிந்து அருள்கிறாள்.
இவள் தன் இடக்கரத்தில் நூலை ஏந்தியிருப்பது சகல வித்யைகளையும் சாதகர்களுக்கு அருளவே. இவள் மறு கரத்தில் கொண்டுள்ள ஜபமாலை, அம்பிகையின் நாமத்தை அனைவரும் ஜபிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே. அபய வரத கரங்கள் பக்தர்களைக் காக்கவும் கேட்ட வரங்களைத் தரவும் தயாராக உள்ளன. நித்ய கல்யாண சீலையான இவள், சகல நலன்களையும் இம்மையில் தந்து, மறுமையில் வீடு பேற்றையும் அளிக்க வல்லவள்.
பட்டுப்பாவாடை, சட்டையுடன், சர்வ ரத்னாலங்காரங்களுடன் நட்சத்திரங்களைப் பழிக்கும் மூக்குத்தியை அணிந்திருக்கிறாள். இதை ‘தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரணபாஸுரா’ எனும் லலிதா ஸஹஸ்ரநாமம் உணர்த்துகிறது. மேலும் அது த்ரயக்ஷரீ, பாலா லீலா விநோதினீ என்று பல்வேறாக பாலாம்பிகையை போற்றுகிறது.
இத்தேவிக்கு நவாவரணம், ஸஹஸ்ர நாமம், கட்க மாலா போன்ற பல்வேறு பூஜை முறைகள் உண்டு. இருப்பினும் பேரன்பால் அவளை வழிபடுவதையே அவள் மிகவும் விரும்புவாள்.
திரிபுரம் என்பதற்கு பல்வேறு பொருட்கள் உண்டு. இவள் மும் மூர்த்திகளுக்கும் மூத்தவள் என்றும் பொருள் கொள்ளலாம். புரை எனில் மூத்தவள் என்று பொருள். மும்மலங்கள், முச்சக்திகள், மூன்று காலங்கள், மூவுலகங்கள் முதலிய மூவகை பிரிவுகளுக்கெல்லாம் இவள் உரியவள் என்பதை கௌடபாத சூத்திர உரை கூறுகின்றது. சந்திர கண்டம், சூரிய கண்டம், அக்கினி கண்டம் என்னும் முப்பிரிவுடைய சக்ரத்திற்கு இவளே தலைவி என்பதை அபிராமி பட்டர்,
பொருந்திய முப்புரை செப்புரை
செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குன்
மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமுதாக்கிய
அம்பிகை யம்புயமேல்
திருந்திய சுந்தரி பாதமென்
சென்னியதே
-என்று பாடிக் கொண்டாடியுள்ளார்.
இதில் மனோன்மணி என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. மனதை அழித்து ஞான நிலைக்கு அழைத்துச் செல்பவள் என்பது மனோன்மணியின் பொருள். புருவ மத்திக்கு மேலே பிரம்மரந்திரத்திற்கு கீழ் உள்ள பிந்து முதலிய எண்வகை நிலைகளில் இறுதி நிலை உன்மனி எனும் மனோன்மணியாகும். அங்கு உறைவதால் இவளுக்கு மனோன்மணி என்றும் பெயர். பற்றற்ற மனம் இயங்குதல் அற்று நிற்கும் நிலை உன்மனி. அந்நிலையில் அருள்புரிவதால் அம்பிகைக்கு இப்பெயர் ஏற்பட்டது. மனோன்மணி வடிவாய் இயங்குபவள் இந்த பாலாதேவி.
குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்கரங்களில் அம்பிகை பாலாவாகவும் அடுத்த இரண்டு ஆதாரங்களில் தருணியாகவும் அடுத்த இரண்டு ஆதாரங்களில் சுமங்கலியாகவும் ஸஹஸ்ராரத்தில் சுவாசினியாகவும் பூஜிக்கப்படுகிறாள்.
திருமூலர் தன் திருமந்திரத்தில்,
சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்
பத்தியை பாழில் உருத்த அப்பாவிகள்
சுத்திய நாய் போல கதறுகின்றனவே (1199)
-பராசக்தி சாதகர்களுக்கு சாதகமான பாலாவாவாள். அவளே முக்திக்கும் தலைவி. இதை மக்கள் அறியாமலிருக்கிறார்களே என்று
பாடியுள்ளார்.
கருவூர் சித்தர்,
ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சரியம் மெத்த மெத்த அதுதான் பாரு
-என்று பாடியுள்ளார். அம்பிகையை வாலை பெண்ணாக முன் வைத்து அவளது மாயை முதலான கூறுகளை பல வடிவங்களாக்கி அவளை கன்னியாகவும் மன அடக்கத்தை சோதிக்கும் சிவகாமசுந்தரியாகவும் விளையாட்டு வம்புக்காரியாகவும் சித்தரித்துள்ளார்.
கொங்கண சித்தர் அருளிய வாலைகும்மி பிரசித்தி பெற்றது. பாலா நம் உடம்பில் குடி கொண்டுள்ளவள் என்பதை, ‘மானுடக் கோட்டையை பிடித்தனளாம்’ என்கிறார். நாம் தூங்கும் போதும் அவள் நம்மைக் காப்பதையே கடமையாகக் கொண்டவள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவள் பாலா என்கிறார், கொங்கணர்.
ஆழ்வார்கள் காலத்தில் ஒருவர் கூட குருவாயூரப்பனை மங்களாசாஸனம் செய்யவில்லை. ஏனெனில் அக்காலத்தில் குருவாயூரப்பன் கோயில் பாலா க்ஷேத்திரமாக இருந்ததுதான். திருக்கடவூரில் மிருத்யுஞ்ஜய சக்கரத்திற்கு, ‘பாலாசமேத ம்ருத்யுஞ்ஜயாய நமஹ’ என்றே அர்ச்சனை செய்யப்படுகிறது.
இந்த பாலாம்பிகையின் மந்திரத்தில் உள்ள ‘ஐம்’ எனும் வாக்பவ பீஜம், ஜபிப்பவர்களுக்கு சகல வித்யைகளையும் தரும். ‘க்லீம்’ எனும் மன்மத பீஜம், ஜபிப்பவர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும். ‘ஸௌ:’ எனும் சக்தி பீஜம் அம்பிகைக்கு உரியது. அதை ஜபித்தால் தேவியின் பேரருள் கிட்டும்.
ஒரு முழு நிலவு நாளில் குபேரன் அம்பிகையை லலிதா ஸஹஸ்ரநாமத்தால் பூஜித்துக் கொண்டிருந்தான். அப்போது ‘நித்ய யௌவனா’ எனும் நாமம் வந்த போது அந்த நாமத்திற்குரிய அம்பிகையின் திருவுருவைக் காண ஆவல் கொண்டு ஈசனை தியானித்தான். பாரதத்தின் தென் மூலையில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், கன்னியாகுமரி எனும் பெயரில் நித்ய யௌவனா எனும் திருநாமத்திற்குரிய திருவுருவில் அம்பிகையை தரிசிக்கலாம் என்று ஈசன் திருவாய் மலர்ந்தருளினார். உடனே புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்று தேவியை தரிசித்தான் குபேரன்.
திரும்பி வரும் வழியில் காவிரிப்பூம்பட்டினத்தின் அழகில் மயங்கி சிவபூஜைக்கான நேரத்தையும் மறந்து அந்நகரின் அழகில் லயித்தான். பிறகு தன்னிலை உணர்ந்து ஈசனிடம் மன்னிப்பு கேட்க, ‘எந்நகரில் உன் மனம் லயித்ததோ அந்நகரிலேயே வணிகர் குலத்தில் பிறப்பாய். யாமே உமக்கு மகனாவோம்’ என்று சொன்னதோடு, மருதவாணன் எனும் பெயரில் அவருக்கு மகனாகப் பிறந்து, ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’ என்று உணர்த்தி, அந்த வணிகர் குல கோமானை, பட்டினத்தார் ஆக்கினார். அந்த குபேரனைக் கவர்ந்த கன்னியாகுமரி, அம்பிகை பாலாம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். அந்த கன்னியாகுமரியின் மூக்குத்தியும் உலகப்பிரசித்தி பெற்றது.
குமரகுருபரருக்கு பாலா எனும் சிறுகுழந்தை வடிவிலேயே அம்பிகை மீனாட்சி வந்து, அவர் பாடிய மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் கேட்டு மகிழ்ந்து முத்து மாலையை பரிசளித்தது வரலாறு.
பாலா எனில் சிறுமி எனவும் பொருள் உண்டு. பொதுவாகவே சிறுவர்கள் எவரிடமும் பேதமில்லாமல் இருப்பர். தீய எண்ணங்கள் இருக்காது. அதேபோல் சிறுமியாக இருக்கும் இவளும் பக்தர்களுக்கு பேதம் பாராட்டாமல் அருள்வாள். இவளைத் தியானிக்க உடனே மனதில் பிரசன்னமாவாள்; அன்பைப் பொழிவாள்.
சிறுவனாக கண்ணனுடன் சுலபமாகப் பழக முடிந்த குசேலன்,பெரியவனானதும் துவாரகை சென்று வாயிற்காப்போன் அனுமதி பெற்றுத்தான் கண்ணைக் காண முடிந்தது. ஆனால், சிறுவன் பிரஹலாதன் பேதமில்லாமல் எங்கும் நாரணனைக் கண்டதால் அவனை யாராலும் எதனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பால முருகன், பால கிருஷ்ணன், பால ஐயப்பன், பால கணபதி எனத் தெய்வங்களை பால ரூபத்தில் வழிபடுவதால் நமக்கு அவர்கள் அருள் எளிதில் கிட்டும். தேவி பாலா, ஸர்வேஸ்வரி. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். இங்கே தெய்வமே குழந்தையாக வரும்போது கொண்டாட்டத்திற்குக் கேட்கவும் வேண்டுமோ?
இந்த பாலா வழிபாடு ஸ்ரீவித்யையில் மிக முக்கியமானது. அந்த ஸ்ரீவித்யையில் விடாமுயற்சி என்ற வைராக்கிய குணமும் பற்றின்மையும் மிக மிக முக்கியம். அவை இரண்டையும் அஸ்திவாரமாக அமைக்காமல் ஸ்ரீவித்யை எனும் மாளிகையை எழுப்ப முடியாது. குழந்தைகள் ஒரு பொருள் வேண்டும் என்று அழுது ஆகாத்தியம் செய்யும். இது விடாமுயற்சி. அப்பொருள் கிடைத்ததும் அதை பத்திரமாக வைத்துக் கொள்ளாமல் தூக்கி எறிந்து விடும். அது பற்றற்ற நிலை. பாலா வழிபாடு பலமடைந்தால்தான் ஸ்ரீவித்யை பரிபூரணமாக சித்திக்கும். இந்த ஸ்ரீவித்யை எனும் தேவி வழிபாட்டை பெரும்பாலானோர் பாலா மந்திர உபதேசத்துடனே நிறுத்தி விடுவர். எனவே பாலா உபாசனை லகு ஸ்ரீவித்யை என்று போற்றப்படுகிறது. அரக்கோணத்திற்கு அருகில் உள்ள நெமிலியில் பாலா திரிபுரசுந்தரிக்கு தனி ஆலயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாலாம்பிகை உபாசனை புரிபவர்களுக்கு தேவி சொற்திறன், அழியாத செல்வங்களோடு சகல மங்களங்களையும் அருள்வாள் என்பது திண்ணம்

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Saturday, March 3, 2018

பலரும்அறியாதஇந்துகடவுள்களின்_அற்புதங்கள்

1 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

2  ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.

3  தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

4  தாராசுரம் (கும்பகோணம்) ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

5  கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.

6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே  கோட்டையூரில் 
 நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

7  சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )

8  சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.

9  திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்

11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான  வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.

12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

13 ஈரோடு  காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.

14  மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.

16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.

18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது  பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.

19  தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.

20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை

21  தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.

22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி  சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை        செங்குத்தாக    நிற்கிறது.

23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.

24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும்  சுடுவதில்லை.

25  சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.

26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

27  திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில்  பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

28  ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

33 திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது.

34  திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

35  சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.  அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.

36.நாகர்கோவில் கேரளபுரம்  சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!   

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…! 

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Tuesday, February 20, 2018

ஆன்மிகம் என்றால்...

அருமையான உரையாடல் படித்து பாருங்கள் ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .உடனே புறப்பட்டான் .போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான் அவர் கேட்டார் .
" எங்கே போகிறாய் ?"
" கடவுளை காண போகிறேன் !"
" எங்கே ? "
" கோவிலில் !"
" அங்கே போய் ........"
" அவரை வழிபட போகிறேன் ! "
" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"
" தெரியாது "
" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"
" அப்படியென்றால் "
" உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "
அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான் ஞானி தெளிவு படுத்தினார்
" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் .தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "
" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."
" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"
" அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"
" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"
" அதற்க்கு வழி ?"
" தியானம்"
" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?
" இல்லை "
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :
" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் .உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே  வந்தார் .ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .தன்னுடைய தேவையை சொன்னார் :
" I WANT PEACE"
ஞானி சொன்னார்:
" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !" எனக் கூற , வந்தவர் யோசித்தார் .
' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !
' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கே வந்தான் ." சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !"
" எப்படி அது ?"
" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !
ஞானி கேட்டார்
" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"
" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"
உற்சாகமாக சொன்னான் .
" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"
"இல்லை "
" அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"
" யார் அவர் "
" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"
வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் ." சரி , சுவாமி . நான் வர்றேன் !"
சோர்வோடு நடந்து போனான் .அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .ஞானி கேட்டார் :
" எங்கே போகிறாய் ? "
" வீட்டுக்கு !"
" கோவிலுக்கு போகவில்லையா ?"
" இல்லை "
" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"
" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "
ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .
" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் நான்,என்னிடம் என்ற அகந்தையில் இருந்து விலகியிருக்கிறீர்களோ ,
அவ்வளவு தூரம் நெருங்கி இருக்கிறீர்கள் என்பது பொருள்.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Saturday, February 17, 2018

நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள்.

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார்.  பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.
உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளையிட்டான்.அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.உடனே அரசன் தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது, இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.
“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.
அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?” என அரசன் கேட்டான்.
அரசன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.
இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Saturday, February 10, 2018

மகா சிவராத்திரி விழா தோன்றிய தலம் திருவண்ணாமலை



மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த வருடம் மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று மாத சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் மட்டும் சிவராத்திரி, மகா சிவராத்திரி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபடுவார்கள். உலகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
மகிமை மிக்க இந்த மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது.
விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டையைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார். அந்த நெருப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.
அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் “எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்” என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்புப் பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.
பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறேன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை. இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற்சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிடம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.
ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார்.
நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான்.... நெருப்புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமான் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.
விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலராவாய் என்றும் சாபமிட்டார்.
இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்துதான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.
இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் “லிங்கோத்பவர்” வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவராத்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி விழா தோன்றிய தலமும் திருவண்ணாமலையே.
திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்குப் பரவியது.
சிவபெருமானுக்குரிய முக்கிய 25 வடிவங்களில் முதலாவது அமைவது லிங்கோத்பவர் வடிவம்தான். லிங்கம் என்பது சிவ வடிவம். அந்த லிங்கத்தில் இருந்து தோன்றிய உருவம்தான் லிங்கோத்பவர். அதாவது லிங்கத்துக்கு தலை, கை, கால் முளைத்தால் கிடைக்கும் உருவம்தான் லிங்கோத்பவர்.
சிவபெருமான் முதலில் உருவம் இல்லாமல் அருவமாகத்தான் இருந்தார். ஆனால் உலக உயிர்கள் முன்பு தோன்ற நினைத்தபோது அருவுருவாகவும், பிறகு உருவமாகவும் தோன்றினார். அருவத்துக்கும், உருவத்துக்கும் இடையில் நின்றதே அருவுருவமாகும். இதுதான் திருவண்ணாமலையில் நெருப்புப் பிழம்பாக நின்ற லிங்கோத்பவர் உருவமாகும். எனவேதான் திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் வழிபாடு, மிக, மிக சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதை காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
பொதுவாக லிங்கோத்பவரை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். மலையில் இருட்டத் தொடங்கும் நேரத்தில் இவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் நமது ஆணவம், அகந்தை எல்லாம் ஓடோடி விடும்.
மகாசிவராத்திரி நாளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களில் மூன்றாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அருவுருவமாக லிங்கோத்பவர் அருள்பாவித்த காலமாக இதை சொல்கிறார்கள்.
ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் மகா சிவராத்திரியின் இரண்டாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கோத்பவர் முதன் முதலில் திருவண்ணாமலையில் தோன்றியவர் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் மற்ற தலங்களுக்கு முன்பாக இரண்டாம் ஜாமத்திலேயே திருவண்ணாமலையில் பூஜைகள் நடத்தப்படுவதாக ரமேஷ் குருக்கள் தெரிவித்தார்.
உலக உயிர்கள் “நான்”, “எனது” என்பன போன்ற ஆணவம், அகந்தை கொள்ளாமல், தானும் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறு அணுவே என்பதை உணர்ந்து புரிந்து கொள்வதே லிங்கோத்பவர் வடிவத்தின் தத்துவமாக உள்ளது. இந்த வடிவை வழிபட்டால் உடல் நலமும், மோட்ச பிராப்தமும் கிடைக்கும். எனவேதான் இந்த வழிபாட்டை, “மோட்ச பிரதாயினி” என்று சொல்கிறார்கள்.
லிங்கோத்பவர் பூஜையின்போது மட்டும் சுவாமிக்கு நெய்பூசி, வெண்ணீர் அபிஷேகம் செய்து, பிறகு கம்பளி போர்த்தி தாழம்பூ சூட்டுவார்கள். இந்த ஒரு காலத்தில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ அணிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மகா சிவராத்திரியன்று இந்த பூஜையை நேரில் பார்த்து தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கெல்லாம் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்படும். பிறகு தங்கக்கவசம் அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெறும்.
அன்றிரவு 4 ஜாம பூஜைகள் நடத்துவார்கள். இரவு 7 மணிக்கு முதல் ஜாம பூஜை, 11 மணிக்கு இரண்டாம் ஜாம பூஜை நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் ஜாம பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் ஜாம பூஜை நடத்துவார்கள்.
இதில் இரவு 11 மணி முதல் 1 மணி வரையிலான இரண்டாம் ஜாம பூஜை லிங்கோத்பவருக்கான பூஜையாக நடைபெறும். அடி, முடி காண முடியாதபடி சிவபெருமான் நெருப்புப் பிழம்பாக நின்ற நேரம் அது. எனவே இந்த நேரத்தில் லிங்கோத்பவரை வழிபாடு செய்வதும், கிரிவலம் வருவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்காக இரவு முழுவதும் பன்னிரு திருமுறை இசைக் கச்சேரி நடைபெறும். ராஜகோபுரம் அருகே 108 தவில், நாதஸ்வர வித்வான்களின் கச்சேரி நடக்கும்.
கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வைப்பார்கள். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் லட்சதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரி தினத்தன்று லட்ச தீபத்தை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அது மட்டுமல்ல, கிரிவலம் வரும் பக்தர்கள், மகாசிவராத்திரி தினத்தில் மட்டும் வில்வ கூடையை ஏந்தியபடி கிரிவலம் செல்வது வித்தியாசமாக இருக்கும். நெருப்பு மலையாக இருக்கும் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்த பக்தர்கள் கூடை, கூடையாக வில்வம் எடுத்துச் செல்கிறார்கள் என்பது ஐதீகமாகும். சிவராத்திரி கிரிவலம் காரியசித்தி தரும் என்பார்கள்.
சிவபெருமான் நெருப்பு மலையாக உருவெடுத்தது பற்றி பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழக்கூடும். கார்த்திகை தீபத்தன்றுதானே ஈசன் நெருப்பு உருவில் தோன்றினார் என்று நினைக்கலாம்.
உண்மையில் சிவபெருமான் திருவண்ணாமலையில் இரண்டு தடவை ஜோதி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மாசி மாதம் விஷ்ணு, பிரம்மாவின் ஆணவத்தையும், அகந்தையையும் விரட்ட நெருப்புப் பிழம்பாக வந்தார். கார்த்திகை மாதம் அம்பாளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தப்போது ஜோதிச்சுடராக வந்தார். முதல் ஜோதி தரிசனத்துக்கும் இரண்டாம் ஜோதி தரிசனத்துக்கும் வித்தியாசம் உள்ளதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாசியில் நெருப்புப் பிழம்பு, கார்த்திகையில் ஜோதி சுடர்.
சிவபெருமான் ஜோதி ரூபமாக வெளிப்பட்டதால்தான் திருவண்ணாமலை தலம், “அக்னி தலம்” என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அண்ணாமலையார் சன்னதியின்அர்த்த மண்டபத்தில் சிறிது நேரம் நின்று பாருங்கள்... அனல் வீசுவதுபோல இருக்கும். வியர்த்துக் கொட்டும். திருவண்ணாமலை நெருப்புத்தலம் என்பதை உறுதிப்படுத்த இந்த உதாரணம் ஒன்றே போதும் என்கிறார் ரமேஷ்குருக்கள்.
சமீபத்தில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அணுவில் உள்ள எலக்ட்ரானுக்குள்ளும் லிங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். எலக்ட்ரானுக்குள்ளும் பச்சை நிற வட்டமும, நடுவில் செந்நிறமான ஜோதி வடிவமும் இருப்பதைக் கண்டார்கள். இது திருவண்ணாமலையில் பச்சை பசேல் இயற்கை வளத்துக்கிடையே ஈசன் நெருப்புப் பிழம்பாக தோன்றியதை பிரதிபலிப்பதாக ஆன்மிக பெரியவர்கள் சொல்கிறார்கள்.
அந்த நெருப்பு மலைதான் பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக விஷ்ணு, பிரம்மா வேண்டுதலின்பேரில் சிறு லிங்கமாக மாறியது. அந்த லிங்கத்தை சுற்றியே தற்போதைய ஆலயம் உருவானது.
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Monday, February 5, 2018

செயலில் விழிப்புணர்வு..

கேள்வி....
நீங்கள் எங்களிடம் எல்லாவற்றைப்பற்றியும் விழிப்புணர்வு கொள்ள சொன்னீர்கள்.ஒவ்வொன்றை பற்றியும் ஒவ்வொரு செயலிலும் சாட்சியாக இருக்க கூறினீர்கள்.ஆனால் வேலை செய்யும்போது விழிப்போடு இருக்க நான் முடிவெடுத்தாலும், வேலை செய்யும்போது விழிப்புணர்வை மறந்து விடுகிறேன். பின் நினைவு வரும்போது நாம் விழிப்புணர்வோடு இல்லை என்பது என்னுள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஓஷோவின் பதில்...
வேலை செய்யும் போது விழிப்புணர்வோடு இருக்க முயற்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் அடிப்படையான பிரச்னைதான் இது. ஏனெனில் வேலை எனும்போது நீ உன்னை முழுமையாக மறந்துவிட நேரிடும்.நீ அதில் முழுமையாக ஆழமாக ஈடுபட வேண்டும்…….நீ இல்லாமல் போகும் அளவு.அந்த அளவு ஈடுபாடு இல்லையென்றால் அந்த வேலை மேலோட்டமானதாகத் தான் இருக்கும்.மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பானது எதுவாக இருந்தாலும் – ஓவியம், கவிதை, சிற்பம், கலை அல்லது வாழ்வின் பரிமாணம் எதுவாக – நீ அதில் முழுமையாக இருக்க வேண்டும்.
அதே சமயம் நீ விழிப்புணர்வோடு இருக்க முயற்சி செய்தால் உனது காரியம் முதல்தரமானதாக இருக்காது, ஏனெனில் நீ அதில் இல்லை.ஆகவே காரியம் செய்யும்போது விழிப்புணர்வோடு இருப்பதற்கு விடா முயற்சியும் பொறுமையும் தேவை.
ஆகவே ஒருவர் மிகச் சிறிய விஷயங்களில் இருந்து துவங்க வேண்டும். உதாரணமாக நடப்பது – நீ நடக்கலாம், அதே சமயம் நாம் நடக்கிறோம் என்ற விழிப்புணர்வோடும் இருக்கலாம் – ஒவ்வொரு அடியையும் விழிப்புணர்வோடு எடுத்து வைக்கலாம்.சாப்பிடுவது – ஜென் மடாலயங்களில் அவர்கள் டீ குடிக்கும் விதத்தில், அவர்கள் அதை டீ தியானம் என்றழைக்கின்றனர்.ஏனெனில் ஒவ்வொரு துளி டீயையும் அவர்கள் கவனமாகவும் விழிப்போடும் பருகுகின்றனர்.இவை சிறிய செயல்கள். ஆனால் இவைகளிலிருந்து ஆரம்பிப்பது நல்லது.யாரும் ஓவியம் வரைவது, ஆடுவது போன்ற செயல்களிலிருந்து ஆரம்பிக்கக் கூடாது. அவைகள் மிகவும் ஆழமான மற்றும் சிக்கலான செயல்கள்.உன்னுடைய அன்றாட வாழ்வின் சிறிய செயல்களிலிருந்து ஆரம்பி.நீ மேலும் மேலும் விழிப்புணர்வு உன்னுடைய சுவாசம் போல இயல்பானதாக மாறும் அளவு அதனுடன் பழக்கப்பட்ட பின் – நீ அதற்காக எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை, அது தானாகவே இயல்பாக நடக்கும் என்பது போல ஆன பின் – எந்த செயலிலும் எந்த வேலையிலும் நீ விழிப்புணர்வோடு இருக்கலாம்.ஆனால் ஒரு நிபந்தனை.அது முயற்சியற்று இருக்க வேண்டும், தானாகவே இயல்பானதாக வர வேண்டும்.பின் ஓவியம் வரைவதோ, இசையமைப்பதோ, ஆடுவதோ, அல்லது கையில் கத்தியுடன் எதிரியுடன் சண்டையிடுவதோ கூட நீ முற்றிலும் விழிப்போடு செய்யலாம். ஆனால் இந்த விழிப்புதன்மை நீ அடைய நினைக்கும் விழிப்புணர்வு அல்ல. இது ஆரம்பம் அல்ல. இது தொடர் ஒழுங்கு முயற்சியின் தொகுப்பே.அன்றாட வாழ்வில் முதலில் நீ சாதாரண விஷயத்தை  கடைபிடிக்க வேண்டும். உன்னுடைய ஆழமான ஈடுபாடு தேவையில்லாத செயல்களில் கவனத்தை கொண்டு வர வேண்டும்.நீ நடந்து கொண்டே யோசித்துக் கொண்டிருக்கலாம், நீ சாப்பிட்டுக் கொண்டே யோசித்துக் கொண்டிருக்கலாம்.யோசனைக்கு பதிலாக கவனத்தை கொண்டு வா.சாப்பிட்டுக் கொண்டே இரு, கூடவே சாப்பிடுகிறோம் என்ற உணர்வோடு இரு.நட, யோசனைக்கு பதிலாக உணர்வை கொண்டு வந்து நட, அப்போது உனது நடை மெதுவாகலாம், மிகவும் அழகானதாக மாறலாம் ஆனால் இந்த சிறிய விஷயங்களில்தான் விழிப்பு சாத்தியம்.மேலும் மேலும் பழக்கப்பட பட அதிக சிக்கலான விஷயங்களில் பயன்படுத்திப் பார்க்கலாம்.என்றாவது ஒரு நாள் விழிப்போடு இல்லாமல் தான் இந்த செயல் செய்ய முடியும் என்ற நிலை இல்லாமல் போகும், அதே சமயம் எந்த செயலிலும் முழுமையாகவும் இருக்கும் கணம் வரும்.
ஆகவே நாம் விழிப்போடு இல்லை என்று உணரும் சமயத்திலாவது இதை நாம் உணர்கிறோமே என்று சந்தோஷப்படு.குற்றவுணர்ச்சியை பொறுத்த வரை அதற்கு என் வழிமுறைகளில் இடமே இல்லை. குற்றவுணர்ச்சி என்பது ஆன்மாவின் கேன்சர் போன்றது.நீ ஒரு சில கணங்களுக்கு விழிப்போடு இருந்தால் கூட சந்தோஷப்படும் அளவு விழிப்புணர்வு மிகவும் பெரிய விஷயம்.நீ விழிப்பை மறந்த கணங்களைப்பற்றி கவலைப்படாதே. நாம் விழிப்போடு இல்லை என்று நீ உணர்ந்த கணத்திற்கு முக்கியத்துவம் கொடு. சில மணி நேரத்திற்கு பிறகாவது விழிப்புணர்வு திரும்பி வந்தது சிறப்பானதல்லவா.உனது பார்வை கோணத்தை மாற்று. நாம் விழிப்புணர்வை மறந்து விட்டோம் என்பது உனது கவனத்திற்கு வந்தது மிகவும் அருமை.இப்போது எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நினைவில் வைத்திரு.திரும்பவும் மறந்து விடுவாய், திரும்பவும் நினைவுக்கு வரும்.ஆனால் ஒவ்வொரு தடவையும் மறந்து போகும் கால நேரம் குறைந்து கொண்டே போகும்.நீ குற்றவுணர்வை தவிர்த்து விட்டால் பின் நீ விழிப்புணர்வில்லாமல் இருக்கும் நேரங்கள் சிறிதாகிக் கொண்டே போய், ஒரு நாள் அது இல்லாமலே போய் விடும்.விழிப்புணர்வு என்பது சுவாசம் போன்று அல்லது இதயத்துடிப்பு போன்று இயல்பானதாக மாறி விடும்.ஆரம்ப கால கட்டத்தில் வேலையை செய்யும் போது விழிப்புணர்வோடு இருப்பது என்பது முடியாத காரியம் போலத் தோன்றும்.ஆனால் நான் அது முடியாத காரியம் அல்ல, மாறாக எளிதாக செய்யக் கூடிய செயல்தான் என்று உனக்கு கூறுகிறேன்.சரியான விதத்தில் ஆரம்பி. XYZ யிலிருந்து ஆரம்பிக்காதே, ABC யிலிருந்து ஆரம்பி.
ஆகவே விழிப்புணர்வு போன்ற மிக மதிப்பு வாய்ந்த ஒன்றை செய்யும்போது மிகவும் கவனத்தோடும் ஆரம்பத்திலிருந்தும் செய்ய வேண்டும், ஏனெனில் அது பிரபஞ்சத்தின் எல்லா மர்மங்களுக்கான வாயில்களையும் திறந்து விடும், அது உன்னை தெய்வீகத்தின் கோவிலுக்கு கூட்டிச் செல்லும்.
மெதுவாக செல்.
சிறிது பொறுமை மட்டுமே தேவை, இலக்கு அதிக தொலைவில் இல்லை

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

" E for Efforts, Not for Excuses " " R for Results, Not for Reasons"

" E for Efforts, Not for Excuses "
ஒரு கல்லூரி முதல்வரின் அறையில் கண்ட வாசகம் இது.
ஆம்..முயற்சிக்கு முக்கியம் கொடுக்காமல் சாக்கு போக்குகளை கண்டுபிடிப்பதில் சாமர்த்தியம் காட்டுவதால் தான் வெற்றி என்பது நம்மில் பலருக்கு வெகு தொலைவில் உள்ளது.
சக்தி மசாலா சாந்தி துரைசாமி சொல்வார்கள், “முத்தெடுப்பதற்காக கடலில் மூழ்கியவன் வெறும் கையோடு வெளியே வந்தால், கடலில் முத்து இல்லை என்றா பொருள்? அவனுடைய முயற்சி முழுமையானதாக இல்லை என்றல்லவா பொருள்”
ஆம், முயற்சி என்பதை ஏதோ பேருக்கு உழைப்பது, பிறகு ஓய்வெடுப்பது, உறங்குவது என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அவர்களின் மீது வெற்றியின் நிழல்கூட படுவதில்லை.
" R for Results, Not for Reasons"
ஒரு தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனரின் அறையில் கண்ட வாசகம் இது.
முயற்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை சுருக்கமாகச் சொல்லும் வாசகம் இது. “நீ எவ்வளவு முயற்சித்தாய் என்பது எனக்குத் தேவையில்லை. முடிவு என்ன ஆயிற்று? அதைச் சொல்” என்பதாகும்.
முயற்சி என்பது எப்படித்தான் இருக்க வேண்டும்?
முயற்சி, உடலோடு மட்டுமே சம்பந்தப்பட்டது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உடனே அதை மாற்றிக் கொள்ளுங்கள். முயற்சி என்பது மூளையுடனும் சம்பந்தப்பட்டது என்பது தான் உண்மை.
அதனால் தானே உழைப்பு என்ற சொல்லுக்கு முதல் எழுத்தாக உடலைக் குறிக்கும் ‘உ’வும், இறுதி எழுத்தாக புத்தியைக் குறிக்கும் ‘பு’வும் அமைந்திருக்கிறது.
மூளையை உபயோகிக்காமல் வெறும் உடலை மட்டுமே நம்பி முயற்சி எடுப்பவர்கள் முன்னேற்றம் காண்பது என்பது முடியாத காரியம். பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாராம் ஒருமுறை சொன்னார்: “மாடா உழைக்கிறேன். நாயா அலையிறேன்னு சொல்றியே, எதுக்கு? மனுசனா உழையேன்” – சிந்திக்க வேண்டிய கருத்து இது.
மாட்டுக்கும் நாய்க்கும் ஆறாம் அறிவு கிடையாது. உடலால் மட்டுமே உழைக்கின்றன. அதனால் காலம் காலமாக அப்படியே இருக்கின்றன.
மனிதனுக்குத்தான் ஆறாம் அறிவு இருக்கிறதே. அவனும் உடலால் மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கலாமா? அப்படி உழைத்தால் நேற்று மாதிரியே இன்றும் இருப்பான். நாளையும் இருப்பான். அவ்வளவு தான்.
ஆக, நமது முயற்சிகளில் முக்கால் பங்கு மூளையின் உழைப்பு இருந்தால் மட்டுமே நிச்சயமாக முன்னேற முடியும்.
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Thursday, February 1, 2018

பணக்காரர் ஆக

ஒரு கிரேக்க நாட்டுப் பணக்காரர் அளித்த பேட்டி. ..
தான் கஷ்டப்பட்டு  முன்னுக்கு வந்ததாக சொல்ல வில்லை.

1 நல்ல  பெரிய  மனிதர்கள்  வாழும்  இடத்தில   வசிக்கவும் .
(ஒரு நாள்  சாப்பாடு  இல்லா விட்டாலும்  கூட  கவலைப்படாதே  )

2 அதிகமாகத் தூங்காதே. . எப்பொழுதும்  எதிர்பார்ப்புடன் . விழிப்புணர்வுடன்  இரு

3 எப்பொழுதும்   உன்னுடன்   ஒரு சூரிய விளக்கு ( பிரகாசம் .)  (மகிழ்ச்சி ) இருக்கட்டும்.

4 மனதால்  பணக்காரன் ஆகி விட்டதாகவே   எண்ணி  அதன்படி நடக்கவும் ..

5  உங்கள்  தோற்றமும். .. உடையும்..  பார்வையும்  .
பேச்சும் .  செயலும்  பணக்காரர் தோரணையில் எப்பொழுதும்  இருக்கட்டும்.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

எண்ணச் சிதறல்

ஒரு நகரத்தில் ஒரு செல்வந்தர் ஒரு நாள் ஒரு இலட்சம் ரூபாயை தர்மம் செய்யப்போவதாக விளம்பரம் செய்தார். விளம்பரத்தை அறிந்த மக்கள் கிட்டத்தட்ட இலட்சம் பேர் குழுமி விட்டனர். யாரையும் வெறுங்கையோடு அனுப்ப விரும்பாத செல்வந்தர் இலட்ச ரூபாயையும் பிரித்து குறைந்தது ஒரு ரூபாயாவது தந்தனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.ஒற்றை ரூபாயைத் தானமாக பெற்றவர்கள் 'இந்த ஒற்றை ரூபாய் தர்மத்திற்காகவா இவ்வளவு விளம்பரம்! ஆர்ப்பாட்டம்' என்று தூற்றினர். செல்வந்தருக்கு வருத்தம்.
இரண்டாவது முறை மற்றுமொரு இலட்சரூபாயை தர்மத்துக்காக ஒதுக்கி குறைவாக மனிதர்கள் வந்தால் நிறைவாக இருக்கும் என்று அளவாக அறிவிப்பு செய்தார். அப்பொழுதும் ஆயிரம் பேர் குவிந்து விட்டனர். ஆளுக்கு நூறு ரூபாய் வீதம் பிரித்துக் கொடுத்தனுப்பினார். பெற்றவர்கள் பெரிய மகிழ்ச்சி ஒன்றும்  அடையவில்லை. மீண்டும் செல்வந்தருக்கு ஏமாற்றம்.
மூன்றாவது முறையாக ஒரு இலட்சம் ரூபாயை ஒதுக்கி விளம்பரமாக இல்லாமல் தகவல்களைச் சொல்லி தர்மத்துக்கு நாள் குறித்தார். அன்றைக்கு சுமார் நூறு பேர்கள் கலந்து கொண்டு ஆளுக்கு ஆயிரம் பெற்றுச் சென்றனர். ஆயிரம் பெற்றவர்களும் ஆசீர்வாதம் செய்யாமல் இதென்ன பெரிய தர்மமோ என்று ஏதும் சொல்லாமல் சென்று விட்டனர். மீண்டும் செல்வந்தருக்கு ஏமாற்றம்.
நான்காவது முறையாக அறிந்த தெரிந்த ஏழைகள் பத்துப் பேரை அழைத்து ஆளுக்கு பத்தாயிரம் வீதம் பகிர்ந்து கொடுத்ததுப் பார்த்தார். பெற்றவர்கள் “பரவாயில்லை” என்றார்களே தவிர பரவசமாய் பாராட்ட வில்லை.
முறை ஒரு இலட்சம் ரூபாயையும் ஒருவருக்கே உதவினால் நலம் பயக்கும் என்று முடிவு செய்தார்.முன்னேற வேண்டும் என்று முனைப்பாயுள்ள, ஒரு இளைஞரை அழைத்து இலட்ச ரூபாயையும் தந்தார். இலட்சத்தைப் பெற்ற இளைஞர்  முன்னேற வழி பிறந்தது என்று மகிழ்ந்தார். செல்வந்தரை நன்றியோடு வாழ்த்தினார்.  எண்ணிக்கையை குறைக்க குறைக்க பெறுபவர்களின் 'பணச்சக்தி' அதிகரிக்கிறது.அதுபோல மனித மனத்தில் உருவாகிற இலட்சம் வகையான எண்ணங்களையும் இலட்சம் விசயங்களில் செலுத்தினால் 'ஒற்றை ரூபாய் சக்தி' தான். மனோ சக்தியும் மலிந்தும் நலிந்தும் போகிறது.பதவி வேண்டும், வீடு வேண்டும், நிலம் வேண்டும், வாகனம் வேண்டும், பணம் வேண்டும், புகழ் வேண்டும் என்று பல இலட்சியங்களையும் அடைய வேண்டும் என்று எண்ணங்களை சிதறடிப்பதைவிட எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒன்றை மனதிலே நினைத்து அந்த ஒன்றில் மட்டுமே எண்ணத்தைக் குவித்தால் வலிமையான எண்ணம் உருவாகும். எண்ணியதை எண்ணியவாறு அடையும் சூட்சுமம் இரகசியம் இதுதானே.
எண்ணச் சிதறல் எண்ணியதை அடைய உதவாது. எண்ணக் குவிப்பு (Concentration) திண்ணிய மனிதராக்கும்.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Tuesday, January 30, 2018

கண்ணோட்டம்

இரும்பு இருக்கு.. உங்களாலே சாதாரணமா அழிக்க முடியுமா.. முடியாது.. ஆனாத் துருப் பிடிச்சா.. ? அது அழிஞ்சு போகுது.. இரும்போட கூடப் பொறந்த துருவே இரும்பை அழிச்சுடுதே.. அந்த மாதிரிதான் நம்மளோட தேவையில்லாத எண்ணங்கள், குழப்பங்கள், அசிங்கமான உணர்ச்சிகள், போட்டி பொறாமை வில்லத்தனம்தான் நம்மையே அழிக்குது.. நாறும் சாக்கடைகளை ஒதுக்கித் தள்ளுங்க...
வாழ்க்கையிலே மேடு பள்ளம், உயர்வு தாழ்வு இருந்தா அதுக்காகக் கவலைப் படாதீங்க.. வருத்திக்காதீங்க.. மேலும் மேலும் தொய்வு வராம வாழ்க்கைப் பயணத்துலே நடந்து போங்க.. ஈசீஜி வரைபடம் நம்ம இதயம் ஹார்ட்டு வேலை செய்யுதாங்குறதைச் சொல்லுதுங்க.. அந்த வரைபடம் பாத்தீங்கன்னா மேலேயும் கீழேயும் ஓடுதுங்களே.. பயப்படாதீங்க .. ஆனா அதுவே ஒரே நேர் கொட்டுலே போனா .. ஐயோ.. வேண்டாம்.. உயிர் போனதா அர்த்தம்.. !!!!!!..
கொதிக்கிற வெந்நீர் முட்டையை கட்டியாக் கெட்டியா மாத்துது இல்லியா .. ருசியுடன் சாப்பிடுறோம்.. ஆனா உருளைக்கிழங்கை வெந்நீரே மிருதுவாப் பண்ணி நம்ம சாப்பிடறதுக்கு ஏதுவாச் செய்து கொடுக்குதுங்களே.. வேண்டாமுன்னா சொல்றோம்...
ஏற்றத்தாழ்வுகளும் வாழ்க்கைக்கு எதிரிகள் அல்ல.. உபயோகமான அனுபவங்களேதான்.. செம்மையாக உறுதியாக எதிர் நோக்கினால் வாழ்வில் வெற்றி நிச்சியம்தான்.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677