Tuesday, February 20, 2018

ஆன்மிகம் என்றால்...

அருமையான உரையாடல் படித்து பாருங்கள் ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .உடனே புறப்பட்டான் .போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான் அவர் கேட்டார் .
" எங்கே போகிறாய் ?"
" கடவுளை காண போகிறேன் !"
" எங்கே ? "
" கோவிலில் !"
" அங்கே போய் ........"
" அவரை வழிபட போகிறேன் ! "
" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"
" தெரியாது "
" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"
" அப்படியென்றால் "
" உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "
அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான் ஞானி தெளிவு படுத்தினார்
" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் .தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "
" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."
" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"
" அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"
" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"
" அதற்க்கு வழி ?"
" தியானம்"
" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?
" இல்லை "
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :
" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் .உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருவர் அங்கே  வந்தார் .ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .தன்னுடைய தேவையை சொன்னார் :
" I WANT PEACE"
ஞானி சொன்னார்:
" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !" எனக் கூற , வந்தவர் யோசித்தார் .
' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !
' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கே வந்தான் ." சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது !"
" எப்படி அது ?"
" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !
ஞானி கேட்டார்
" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"
" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"
உற்சாகமாக சொன்னான் .
" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"
"இல்லை "
" அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"
" யார் அவர் "
" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"
வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் ." சரி , சுவாமி . நான் வர்றேன் !"
சோர்வோடு நடந்து போனான் .அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .ஞானி கேட்டார் :
" எங்கே போகிறாய் ? "
" வீட்டுக்கு !"
" கோவிலுக்கு போகவில்லையா ?"
" இல்லை "
" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"
" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "
ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .
" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் நான்,என்னிடம் என்ற அகந்தையில் இருந்து விலகியிருக்கிறீர்களோ ,
அவ்வளவு தூரம் நெருங்கி இருக்கிறீர்கள் என்பது பொருள்.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Saturday, February 17, 2018

நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள்.

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார்.  பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.
உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளையிட்டான்.அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.உடனே அரசன் தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது, இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.
“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.
அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?” என அரசன் கேட்டான்.
அரசன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.
இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Saturday, February 10, 2018

மகா சிவராத்திரி விழா தோன்றிய தலம் திருவண்ணாமலை



மகிமை மிக்க மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த வருடம் மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று மாத சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் மட்டும் சிவராத்திரி, மகா சிவராத்திரி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபடுவார்கள். உலகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
மகிமை மிக்க இந்த மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது.
விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டையைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார். அந்த நெருப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.
அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் “எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்” என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்புப் பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.
பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறேன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை. இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற்சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிடம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.
ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார்.
நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான்.... நெருப்புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமான் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.
விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலராவாய் என்றும் சாபமிட்டார்.
இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்துதான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.
இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் “லிங்கோத்பவர்” வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவராத்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி விழா தோன்றிய தலமும் திருவண்ணாமலையே.
திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்குப் பரவியது.
சிவபெருமானுக்குரிய முக்கிய 25 வடிவங்களில் முதலாவது அமைவது லிங்கோத்பவர் வடிவம்தான். லிங்கம் என்பது சிவ வடிவம். அந்த லிங்கத்தில் இருந்து தோன்றிய உருவம்தான் லிங்கோத்பவர். அதாவது லிங்கத்துக்கு தலை, கை, கால் முளைத்தால் கிடைக்கும் உருவம்தான் லிங்கோத்பவர்.
சிவபெருமான் முதலில் உருவம் இல்லாமல் அருவமாகத்தான் இருந்தார். ஆனால் உலக உயிர்கள் முன்பு தோன்ற நினைத்தபோது அருவுருவாகவும், பிறகு உருவமாகவும் தோன்றினார். அருவத்துக்கும், உருவத்துக்கும் இடையில் நின்றதே அருவுருவமாகும். இதுதான் திருவண்ணாமலையில் நெருப்புப் பிழம்பாக நின்ற லிங்கோத்பவர் உருவமாகும். எனவேதான் திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் வழிபாடு, மிக, மிக சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதை காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
பொதுவாக லிங்கோத்பவரை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். மலையில் இருட்டத் தொடங்கும் நேரத்தில் இவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் நமது ஆணவம், அகந்தை எல்லாம் ஓடோடி விடும்.
மகாசிவராத்திரி நாளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களில் மூன்றாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அருவுருவமாக லிங்கோத்பவர் அருள்பாவித்த காலமாக இதை சொல்கிறார்கள்.
ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் மகா சிவராத்திரியின் இரண்டாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கோத்பவர் முதன் முதலில் திருவண்ணாமலையில் தோன்றியவர் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் மற்ற தலங்களுக்கு முன்பாக இரண்டாம் ஜாமத்திலேயே திருவண்ணாமலையில் பூஜைகள் நடத்தப்படுவதாக ரமேஷ் குருக்கள் தெரிவித்தார்.
உலக உயிர்கள் “நான்”, “எனது” என்பன போன்ற ஆணவம், அகந்தை கொள்ளாமல், தானும் இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறு அணுவே என்பதை உணர்ந்து புரிந்து கொள்வதே லிங்கோத்பவர் வடிவத்தின் தத்துவமாக உள்ளது. இந்த வடிவை வழிபட்டால் உடல் நலமும், மோட்ச பிராப்தமும் கிடைக்கும். எனவேதான் இந்த வழிபாட்டை, “மோட்ச பிரதாயினி” என்று சொல்கிறார்கள்.
லிங்கோத்பவர் பூஜையின்போது மட்டும் சுவாமிக்கு நெய்பூசி, வெண்ணீர் அபிஷேகம் செய்து, பிறகு கம்பளி போர்த்தி தாழம்பூ சூட்டுவார்கள். இந்த ஒரு காலத்தில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ அணிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மகா சிவராத்திரியன்று இந்த பூஜையை நேரில் பார்த்து தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கெல்லாம் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்படும். பிறகு தங்கக்கவசம் அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெறும்.
அன்றிரவு 4 ஜாம பூஜைகள் நடத்துவார்கள். இரவு 7 மணிக்கு முதல் ஜாம பூஜை, 11 மணிக்கு இரண்டாம் ஜாம பூஜை நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் ஜாம பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் ஜாம பூஜை நடத்துவார்கள்.
இதில் இரவு 11 மணி முதல் 1 மணி வரையிலான இரண்டாம் ஜாம பூஜை லிங்கோத்பவருக்கான பூஜையாக நடைபெறும். அடி, முடி காண முடியாதபடி சிவபெருமான் நெருப்புப் பிழம்பாக நின்ற நேரம் அது. எனவே இந்த நேரத்தில் லிங்கோத்பவரை வழிபாடு செய்வதும், கிரிவலம் வருவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்காக இரவு முழுவதும் பன்னிரு திருமுறை இசைக் கச்சேரி நடைபெறும். ராஜகோபுரம் அருகே 108 தவில், நாதஸ்வர வித்வான்களின் கச்சேரி நடக்கும்.
கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வைப்பார்கள். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் லட்சதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரி தினத்தன்று லட்ச தீபத்தை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அது மட்டுமல்ல, கிரிவலம் வரும் பக்தர்கள், மகாசிவராத்திரி தினத்தில் மட்டும் வில்வ கூடையை ஏந்தியபடி கிரிவலம் செல்வது வித்தியாசமாக இருக்கும். நெருப்பு மலையாக இருக்கும் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்த பக்தர்கள் கூடை, கூடையாக வில்வம் எடுத்துச் செல்கிறார்கள் என்பது ஐதீகமாகும். சிவராத்திரி கிரிவலம் காரியசித்தி தரும் என்பார்கள்.
சிவபெருமான் நெருப்பு மலையாக உருவெடுத்தது பற்றி பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழக்கூடும். கார்த்திகை தீபத்தன்றுதானே ஈசன் நெருப்பு உருவில் தோன்றினார் என்று நினைக்கலாம்.
உண்மையில் சிவபெருமான் திருவண்ணாமலையில் இரண்டு தடவை ஜோதி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மாசி மாதம் விஷ்ணு, பிரம்மாவின் ஆணவத்தையும், அகந்தையையும் விரட்ட நெருப்புப் பிழம்பாக வந்தார். கார்த்திகை மாதம் அம்பாளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தப்போது ஜோதிச்சுடராக வந்தார். முதல் ஜோதி தரிசனத்துக்கும் இரண்டாம் ஜோதி தரிசனத்துக்கும் வித்தியாசம் உள்ளதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாசியில் நெருப்புப் பிழம்பு, கார்த்திகையில் ஜோதி சுடர்.
சிவபெருமான் ஜோதி ரூபமாக வெளிப்பட்டதால்தான் திருவண்ணாமலை தலம், “அக்னி தலம்” என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அண்ணாமலையார் சன்னதியின்அர்த்த மண்டபத்தில் சிறிது நேரம் நின்று பாருங்கள்... அனல் வீசுவதுபோல இருக்கும். வியர்த்துக் கொட்டும். திருவண்ணாமலை நெருப்புத்தலம் என்பதை உறுதிப்படுத்த இந்த உதாரணம் ஒன்றே போதும் என்கிறார் ரமேஷ்குருக்கள்.
சமீபத்தில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அணுவில் உள்ள எலக்ட்ரானுக்குள்ளும் லிங்கம் இருப்பதை கண்டுபிடித்தனர். எலக்ட்ரானுக்குள்ளும் பச்சை நிற வட்டமும, நடுவில் செந்நிறமான ஜோதி வடிவமும் இருப்பதைக் கண்டார்கள். இது திருவண்ணாமலையில் பச்சை பசேல் இயற்கை வளத்துக்கிடையே ஈசன் நெருப்புப் பிழம்பாக தோன்றியதை பிரதிபலிப்பதாக ஆன்மிக பெரியவர்கள் சொல்கிறார்கள்.
அந்த நெருப்பு மலைதான் பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக விஷ்ணு, பிரம்மா வேண்டுதலின்பேரில் சிறு லிங்கமாக மாறியது. அந்த லிங்கத்தை சுற்றியே தற்போதைய ஆலயம் உருவானது.
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Monday, February 5, 2018

செயலில் விழிப்புணர்வு..

கேள்வி....
நீங்கள் எங்களிடம் எல்லாவற்றைப்பற்றியும் விழிப்புணர்வு கொள்ள சொன்னீர்கள்.ஒவ்வொன்றை பற்றியும் ஒவ்வொரு செயலிலும் சாட்சியாக இருக்க கூறினீர்கள்.ஆனால் வேலை செய்யும்போது விழிப்போடு இருக்க நான் முடிவெடுத்தாலும், வேலை செய்யும்போது விழிப்புணர்வை மறந்து விடுகிறேன். பின் நினைவு வரும்போது நாம் விழிப்புணர்வோடு இல்லை என்பது என்னுள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஓஷோவின் பதில்...
வேலை செய்யும் போது விழிப்புணர்வோடு இருக்க முயற்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் அடிப்படையான பிரச்னைதான் இது. ஏனெனில் வேலை எனும்போது நீ உன்னை முழுமையாக மறந்துவிட நேரிடும்.நீ அதில் முழுமையாக ஆழமாக ஈடுபட வேண்டும்…….நீ இல்லாமல் போகும் அளவு.அந்த அளவு ஈடுபாடு இல்லையென்றால் அந்த வேலை மேலோட்டமானதாகத் தான் இருக்கும்.மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பானது எதுவாக இருந்தாலும் – ஓவியம், கவிதை, சிற்பம், கலை அல்லது வாழ்வின் பரிமாணம் எதுவாக – நீ அதில் முழுமையாக இருக்க வேண்டும்.
அதே சமயம் நீ விழிப்புணர்வோடு இருக்க முயற்சி செய்தால் உனது காரியம் முதல்தரமானதாக இருக்காது, ஏனெனில் நீ அதில் இல்லை.ஆகவே காரியம் செய்யும்போது விழிப்புணர்வோடு இருப்பதற்கு விடா முயற்சியும் பொறுமையும் தேவை.
ஆகவே ஒருவர் மிகச் சிறிய விஷயங்களில் இருந்து துவங்க வேண்டும். உதாரணமாக நடப்பது – நீ நடக்கலாம், அதே சமயம் நாம் நடக்கிறோம் என்ற விழிப்புணர்வோடும் இருக்கலாம் – ஒவ்வொரு அடியையும் விழிப்புணர்வோடு எடுத்து வைக்கலாம்.சாப்பிடுவது – ஜென் மடாலயங்களில் அவர்கள் டீ குடிக்கும் விதத்தில், அவர்கள் அதை டீ தியானம் என்றழைக்கின்றனர்.ஏனெனில் ஒவ்வொரு துளி டீயையும் அவர்கள் கவனமாகவும் விழிப்போடும் பருகுகின்றனர்.இவை சிறிய செயல்கள். ஆனால் இவைகளிலிருந்து ஆரம்பிப்பது நல்லது.யாரும் ஓவியம் வரைவது, ஆடுவது போன்ற செயல்களிலிருந்து ஆரம்பிக்கக் கூடாது. அவைகள் மிகவும் ஆழமான மற்றும் சிக்கலான செயல்கள்.உன்னுடைய அன்றாட வாழ்வின் சிறிய செயல்களிலிருந்து ஆரம்பி.நீ மேலும் மேலும் விழிப்புணர்வு உன்னுடைய சுவாசம் போல இயல்பானதாக மாறும் அளவு அதனுடன் பழக்கப்பட்ட பின் – நீ அதற்காக எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை, அது தானாகவே இயல்பாக நடக்கும் என்பது போல ஆன பின் – எந்த செயலிலும் எந்த வேலையிலும் நீ விழிப்புணர்வோடு இருக்கலாம்.ஆனால் ஒரு நிபந்தனை.அது முயற்சியற்று இருக்க வேண்டும், தானாகவே இயல்பானதாக வர வேண்டும்.பின் ஓவியம் வரைவதோ, இசையமைப்பதோ, ஆடுவதோ, அல்லது கையில் கத்தியுடன் எதிரியுடன் சண்டையிடுவதோ கூட நீ முற்றிலும் விழிப்போடு செய்யலாம். ஆனால் இந்த விழிப்புதன்மை நீ அடைய நினைக்கும் விழிப்புணர்வு அல்ல. இது ஆரம்பம் அல்ல. இது தொடர் ஒழுங்கு முயற்சியின் தொகுப்பே.அன்றாட வாழ்வில் முதலில் நீ சாதாரண விஷயத்தை  கடைபிடிக்க வேண்டும். உன்னுடைய ஆழமான ஈடுபாடு தேவையில்லாத செயல்களில் கவனத்தை கொண்டு வர வேண்டும்.நீ நடந்து கொண்டே யோசித்துக் கொண்டிருக்கலாம், நீ சாப்பிட்டுக் கொண்டே யோசித்துக் கொண்டிருக்கலாம்.யோசனைக்கு பதிலாக கவனத்தை கொண்டு வா.சாப்பிட்டுக் கொண்டே இரு, கூடவே சாப்பிடுகிறோம் என்ற உணர்வோடு இரு.நட, யோசனைக்கு பதிலாக உணர்வை கொண்டு வந்து நட, அப்போது உனது நடை மெதுவாகலாம், மிகவும் அழகானதாக மாறலாம் ஆனால் இந்த சிறிய விஷயங்களில்தான் விழிப்பு சாத்தியம்.மேலும் மேலும் பழக்கப்பட பட அதிக சிக்கலான விஷயங்களில் பயன்படுத்திப் பார்க்கலாம்.என்றாவது ஒரு நாள் விழிப்போடு இல்லாமல் தான் இந்த செயல் செய்ய முடியும் என்ற நிலை இல்லாமல் போகும், அதே சமயம் எந்த செயலிலும் முழுமையாகவும் இருக்கும் கணம் வரும்.
ஆகவே நாம் விழிப்போடு இல்லை என்று உணரும் சமயத்திலாவது இதை நாம் உணர்கிறோமே என்று சந்தோஷப்படு.குற்றவுணர்ச்சியை பொறுத்த வரை அதற்கு என் வழிமுறைகளில் இடமே இல்லை. குற்றவுணர்ச்சி என்பது ஆன்மாவின் கேன்சர் போன்றது.நீ ஒரு சில கணங்களுக்கு விழிப்போடு இருந்தால் கூட சந்தோஷப்படும் அளவு விழிப்புணர்வு மிகவும் பெரிய விஷயம்.நீ விழிப்பை மறந்த கணங்களைப்பற்றி கவலைப்படாதே. நாம் விழிப்போடு இல்லை என்று நீ உணர்ந்த கணத்திற்கு முக்கியத்துவம் கொடு. சில மணி நேரத்திற்கு பிறகாவது விழிப்புணர்வு திரும்பி வந்தது சிறப்பானதல்லவா.உனது பார்வை கோணத்தை மாற்று. நாம் விழிப்புணர்வை மறந்து விட்டோம் என்பது உனது கவனத்திற்கு வந்தது மிகவும் அருமை.இப்போது எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நினைவில் வைத்திரு.திரும்பவும் மறந்து விடுவாய், திரும்பவும் நினைவுக்கு வரும்.ஆனால் ஒவ்வொரு தடவையும் மறந்து போகும் கால நேரம் குறைந்து கொண்டே போகும்.நீ குற்றவுணர்வை தவிர்த்து விட்டால் பின் நீ விழிப்புணர்வில்லாமல் இருக்கும் நேரங்கள் சிறிதாகிக் கொண்டே போய், ஒரு நாள் அது இல்லாமலே போய் விடும்.விழிப்புணர்வு என்பது சுவாசம் போன்று அல்லது இதயத்துடிப்பு போன்று இயல்பானதாக மாறி விடும்.ஆரம்ப கால கட்டத்தில் வேலையை செய்யும் போது விழிப்புணர்வோடு இருப்பது என்பது முடியாத காரியம் போலத் தோன்றும்.ஆனால் நான் அது முடியாத காரியம் அல்ல, மாறாக எளிதாக செய்யக் கூடிய செயல்தான் என்று உனக்கு கூறுகிறேன்.சரியான விதத்தில் ஆரம்பி. XYZ யிலிருந்து ஆரம்பிக்காதே, ABC யிலிருந்து ஆரம்பி.
ஆகவே விழிப்புணர்வு போன்ற மிக மதிப்பு வாய்ந்த ஒன்றை செய்யும்போது மிகவும் கவனத்தோடும் ஆரம்பத்திலிருந்தும் செய்ய வேண்டும், ஏனெனில் அது பிரபஞ்சத்தின் எல்லா மர்மங்களுக்கான வாயில்களையும் திறந்து விடும், அது உன்னை தெய்வீகத்தின் கோவிலுக்கு கூட்டிச் செல்லும்.
மெதுவாக செல்.
சிறிது பொறுமை மட்டுமே தேவை, இலக்கு அதிக தொலைவில் இல்லை

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

" E for Efforts, Not for Excuses " " R for Results, Not for Reasons"

" E for Efforts, Not for Excuses "
ஒரு கல்லூரி முதல்வரின் அறையில் கண்ட வாசகம் இது.
ஆம்..முயற்சிக்கு முக்கியம் கொடுக்காமல் சாக்கு போக்குகளை கண்டுபிடிப்பதில் சாமர்த்தியம் காட்டுவதால் தான் வெற்றி என்பது நம்மில் பலருக்கு வெகு தொலைவில் உள்ளது.
சக்தி மசாலா சாந்தி துரைசாமி சொல்வார்கள், “முத்தெடுப்பதற்காக கடலில் மூழ்கியவன் வெறும் கையோடு வெளியே வந்தால், கடலில் முத்து இல்லை என்றா பொருள்? அவனுடைய முயற்சி முழுமையானதாக இல்லை என்றல்லவா பொருள்”
ஆம், முயற்சி என்பதை ஏதோ பேருக்கு உழைப்பது, பிறகு ஓய்வெடுப்பது, உறங்குவது என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அவர்களின் மீது வெற்றியின் நிழல்கூட படுவதில்லை.
" R for Results, Not for Reasons"
ஒரு தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனரின் அறையில் கண்ட வாசகம் இது.
முயற்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை சுருக்கமாகச் சொல்லும் வாசகம் இது. “நீ எவ்வளவு முயற்சித்தாய் என்பது எனக்குத் தேவையில்லை. முடிவு என்ன ஆயிற்று? அதைச் சொல்” என்பதாகும்.
முயற்சி என்பது எப்படித்தான் இருக்க வேண்டும்?
முயற்சி, உடலோடு மட்டுமே சம்பந்தப்பட்டது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உடனே அதை மாற்றிக் கொள்ளுங்கள். முயற்சி என்பது மூளையுடனும் சம்பந்தப்பட்டது என்பது தான் உண்மை.
அதனால் தானே உழைப்பு என்ற சொல்லுக்கு முதல் எழுத்தாக உடலைக் குறிக்கும் ‘உ’வும், இறுதி எழுத்தாக புத்தியைக் குறிக்கும் ‘பு’வும் அமைந்திருக்கிறது.
மூளையை உபயோகிக்காமல் வெறும் உடலை மட்டுமே நம்பி முயற்சி எடுப்பவர்கள் முன்னேற்றம் காண்பது என்பது முடியாத காரியம். பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாராம் ஒருமுறை சொன்னார்: “மாடா உழைக்கிறேன். நாயா அலையிறேன்னு சொல்றியே, எதுக்கு? மனுசனா உழையேன்” – சிந்திக்க வேண்டிய கருத்து இது.
மாட்டுக்கும் நாய்க்கும் ஆறாம் அறிவு கிடையாது. உடலால் மட்டுமே உழைக்கின்றன. அதனால் காலம் காலமாக அப்படியே இருக்கின்றன.
மனிதனுக்குத்தான் ஆறாம் அறிவு இருக்கிறதே. அவனும் உடலால் மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கலாமா? அப்படி உழைத்தால் நேற்று மாதிரியே இன்றும் இருப்பான். நாளையும் இருப்பான். அவ்வளவு தான்.
ஆக, நமது முயற்சிகளில் முக்கால் பங்கு மூளையின் உழைப்பு இருந்தால் மட்டுமே நிச்சயமாக முன்னேற முடியும்.
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Thursday, February 1, 2018

பணக்காரர் ஆக

ஒரு கிரேக்க நாட்டுப் பணக்காரர் அளித்த பேட்டி. ..
தான் கஷ்டப்பட்டு  முன்னுக்கு வந்ததாக சொல்ல வில்லை.

1 நல்ல  பெரிய  மனிதர்கள்  வாழும்  இடத்தில   வசிக்கவும் .
(ஒரு நாள்  சாப்பாடு  இல்லா விட்டாலும்  கூட  கவலைப்படாதே  )

2 அதிகமாகத் தூங்காதே. . எப்பொழுதும்  எதிர்பார்ப்புடன் . விழிப்புணர்வுடன்  இரு

3 எப்பொழுதும்   உன்னுடன்   ஒரு சூரிய விளக்கு ( பிரகாசம் .)  (மகிழ்ச்சி ) இருக்கட்டும்.

4 மனதால்  பணக்காரன் ஆகி விட்டதாகவே   எண்ணி  அதன்படி நடக்கவும் ..

5  உங்கள்  தோற்றமும். .. உடையும்..  பார்வையும்  .
பேச்சும் .  செயலும்  பணக்காரர் தோரணையில் எப்பொழுதும்  இருக்கட்டும்.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

எண்ணச் சிதறல்

ஒரு நகரத்தில் ஒரு செல்வந்தர் ஒரு நாள் ஒரு இலட்சம் ரூபாயை தர்மம் செய்யப்போவதாக விளம்பரம் செய்தார். விளம்பரத்தை அறிந்த மக்கள் கிட்டத்தட்ட இலட்சம் பேர் குழுமி விட்டனர். யாரையும் வெறுங்கையோடு அனுப்ப விரும்பாத செல்வந்தர் இலட்ச ரூபாயையும் பிரித்து குறைந்தது ஒரு ரூபாயாவது தந்தனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.ஒற்றை ரூபாயைத் தானமாக பெற்றவர்கள் 'இந்த ஒற்றை ரூபாய் தர்மத்திற்காகவா இவ்வளவு விளம்பரம்! ஆர்ப்பாட்டம்' என்று தூற்றினர். செல்வந்தருக்கு வருத்தம்.
இரண்டாவது முறை மற்றுமொரு இலட்சரூபாயை தர்மத்துக்காக ஒதுக்கி குறைவாக மனிதர்கள் வந்தால் நிறைவாக இருக்கும் என்று அளவாக அறிவிப்பு செய்தார். அப்பொழுதும் ஆயிரம் பேர் குவிந்து விட்டனர். ஆளுக்கு நூறு ரூபாய் வீதம் பிரித்துக் கொடுத்தனுப்பினார். பெற்றவர்கள் பெரிய மகிழ்ச்சி ஒன்றும்  அடையவில்லை. மீண்டும் செல்வந்தருக்கு ஏமாற்றம்.
மூன்றாவது முறையாக ஒரு இலட்சம் ரூபாயை ஒதுக்கி விளம்பரமாக இல்லாமல் தகவல்களைச் சொல்லி தர்மத்துக்கு நாள் குறித்தார். அன்றைக்கு சுமார் நூறு பேர்கள் கலந்து கொண்டு ஆளுக்கு ஆயிரம் பெற்றுச் சென்றனர். ஆயிரம் பெற்றவர்களும் ஆசீர்வாதம் செய்யாமல் இதென்ன பெரிய தர்மமோ என்று ஏதும் சொல்லாமல் சென்று விட்டனர். மீண்டும் செல்வந்தருக்கு ஏமாற்றம்.
நான்காவது முறையாக அறிந்த தெரிந்த ஏழைகள் பத்துப் பேரை அழைத்து ஆளுக்கு பத்தாயிரம் வீதம் பகிர்ந்து கொடுத்ததுப் பார்த்தார். பெற்றவர்கள் “பரவாயில்லை” என்றார்களே தவிர பரவசமாய் பாராட்ட வில்லை.
முறை ஒரு இலட்சம் ரூபாயையும் ஒருவருக்கே உதவினால் நலம் பயக்கும் என்று முடிவு செய்தார்.முன்னேற வேண்டும் என்று முனைப்பாயுள்ள, ஒரு இளைஞரை அழைத்து இலட்ச ரூபாயையும் தந்தார். இலட்சத்தைப் பெற்ற இளைஞர்  முன்னேற வழி பிறந்தது என்று மகிழ்ந்தார். செல்வந்தரை நன்றியோடு வாழ்த்தினார்.  எண்ணிக்கையை குறைக்க குறைக்க பெறுபவர்களின் 'பணச்சக்தி' அதிகரிக்கிறது.அதுபோல மனித மனத்தில் உருவாகிற இலட்சம் வகையான எண்ணங்களையும் இலட்சம் விசயங்களில் செலுத்தினால் 'ஒற்றை ரூபாய் சக்தி' தான். மனோ சக்தியும் மலிந்தும் நலிந்தும் போகிறது.பதவி வேண்டும், வீடு வேண்டும், நிலம் வேண்டும், வாகனம் வேண்டும், பணம் வேண்டும், புகழ் வேண்டும் என்று பல இலட்சியங்களையும் அடைய வேண்டும் என்று எண்ணங்களை சிதறடிப்பதைவிட எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒன்றை மனதிலே நினைத்து அந்த ஒன்றில் மட்டுமே எண்ணத்தைக் குவித்தால் வலிமையான எண்ணம் உருவாகும். எண்ணியதை எண்ணியவாறு அடையும் சூட்சுமம் இரகசியம் இதுதானே.
எண்ணச் சிதறல் எண்ணியதை அடைய உதவாது. எண்ணக் குவிப்பு (Concentration) திண்ணிய மனிதராக்கும்.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677