Tuesday, December 26, 2017

மனம் குழப்பத்தில் இருக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார்.சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏறி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார்
நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான்.'புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்? நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான். மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்., அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும். மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

வாழ்க வளமுடன்.

வாழ்க வளமுடன் - என்பது எதைக்குறிக்கிறது...? வாழ்க என்பது வாழ்த்துச்சொல்.வளமுடன் என்பது ஒரு நிறைவுத்தன்மையை குறிக்கும்.
வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத்தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.ஒருவன் எப்போது நிறைவுத்தன்மை அடையமுடியும்? தேவைகள் பூர்த்தியடையும்போது நிறைவுத்தன்மை ஏற்படும்.தேவைகளை எப்படி பட்டியலிடுவது...?
மனிதனின் பொதுவான தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம்.
ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம்.
1.உடல் நலம் 2.நீளாயுள் 3.நிறைசெல்வம் 4.உயர்புகழ் 5.மெய்ஞானம்.
இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை.உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும்."வாழ்க வளமுடன்" என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும்போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்றுவாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன்பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது.அது என்ன....?"வாழ்க வளமுடன்" என்று இன்னொருமுறை உச்சரித்து பாருங்கள். உங்களின் உள்நாக்கு அதாவது தொண்டையின் உள் மேல்பகுதியில் “ழ்” எனும்போது ஒரு அழுத்தம் நிகழ்வதை உங்களால் உணரமுடியும்.உள்நாக்கின் உச்சியில் அதாவது நெற்றிக்கும், பின்மண்டையில் பிடறிக்கண்ணுக்கும் நேர்கோட்டில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது. அந்த சூட்சுமம் இந்த பிரபஞ்சத்தோடு நேரடியாக தொடர்புகொண்டிருக்கும் சக்தி. உங்களின் எண்ணங்களில் எழும்தேவைகளை பிரபஞ்சத்தில் கட்டளையாக மாற்றி அதனை பெற்றுத்தரும் சூட்சுமம் அது.உங்கள் எண்ணம் வலிமைமிக்கது என்றால், அது உங்கள் மூலமாகவே செயலுக்கு வந்துவிடும். கொஞ்சம் பலவீனமான எண்ணம் என்றாலும் நீங்கள் கவலைப்படத்தேவையில்லை... அட்லீஸ்ட்.... நீங்கள் பேரப்பிள்ளைகளை எடுப்பதற்குள்ளாகவாவது செயலுக்கு வந்துவிடும். எண்ணம் எப்போதும் வீணாவது இல்லை. அதனால் எண்ணுவதை வலிமையாக எண்ணுவது சாலச்சிறந்தது.அந்த சூட்சுமப்பகுதியை அறிவியலில் பீனியல் சுரப்பி என்பார்கள். ஆன்மிகத்தில் துரியம் என்பார்கள். "வாழ்க வளமுடன்" என உச்சரிக்கும் போதும் உங்களின் துரியமையம் கட்டளைகளை பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். ஒருவர் உங்களை வாழ்த்தும்போது நீங்கள் வளமுடன் வாழ கட்டளைகளை அவர் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம். "வாழ்க வளமுடன்" வெறும் வாழ்த்துச்சொல் அல்ல ; அது ஒரு மந்திரச்சொல்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Saturday, December 23, 2017

யார்_நண்பன்?

அர்ஜுனன் அளித்த அம்புப் படுக்கையில் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு உரைத்த கதை
ஆல மரப் பொந்து ஒன்றில் எலி வாழ்ந்து வருகிறது. இயற்கையின் விதிப்படி பூனைக்கு அது ஆகாரம் என்பதால், ஆலமரப் பொந்தின் அருகே எலியின் வரவை எதிர் நோக்கி பூனையொன்று காத்து இருக்கிறது. பூனைக்கு பயந்து எலியும் வலைக்கு உள்ளேயே வாழ்ந்து வருகிறது.ஒரு சமயம் அவ்வழியே சென்ற வேடன் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் வலை விரிக்க, பூனை அதில் அகப்பட்டுக்கொண்டது. இனி பகைவனின் பயம் ஒழிந்தே விட்டது என்று குதூகலித்த எலியும் மெதுவாக வலையை விட்டு வெளியெ வருகிறது. வெளியே வந்த நொடி, வேறு வகையில் ஆபத்தான சூழ்நிலை.கோட்டான் எலியின் மேல் எந்தக் கணமும் பாய்ந்து குதற தயாராய் காத்திருக்க, வேறு புறமாக ஓடி ஒளியலாம் என்றால் அங்கே கீரிப்பிள்ளையின் கொடூரம். என்னதான் செய்யும் எலி? எதிரி என்றாலும் தற்போது துணிந்து அணுகக்கூடிய நிலையில் இருப்பது வலையில் மாட்டியிருக்கும் பூனை மட்டுமே.அதன் தலைக்கே ஆபத்து எனும் நிலையில் தவிப்பதால் பூனையே தாற்காலிகமாக நமக்கு உதவக்கூடியவன் என்று முடிவு செய்கிறது எலி.அதனிடம் தன் நிலையைக் கூறி, அதனிடத்தில் அண்டி இடம் கொடுத்தால், கோட்டானோ, கீரியோ தன்னை ஒன்றும் செய்யாது, என்று முடிவு செய்து பூனையை அணுகி நண்பனாக்கிக் கொள்கிறது. பதிலுக்கு தானும் வலையை கடித்துப் பூனையை காப்பாற்றுவதாக சத்தியம் செய்கிறது.சிறிது நேரம் காத்திருந்த கீரியும் கோட்டானும் பூனையின் நண்பனான எலியை இப்போதைக்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் அதன் வழியே சென்று விட, வலையில் மாட்டியிருந்த போதும் பூனையின் உதவியால் சாமர்த்தியமாக அப்போது எலி தப்பியது.இனி வலையை அறுத்து காப்பாற்று என்று பூனை கேட்க, எலியொ மறுத்து பேசுகிறது."நீ உன் சத்தியத்தை அல்லவா மீறுகிறாய்" என்கிறது பூனை."உன்னை காப்பாற்ற மாட்டேன் என்று சொல்லவில்லை.வேடன் வரும் சமயமாய் வலையை அறுத்து விட்டால், உயிர் காத்துக்கொள்வதே உன் தலையாய கவனமாய் இருக்க, என்னை விட்டு விடுவாய். இப்பொழுது வலையை அறுத்தால், அடுத்து உன் பசிக்கு நானல்லவோ உணவு" என்று புத்திசாலி எலியின் பதில்.சொன்னசொல் தவறாமல் வேடன் வரும் சமயமாய் எலி வலையை அறுத்து பூனையை தப்பிக்க விடுகிறது .மறுபடி தன் பொந்துக்குள் சென்று ஒளிந்து கொண்ட எலியுடன் நைச்சியமாய் பேச்சு கொடுக்கிறது பூனை."என் உயிரைக் காத்த நீ இனி என் நண்பன், இருவரும் இனி நல்ல நண்பர்களாய் வாழலாம்"அப்போது புத்திசாலி எலி 
"அது எப்படி முடியும்? 
நீ என் விரோதி என்பது இயற்கையின் நியதி..!. 
உன் ஆகாரமே நான் தான்.
இருவருக்கும் சாதகமான காரியத்திற்காக தோன்றிய நம் நட்பு அத்துடன் முடிந்தது.
உறவும் நட்பும் கூட காரிய காரணத்திற்காகத் தான். தேவைகள் முடிந்து விட்டால் அங்கு நட்பும் உறவும் யாரும் பாராட்டுவதில்லை. இது உலக இயல்பு, நியதி" என்கிறது எலி. இங்கு எலியின் புத்தி சாதூர்யம் நட்பு பாராட்டும் போது பல நேரம் நமக்கும் அவசியமாகிறது.இல்லையெனில், நைச்சியமாகப் பேசும் பசுத்தோல் போர்த்திய புலிகளிடம் சிக்கித் தவிக்க நேரிடும்.இந்த நீதி தர்மத்திற்கு ஏற்புடையது. சிறந்த அறிவை உபயோகப்படுத்தி நண்பன், பகைவன், வித்தியாசம், சண்டை, சமாதான சந்தர்ப்பம், ஆபத்திலிருந்து விடுபடும் புத்தி, பகைவனுக்கு சமமான பலம் இருக்குமானால் அவர்களிடம் சமாதானம் செய்து கொண்டு அதன் வழியாக காரியத்தை சாதித்தல் போன்ற வழிகளையும் சொல்லி முடித்தார்.மன்னனுக்கு மட்டுமல்ல நமக்கும் உபயோகமான கதை இது.
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Thursday, December 21, 2017

நன்றியுணர்வு


நன்றியுணர்வு மற்றும் பாராட்டப்பழகுவோம் Appreciate Others இவை மட்டும் இருந்தால் கண்டிப்பாக மிகப்பெரிய செல்வந்தராக ஆக முடியும்.
நன்றியையும் பாராட்டையும் மனதில் நினைத்தால் மட்டும் போதாது.
உடனே அதை வெளிப்படுத்த வேண்டும்.நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவருக்கு அதை உடனே தெரிவித்துவிட வேண்டும்.
நன்றி, பாராட்டு மற்றும் மதிப்பை உரியவருக்கு கொடுக்கும் போதுதான் அவர்கள் மீண்டும் அதை கூடுதல் மதிப்புடன் திருப்பிக் கொடுப்பார்கள்.நாம் மற்றவர்களுக்கு நன்றியுள்ளவராக இருந்து, அதை உடனே தெரிவிப்பதன் மூலம்,அவர்கள் நமக்கு மீண்டும் கூடுதல் உதவியைச் செய்வார்கள்.
உங்களது நன்றியை தெரிவிக்காவிட்டால்,அத்துடன் அவர்களின் தொடர்பு முடிந்து போகவோஅல்லது அவர்களின் உதவி குறைந்துபோகவோ கூடும்.

நன்றி சொல்லும்போது அதை உண்மையாக சொல்லுங்கள்.

நன்றியைத் தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்லுங்கள்.

நன்றி சொல்லும் போது வார்த்தைகளை விழுங்காதீர்கள்.
முணுமுணுக்காதீர்கள்.

மகிழ்ச்சியுடன் நன்றி சொல்வது, உங்களின் சொல்லில்
வெளிப்பட வேண்டும்.

நன்றி சொல்பவரை, நேருக்கு நேர் அவர் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.

நேருக்கு நேர் பார்ப்பது, கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும்.
நன்றிக்கு உரியவர் பார்க்கவும் கூடியவராவர்.

நன்றி சொல்லும் போது அவர்களின் பெயரையும் சேர்த்துச் சொல்லுங்கள்.தனிப்பட்ட தனி ஒருவருக்கானதாக இருக்கும்படி நன்றியைப் பெயருடன் சேர்த்துச் சொல்லுங்கள் .கூடுதல் நெருக்கத்துடன் இருக்கும்.

காலத்தைக் கணித்து நன்றி சொல்லுங்கள்.

உங்கள் பாராட்டை, நன்றியைக் கூற சரியான நேரத்தைப் பார்த்துத் தேர்வு செய்யுங்கள்.

சாதாரணமானவர்கள் வெளிப்படையாகத் தெரிபவற்றுக்கு மட்டும் நன்றி சொல்வார்கள்.

உயர்ந்தவர்கள் வெளிப்படையாகத் தெரியாத உதவிகளையும் அறிந்து நன்றி சொல்வார்கள்.

சரியான இடத்தில் முறையாக நன்றி சொல்லும் பழக்கம் உங்களுக்கு ஒரு வாழ்நாள் முழுமைக்குமான சொத்தாக இருக்கும்..

ஆம்.,நண்பர்களே..,
நல்லதை நினைப்போம்;
நல்லதை செய்வோம்;
நல்லதே நடக்கும் என்று நம்பவேண்டாம்
நல்லது மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது  Any TIME
மிகுந்த மகிழ்ச்சியுடனும் நன்றியுடணர்வுடனும் நன்றி,நன்றி,நன்றி....

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Tuesday, December 19, 2017

விளம்பரம்:- இது நம்மை எப்படியெல்லாம் ஆட்டு வைக்கிறது !

அரைமணி நேரம் தலையில் எண்ணை ஊறினாலும் உள்ளே இறங்காது என்று பகுத்தறிவு பேசிய நம்மை அரை நிமிடம் கூட தலையில் ஊறாத "ஷாம்பு" தலைக்கு "ப்ரோ விட்டமின் B" தரும் என்று நம்ப வைக்கிறது. சீயக்காய் ஷாம்பு வாக வந்தால்தான் தலையில் வேலை செய்யும் என நம்ப வைத்ததும் விளம்பரம்தான்.
உப்பில் பல் தேய்த்தது தவறு என்று நம்ப வைத்ததும் விளம்பரம்தான். இன்று உங்க பேஸ்டில் உப்பு இருக்கா என்று காஜல் அகர்வால் கேட்பதும் விளம்பரம் தான்.
வாங்கும் போதே 30 சதவிகிதம் வரை நஷ்டத்துடன் நாம் வாங்கும் ஒரே பண்டம் தங்கம்தான். அதை சந்தோஷமாக சிரித்தபடி வாங்க வைத்தது "வளையல் திருவிழா"...விளம்பரம்தான்.
சரி..அதை அதே 30 சதவிகிதம் வரை நஷ்டத்துடன் விற்கும் போதும் சிரித்தபடி நம்மை விற்று "கனவுகளை நினைவாக்க" சொல்வதும் விளம்பரம்தான்.
3 லட்சம் சதுர அடியில் அரண்மனை உங்களுக்காக கட்டப்படுவதாக சினேகா சத்தியம் செய்வது எப்பேர்பட்ட மகிழ்ச்சி.. ! அத்தனை பெரிய கட்டிடத்தில் நீங்கள் காரில் வந்தாலும் உங்களுக்கு "பார்க்கிங்" கூட கிடையாது என்பது உங்களுக்கு புரிவதில்லை. எல்லாம் விளம்பரம்தான்.
1000 ரூபாய் புடவையை 3000 ரூபாய்க்கு வாங்கி வெளியே வரும் போது ஒரு தொன்னை சக்கரைபொங்கல் தருகிறான் பாருங்கள். அவன் நல்லவன். 30 வினாடி விளம்பரத்தில் நடிக்க கமலுக்கு 3 கோடி தரும் அவர் அதை யார் தலையில் கட்டுவார் என்று கேட்க நம்மை மறக்க அடிப்பதும் விளம்பரம்தான்.
விற்கப்படும் வீடுகளுக்கு மனைகளுக்கு சாக்கடை வசதிகள் இருக்கிறதா? பாதுகாக்கப் பட்ட குடிநீர் வசதி இருக்கிறதா என்று யோசிக்க விடாமல் "சிங்களா டிசைட் டபுளா ஒகே" பண்ண ராஜா சொல்றாரு பாருங்க ...அங்க நிக்குது விளம்பரம்.
அமிர்தா எல்லோருக்கும் வெளிநாட்டில் வேலை கொடுத்ததா?
ராதிகாவை கேட்பீர்களா?
பூஸ்ட் / ஹார்லிக்ஸ் இதுவரை உலகில் யாரையாவது வளர்த்து இருக்கிறது என்று கேட்டிருக்கீர்களா? ஆனால் இந்தியாவில் நடக்குதப்பா! கபில்தேவ், சச்சின், விராட் கோலி இப்படி எல்லோரும் சொல்றாங்களே!
நேற்றுவரை எண்ணை கெடுதல் என்றவன் இன்று பூரி சாப்பிட்டால் "கார்பொரேட் மீட்டிங்" கில் பிரமாதமான தீர்வு சொல்வான் என்பதை சொல்வதும் விளம்பரம்தான்.
ஒரு எண்ணையில் வடை சுட்டால் உங்களுக்கு ரத்த கொதிப்பு, சக்கரை நோய், சத்து குறைவு நரம்பு தளர்ச்சி நியாபக மறதி இப்படி எல்லா பிரச்சனையும் போகும் என்பது தெரியுமா? (உள்மூலம் வெளி மூலம் உள்பட .. :) ) வைட்டமின் A முதல் Z வரை இருக்குப்பா !! விளம்பரம்தான்.
கொஞ்சம் கூட சுயசிந்தனை அற்றவர்களா நம்மை இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்க அடிப்பது உங்களுக்கு தெரியவில்லை. அந்த மட்டில் அவர்களுக்கு வெற்றியே.
இத்தனை சொல்றேனே...இதை நீங்கள் share பண்ணி நாலு பேர் அறிய செய்வீர்களா என்ன?
மாட்டீர்கள்.
காரணம் இது விளம்பரம் இல்லை.
நிதர்சனம்.

Monday, December 18, 2017

அஹோபில மடம் 44-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள்

வெயிலின் கடுமையால் காகங்கள் கூட காணாமல் போயிருந்தன.மரங்கள் மூச்சு விடுவதை மறந்து தலை தாழ்ந்து நின்றிருந்தன.
சூரியன் மறந்து போய் ஊருக்குள் வந்துவிட்டானோ என்று எண்ணத் தோன்றும் வெப்பம். அக்ரஹார வீதியில் வெண்மணல் தகித்தது. மனித நடமாட்டம் இல்லாத ஒரு பாலைவனம் போல் தெரிந்தது வீதி.
‘யாரோ சாமி வந்திருக்குன்னு சொன்னாங்க. ஊர்ல யாருமே இல்லியே’ என்று எண்ணியவாறு சைக்கிளை மிதித்தேன். பெயர் தான் நவாபு. ஆனால் அலுமினிய பாத்திரங்கள் விற்றுத்தான் சோறு. வாப்பா சொன்னபோதே படித்திருக்கலாம். தொழில் கற்றுக்கொள்ள வேண்டி பாத்திரக்கடை காதரிடம் வேலைக்குப் போனது எவ்வளவு பெரிய தவறு?
இப்போது நினைத்துப் பயனில்லை. ‘அம்பது வயசில வந்துச்சாம் அறிவு’ என்று அம்மா சொல்லும். வயிறு என்று ஒன்று இருக்கிறது. அதற்குத் தன்மானம் எல்லாம் கிடையாது.
இந்த வயதில் அரேபியாவுக்கெல்லாம் போய் ஒட்டகம் மேய்க்க முடியாது. போகிற போக்கைப் பார்த்தால் இந்த ஊரே அரேபியா போல் கொதிக்கும் போல் தெரிகிறது. அவ்வளவு வெயில்.
சைக்கிளை விட்டு இறங்கி ஒரு மர நிழலில் நின்றேன். ஒரு வாய் தண்ணீர் குடித்தால் தேவலாம் போல் இருந்தது.அக்கிரஹாரத்தில் யார் தண்ணீர் தரப் போகிறார்கள் ? வாப்பா காலத்தில் தெருவில் நடக்கவே விட மாட்டார்கள். இப்போது எவ்வளவோ மேல். வியாபாரம் செய்யும் அளவு முன்னேறி உள்ளது.
அப்போது தான் கவனித்தேன். எதிர் வீட்டில் வாசல் திண்ணையில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். 4, 5 சின்னப் பையநன்கள் கீழே உட்கார்ந்திருந்தர்கள். ஏதோ பாடம் படிப்பது போல் தெரிந்தது. பெரியவருக்கு உடம்பு ரொம்பவும் தள்ளாமையாக இருந்தது.
உடம்பு முழுவதும் நாமம் போட்டிருந்தார் போல் தெரிந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று கைலியை இறக்கிவிட்டேன். பெரியவர் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தார்.
எதற்கு வம்பு என்று சைக்கிளைக் கிளப்பிக்கொண்டு நடந்தேன். சொல்ல மறந்துபிட்டேன். வீதியில் நுழைந்ததும் டயர் பஞ்சரானது. எனவே தள்ளியபடியே தான் நடக்க வேண்டும்.
வீதியின் கிழக்குக் கோடிவரை நடந்தேன். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் கதவு திறந்தே இருந்தது. ஆனால் வெளியில் யாரும் தென்படவில்லை. ‘பாத்திரம், அலுமினிய பாத்திரம், இண்டோலியப் பாத்திரம், பாத்திரம்..’ என்று கூவிப் பார்தேன்.
ஒரே ஒரு வீட்டு உள்ளிருந்து ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஆண் எட்டிப் பார்த்தார்.’ நன்னாருக்கு அக்ரஹாரத்துலெ அலுமினியப் பாத்ரம் விக்கறான் கைலி கட்டிண்டு.. கலி நன்னா வேலை செய்யறது..’ என்று காதுபட பேசிச் சென்றார். என்னைப் பார்த்தாலே தீட்டுப் பட்டுவிடும் என்று நினைத்தாரோ என்னவோ. நாட்டு ஜனாதிபதி துலுக்கனாக இருக்கலாம் போல, தெருவுலெ மட்டும் வரக்கூடாது என்பது என்ன நியாயமோ தெரியவில்லை. இந்திரா காந்தி கொஞ்சம் இந்தப்பக்கம் பார்த்தால் தேவலாம்.
அப்போதுதான் அது உறைத்தது. அடச்சீ .. தப்பு செஞ்சுட்டோமே.. அக்ரஹாரத்துலே அலுமினியப் பாத்திரம் யாரும் வாங்க மாட்டாங்களே ! இதுக்குப் போயா இங்கே வந்தோம் இந்த வெய்யில்லே ..
வந்த வழியே நடந்து சென்றேன். வெயில், தண்ணீர் இல்லை, பாத்திரம் விற்கவில்லை, சைக்கிள் பஞ்சர், பசி, தாகம்.. பாழாப்போன கிராமத்துலே சோத்துக்குக்கூட ஒரு கடை இல்லை. காலையில் குடிச்ச கஞ்சி தான்.
மெள்ள தெருமுனைக்கு வந்துவிட்டேன். இன்னும் அரை மணி நடந்தால் மெயின் ரோடு வந்துவிடும். பிறகு சைக்கிள் தள்ளுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.
‘யோவ் பாத்திரம், பாத்திரம்..’ என்று கத்திக்கொண்டே ஒரு பிராமணப்பையன் அந்தப் பெரியவர் இருந்த வீட்டில் இருந்து ஓடி வந்தான். ‘உடனே வாப்பா.. பெரியவர் கூப்பிடுறார்’, என்றான். பெரியவருக்கு அவன் என்னவோ பெயர் சொன்னார். எனக்குப் புரியவில்லை
என்ன தப்புப் பண்ணினேன் என்று நினைத்துப் பார்த்தேன். கைலியைக் கூட இறக்கித் தானே விட்டிருந்தேன் ?ஒரு வேளை அந்த வீட்டுக்கு முன்னால் நிற்கக் கூடாதோ! அதான் கூப்புடுறாங்களோ ! என்று பலவித சிந்தனைகள்.
வந்தது வரட்டும்னு வண்டியைத் தள்ளீக்கொண்டு பெரியவர் இருந்த வீட்டு வாசலுக்குப் போனேன். அப்போது தான் பார்த்தேன். பெரியவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும். ஒரு பீடம் மாதிரி இருந்தது. அதன் மேல் உட்கார்ந்திருந்தார்.
மார்பு, வயிறு, கை, நெற்றி என்று நாமம் போட்டிருந்தார். நெற்றி நாமம் மட்டும் சற்று தடிமனாக இருந்தது.
வீட்டுக்கு உள்ளே இன்னும் பலர் இருந்தாங்க. வேட்டி மட்டும் கட்டி இருந்தாங்க. நாமம் போட்டிருந்தாங்க. பல பிராமணப் பையங்க வேதமோ இல்ல வேற ஏதோ ஓதிகிட்டிருந்தார்கள்.
பெரியவர் என்னை உட்காரச்சொன்னார். ஒரு ஓரமா உட்கார்ந்தேன். அதுக்குள்ளே ஒரு ஐயரு வந்து,’ கொஞ்சம் தள்ளி உக்காருப்பா..’, என்று அதட்டினார். என்னைப் பெரியவர் உட்காரச் சொன்னது அந்த ஐயருக்குப் பிடிக்கவில்லை போல.
பெரியவர் அந்த ஐயரை கோவமா ஒரு பார்வை பார்த்தார். ஐயரு, ‘அடியேன்..’ , என்னு தொடங்கி என்னமோ சொல்லிப் போனார். பின்னாடி போய் நின்னுக்கிட்டார்.
அப்பத்தான் கவனிச்சேன். எல்லாரும் வெள்ளை வேட்டி தார்பாச்சி வடக்கத்திக்காரங்க மாதிரி கட்டி இருந்தாங்க. பெரியவர் மட்டும் காவி கலர்ல துண்டு கட்டி இருந்தாரு. கையிலே மூணு கழிங்கள ஒண்ணாக் கட்டி, அது உச்சிலெ ஒரு துணிலெ கொடி போல இருந்துச்சு. அந்தக் கழிங்களெ கையிலெ வெச்சிருந்தாரு.
‘தமிழ் தெரியுமா?’,ன்னு ஒரு கம்பீரமான குரல் கேட்டுச்சு. தலை நிமிர்ந்து பார்தேன். பெரியவர் தான் பேசியிரு ந்தார்.
தெரியும்னு தலை ஆட்டினேன். என்னமோ அவ்ர்கிட்டே பேசுறதே கொஞ்சம் பயமா இருந்துச்சு. அவரு முள்ளு மாதிரி தாடிவெச்சிருந்தார். தலைலேயும் வெள்ளை முடி. அசப்புல சிங்கம் மாதிரி இருந்துச்சு.
‘எந்த ஊர் உனக்கு?’
‘பக்கத்துலே வேலூர் பக்கம் சாமி’
‘சாப்டாச்சா ?’
‘ஆச்சுங்க சாமி. கருக்கல்ல கஞ்சி குடிச்சேங்க’.
பெரியவருக்குப் புரியவில்லை. அருகில் இருந்த நாமம் போட்ட இன்னொரு ஐயரு,’ அவன் கார்தாலே கஞ்சி சாப்டானாம் அடியேன்..’, என்று சொன்னார்.
பெரியவர் உள்ளே பார்த்து,’ததீயாராதனம் ஆயிடுத்தா?’, என்று கேட்டார்.
இன்னொரு ஐயர் உள்ளே இருந்து ஓடி வந்து ஏதோ சொன்னார். பெரியவர் கேட்க அந்த ஐயர் ஏதோ சொன்னார். பாஷை புரியவில்லை.
இரண்டு நிமிஷம் நிசப்தம். ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோம் என்று நினைத்தேன். இன்று நேரமே சரியில்லை. டயர் பஞ்சர், வெயில், பாத்திரம் விற்கவில்லை, இப்போது இங்கு மாட்டிக்கொண்டி ருக்கிறேன்.
மேலே அண்ணாந்து பார்த்தேன். இடி இடிப்பது போல் பெரியவர் உள்ளே இருந்து வந்த ஐயரிடம் ஏதோ உத்தரவு போட்டார். அந்த ஐயர் உடனே கீழே விழுந்து வணங்கி உள்ளே சென்றார்.
‘எத்தனை பிள்ளை குட்டி உனக்கு?’, பெரியவர் என்னிடம் கேட்டார்.
‘மூன்று பெண்கள் சாமி’, என்றேன். கொஞ்சம் பயமாகவே இருந்தது.
‘வீடு வாசல் இருக்கா?’
‘அப்பா வைத்த வீடு ஒண்ணு இருக்கு சாமி, பாத்திரம் வியாபாரம் தான் தொழில்’, என்றேன்.
என்னவோ அந்தப் பெரியவர் பிடித்துப் போய் விட்டார். இந்தக் கேள்விகளை யாரும் என்னிடம் கேட்டதில்லை. ஏதோ ஒரு அக்கறையுடன் கேட்பது போல் தோன்றியது.
‘பொண்கள் படிக்கறாளா?’, என்றார்.
‘ஆமாங்கையா, ஸ்கோலு போவுறாங்க’, என்றேன். வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும் அவருக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக என் பயம் குறையத் தொடங்கியது. என் குரல் சற்று வெளியே வருவது போல் உணர்ந்தேன். மற்ற ஐயர்கள் எல்லாரும் பெரியவரிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே மரியாதையுடன் இருப்பது போல் பட்டது. ஓரிடத்தில் தீ எரியும் போது அதிலிருந்து விலகி இருந்து பார்ப்பது போல் நின்றிருந்தார்கள்.
‘இங்கே சாதம் போட்டா சாப்பிடறியா?’
அவர் அது தான் கேட்டாரா அல்லது பசி மயக்கத்தில் அப்படிக் காதில் விழுந்ததா தெரியவில்லை. குழப்பத்துடன் அவரையே பார்த்தேன்.
‘சோறு போட்டா சாப்புடுவியான்னு கேக்குறாரு..’, என்றார் இன்னொரு ஐயர். அவர் குரலில் சற்று எரிச்சல் தெரிந்தது.
‘சாப்புடுறேன் சாமி’; என்றேன் நன்றியுடன். ஏனோ எனக்கு நெஞ்சை அடைத்தது. காலையில் கஞ்சி குடித்தது.
பக்கத்தில் ஒரு கொட்டகையில் சோறு போட்டார்கள். இரண்டு ஆள் சாப்பாடு சாப்பிட்டேன். மறு முறை இவ்வளவு சோறு எங்கே கிடைக்கும்னு தெரியவில்லை. உப்பு, காரம் எதுவும் இல்லை. ஐயமாரெல்லாம் இப்படித்தான் சாப்பிடுவார்கள் போல.
சாப்பிட்டு முடித்ததும் பெரியவர் கூப்பிடுவதாகச் சொன்னார்கள்.
‘சாப்டாச்சா?’ என்றார் புன்முறுவலுடன். தலையை ஆட்டினேன். இவ்வளவு சாப்பிட்டு எவ்வளவு நாளாகிறது !
‘நன்னா இருந்துதா?’, என்று சிரித்தபடியே கேட்டர் பெரியவர். பதில் சொல்லாமல் மையமாக நின்றேன்.
‘பாத்திரம் எல்லாம் வித்துடுமா?’, என்று மறுபடியும் அவரே கட்டார்.
‘காலைலேர்ந்து ஒண்ணும் விக்கலீங்கையா. இங்கே ஐயமாரு இடம்னு தெரியாம வந்துட்டேன். அலுமினியம் வாங்க மாட்டாங்க. இனிமே வேற ஊர் தான் போகணும்’, என்றேன்.
‘மொத்தமா என்ன விலை?’, என்றார்.
புரியாமல் நின்றேன்.
‘எல்லாப் பாத்திரமும் வித்தா என்ன விலை கிடைக்கும்?’, என்று வேறொருவர் கேட்டார்.
‘100 ரூபா பெயரும் சாமி. அதுக்கு 2, 3 நாள் ஆகும்’, என்றேன் புரியாமல்.
பெரியவர் அதிகாரி போல் இருந்த ஒருவரைப் பார்த்தார். அவர் உடனே 120 ரூபாய் எடுத்துக் கொடுத்து, ’எல்லாத்தையும் நாங்களே வாங்கிக்கறோம்’, என்றார்.
ஒன்றும் புரியவில்லை. இது ஏதோ மடம் போல் தெரிகிறது. ஐயமார் மடம். அலுமினியம் வாங்கறாங்களே.
நம்பவும் முடியவில்லை. ஆனால் பணம் கொடுத்து விட்டார்கள்.
அப்போது பெரியவர் பேசினார்.
‘எனக்கு ஒரு உபகாரம் பண்ணணும். இந்த பாத்திரங்களை எல்லாம் கொண்டு போய் வடக்கு வீதிக்குப் பின்னாடி குடியானவத் தெரு இருக்கு. அங்க ஆத்துக்கு ஒரு பாத்திரம்னு குடுக்கணும். குடுக்கறயா ?’, என்று சொல்லி என்னை ஏறிட்டுப் பார்த்தார்.
இறைவன் கருணை வடிவானவன் என்று வாப்பா அடிக்கடி சொல்வார்
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Saturday, December 16, 2017

சிறுகதை : வெறும் பணம் !

அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது.
`உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன்
`கோகிலம்` என்றாள்
`கோகிலாவா` என மறுபடியும் கேட்டேன்.

`இல்லை சார் கோகிலம்` என அழுத்தமாகச் சொன்னாள். இப்படி ஒரு பெயரை முதன்முறையாக இப்போது தான் கேட்கிறேன்.
`எந்த ஊர்` எனக்கேட்டேன்.

`தெக்கே சார். பிள்ளைகுட்டிகள் யாருமில்லை. புருஷன் செத்துப்போயிட்டார். இரண்டு வருசமா தாம்பரத்துல ஒரு வீட்ல வேலைக்கு இருந்தேன். அவங்க இப்போது துபாய்க்கு வேலை மாறிப்போயிட்டாங்க`. என்றாள்

`எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்குறே `

`நீங்க குடுக்குறதை குடுங்க. ஆனா தங்க இடமும் சாப்பாடும் தரணும்`

இதுவரை எந்த வேலைக்காரியையும் என் வீட்டோடு தங்கியதில்லை. அப்படித் தங்கிக் கொள்ளும்படியான தனியாக அறை எதுவும் எனது வீட்டில் இல்லை.
`வீடு சின்னது, இதுல நீ எங்கம்மா தங்குவே` எனக்கேட்டேன்

`கிச்சன்லயே படுத்துகிடுவேன். இந்தப் பையை வைக்க இடம் இருந்தா போதும்`. என்றாள்

அவள் குரலில் இருந்த துயரம் அவளது இயலாமையைத் துல்லியமாக வெளிப்படுத்தியது

என் மனைவியும் அவளிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டாள். முடிவில் அவளைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்வது என முடிவானது.

சாப்பாட்டின் ருசி என்பது வீட்டுக்கு ஒரு மாதிரியானது. அதுவும் பலஆண்டுகளாக ருசித்துப் பழகிவிட்டால் வேற்று ஆளின் சமையலை சாப்பிட முடியாது. என் மனைவி மிகவும் நன்றாகச் சமைப்பாள். ஆகவே புதிய சமையற்காரியின் சாப்பாட்டினை எப்படிச் சாப்பிடுவது என யோசனையாக இருந்தது. ஆனால் என் மனைவி கால்முறிவு ஏற்பட்டுப் படுக்கையில் கிடந்து இப்போது தான் தேறி வருகிறாள். ஆகவே புதிதாகச் சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை உருவாகியது

கோகிலம் சமைக்கத் துவங்கிய முதல்நாள் அவள் போட்டுக் கொடுத்த காபி. செய்து வைத்த சட்னி, சாம்பார் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. என் மனைவி அவளைக் கோபத்தில் திட்டவே செய்தாள்.

மறுநாள் கோகிலம் சமைத்த போது முட்டைக்கோஸ் வேகவைத்த சட்டி கருகிப்போய்விட்டது.

`அடுப்பை கவனிக்காமல் என்னடி யோசனை `என என் மனைவி அவளிடம் சண்டையிட்டாள்

`இல்லம்மா. என்னை அறியாமல் ஏதோ நினைப்பு வந்துருது. அந்த நினைப்பு வந்தவுடன் அழுகை அழுகையாக வருது `என்றாள் கோகிலம்

`நீ ஒப்பாரி வைக்கிறதுக்கு என் வீடு தானா கிடைச்சது. கவனமா வேலை பாக்குறதா இருந்த இரு. இல்லே. வேற வீடு பாத்துக்கோ` என என் மனைவி அவளை விரட்டினாள்

கோகிலம் சேலை முந்தானையால் அழுகையைத் துடைத்தபடியே சரிம்மா என்று கரிபிடித்த சட்டியை கிழே இறக்கிவைத்தாள்.

கோகிலம் எப்போது சாப்பிடுவாள். எப்போது குளிப்பாள் என யாருக்கும் தெரியாது. நாங்கள் எழுந்து கொள்வதற்கு முன்பாக அவள் குளித்துத் தயராகிக் காபி டிக்காஷனை போட்டு வைத்திருப்பாள். சமையற்கட்டின் ஒரத்தில் எதையும் விரித்துக் கொள்ளாமல் வெறும் தரையில் தான் படுத்துக் கொள்வாள். சமையல் வேலையில்லாத நேரங்களில் டிவி பார்ப்பதோ, அரட்டை அடிப்பதோ எதுவும் கிடையாது. அவளாகவே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவாள். பைசா சுத்தமாகச் சில்லறை மீதம் தந்துவிடுவாள். சமையல் வேலைகள் தவிர்த்து வீட்டை சுத்தம் செய்வது. பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது. படுக்கை விரிப்புகளைச் சுத்தம் செய்வது. செருப்பைக் கழுவி துடைத்து வைப்பது எனச் சகல காரியங்களையும் கர்மசிரத்தையாகச் செய்து கொண்டிருந்தாள்.

பத்து நாளில் அவளது சாப்பாடு எங்களுக்குப் பிடித்துப் போகத் துவங்கியது. வீட்டில் நானும் என் மனைவியும் மட்டுமே இருந்தோம். மூத்தமகன் மும்பையில் தன் மனைவி பிள்ளைகளுடன் இருந்தான். இளைய மகள் டெல்லியில் வசித்து வந்தாள். அவர்கள் விடுமுறைக்கு வருவதோடு சரி.
நான் வங்கிப்பணியில் ஒய்வு பெற்றவன் என்பதால் அடிக்கடி நண்பர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவதுண்டு. அப்படி ஒருமுறை நாலைந்து நண்பர்கள் வந்திருந்த போது கோகிலம் கேரட் அல்வா செய்திருந்தாள்.

அப்படி ஒரு சுவையான அல்வாயை சாப்பிட்டதேயில்லை என நண்பர்கள் புகழாரம் செய்தார்கள். அல்வா எடுத்த ஸ்பூனை வழித்துத் தின்றான் ஒரு நண்பன்.
கோகிலம் அந்தப் பாராட்டுகளைக் கேட்டுக் கொண்டதோடு சரி. அதை நினைத்து பெருமைப்பட்டதாகவோ, சந்தோஷம் கொண்டதாகவே தெரியவில்லை. விதவிதமான சிற்றுண்டிகள், காய்கறி வகைகள், துவையல்கள், இனிப்பு வகைகள் எனச் செய்து கொடுத்தபடியே இருந்தாள். மாத சம்பளத்தை அவளிடம் தந்த போது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றாள்

உண்மையில் அவள் வந்த ஒரு மாத காலத்தில் நானும் என் மனைவியும் ஒரு கிலோ எடை அதிகமாகியிருந்தோம். கோகிலம் என் மனைவியின் தங்கையைப் போலவே ஆகியிருந்தாள். ஒரு நாளில் ஆயிரம் முறை கோகிலம், கோகிலம் என என் மனைவி அவளை அழைத்தபடியே இருந்தாள். அவளும் சுணக்கமின்றி ஒடியோடி வந்து உதவிகள் செய்தாள்.

சில நேரம் நாங்கள் சினிமாவிற்குப் போகும்போது அவள் வீட்டில் தனியாக இருப்பாள். ஒருமுறை நாங்கள் திருப்பதி போய்வந்த போது இரண்டு நாட்கள் அவள் மட்டுமே வீட்டிலிருந்தாள். வீடே காலியாக இருந்தாலும் அவள் சமையற்கட்டில் தான் உறங்கினாள். ஒரு பைசாவை எடுத்து செலவழிக்கவில்லை. சுவையான எந்த உணவையும் சாப்பிடுவதில்லை.

ஒருமுறை கோகிலம் சாப்பிடும் போது மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்

வெறும்சோறு. அதில் கொஞ்சம் தண்ணீர். தொட்டுக் கொள்ள ஊறுகாய்.

ஏன் இந்தப்பெண் இப்படிப் பிடிவாதமாகயிருக்கிறாள் என ஆத்திரமாக வந்தது. என் மனைவியிடம் சொல்லி அவள் விரும்பியதை சாப்பிடும்படியாகச் சொன்னேன்.
அதைக்கேட்டு என் மனைவி சொன்னாள்

`நானும் சொல்லிப்பார்த்துட்டேன். அவ கேட்கமாட்டாள் `

மும்பையில் இருந்து என் மகனும் மருமகளும் பேரப்பிள்ளைகளும் வந்திருந்த போது கோகிலத்தின் விருந்தை சாப்பிட்டு மயங்கிப் போனார்கள். தன்னோடு அவளை மும்பைக்கு அழைத்துப் போய்விடுகிறேன் என மகன் சொல்லிக் கொண்டேயிருந்தான். மருமகளும் கூடக் கூப்பிட்டாள். ஆனால் கோகிலம் மறுத்துவிட்டாள். கோகிலம் எதற்கும் ஆசைப்படவில்லை. பூ வைத்துக் கொள்ளக் கூட அவள் விரும்பியதில்லை.

கோகிலத்திற்காக நாங்கள் வாங்கிக் கொடுத்த புடவைகள் எதையும் அவள் கட்டிக் கொள்ளவில்லை. அப்படியே ஒரு பையில் போட்டு வைத்திருந்தாள். ஒரு நாள் கூட உடல்நலமில்லாமல் ஒய்வெடுக்கவோ, சலித்துக் கொள்ளவோயில்லை.

கோகிலத்தின் வேலை பிடித்துப்போகவே அவளுக்கு மாத சம்பளம் ஆறாயிரத்திலிருந்து எட்டாயிரம் தரலாம் என்ற யோசனையை என் மனைவி தான் சொன்னாள். அதைப்பற்றி அவளிடம் சொன்ன போது உங்க இஷ்டம் என்று மட்டும் தான் சொன்னாள்

என்ன பெண்ணிவள். எதற்காக இப்படிப் பகலிரவாக வேலை செய்கிறாள். சம்பளத்தைப் பற்றிப் பெரிதாக நினைப்பதேயில்லை. யாரைப்பற்றியும் ஒரு வார்த்தை தவறாகப் பேசியதில்லை. தன் கஷ்டங்களைச் சொல்லி புலம்பியதில்லை. இவளைப் போல வேலையாள் கிடைப்பது கஷ்டம் என நினைத்துக் கொண்டேன்.
ஒரு நாள் கோகிலம் என்னிடம் தயக்கத்துடன் கேட்டாள்

`நாளைக்குக் காலையில பூந்தமல்லி வரைக்குப் போயிட்டு வரணும். அரை நாள் லீவு வேணும் சார் `

`என்ன வேலை` என்று கேட்டேன்

பதில் சொல்லவில்லை. பேசாமல் நின்று கொண்டிருந்தாள்

`சரி போயிட்டு வா `என்றேன்

`டிபன் செஞ்சிடும் போதே மதிய சமையலும் சேத்து வச்சிட்டு போயிடுறேன். வர்றதுக்கு மூணு மணி ஆகிடும்` என்றாள்

`அதையெல்லாம் நாங்க பாத்துகிடுறோம். நீ போயிட்டு வா`

`அம்மாவுக்குத் தைலம் தேய்ச்சி குளிக்க வைக்கணும். அதைச் சாயங்காலம் செய்துரலாம் `

`அதெல்லாம் பிரச்சனையே இல்லை கோகிலம்` என அனுப்பி வைத்தேன்

அவள் மறுநாள் காலை எட்டுமணிக்கு வெளியே கிளம்பி போனாள். என் வீட்டிற்கு வந்த ஆறுமாதங்களில் முதன்முறையாக அப்போது தான் வெளியே கிளம்பி போயிருக்கிறாள்

யாரைப்பார்க்க போகிறாள். என்ன வேலையாக இருக்கும். என யோசித்துக் கொண்டேயிருந்தேன்.

என் மனைவி கோகிலம் சில சமயம் காசை முடிந்து வைத்து சாமி கும்பிடுவதைக் கண்டிருப்பதையும். ஒருவேளை கோவிலுக்குப் போய்வரக்கூடும் என்றும் சொன்னாள்
`கோவிலுக்குப் போவதற்குச் சொல்லிக் கொண்டு போகலாம் தானே` என்று கேட்டேன்

`அது அவ சுபாவம். எதையும் யார்கிட்டயும் சொல்லமாட்டா` எனச் சிரித்தாள் மனைவி

அன்று மாலை கோகிலம் நாலு மணிக்கு திரும்பி வந்தாள். அவள் முகம் இறுகிப்போயிருந்தது. தன்னை நம்பியவர்களை அப்படியே போட்டுவிட்டு போய்விட்டோம் என்பது போல அவள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். வந்த வேகத்தில் அடுப்பை பற்றவைத்து சுவையான உளுந்தவடையும் காபியும் கொடுத்தாள். எங்கே போனாள் யாரை பார்த்து வந்தாள் என எதையும் சொல்லிக் கொள்ளவில்லை

மறுநாள் என் மனைவி சொன்னாள் `கோகிலம் ராத்திரி பூரா அழுதுகிட்டே இருந்தா. கேட்டா அதெல்லாமில்லேங்கிறா`
`யாராவது செத்துப் போயிருப்பாங்களா` எனக்கேட்டேன்

`தெரியலை. ஆனா அவளைப் பாக்க பாவமா இருக்கு`.

கோகிலம் மறுநாள் முதல் இயல்பாகிப் போனாள். நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. பத்துநாட்களுக்குப் பிறகு ஒரு மதியம் காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு நான் கதவை திறந்தேன். வாசலில் முப்பது வயதுள்ள ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான்

`என்ன வேணும்` எனக்கேட்டேன்

`எங்க அம்மாவை பாக்கணும்` என்றான்

`உங்க அம்மாவா. யாரு` எனக்கேட்டேன்

`கோகிலம்` என்றான்

கோகிலத்திற்கு யாருமில்லை என்றாளே என்ற குழப்பத்துடன் சமையலறைக்குப் போய் அவளை அழைத்தேன்
வெளியே வந்தவளின் முகம் அவனைப் பார்த்தவுடன் மாறியது

`இங்க எதுக்கு வந்தே` எனக்கேட்டாள்

`உன்னை யாரு இங்க வந்து வீட்டுவேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினா. உன் தலைவிதியா` எனக்கேட்டான் அந்தப் பையன்

`நான் உழைச்சி சாப்பிடுறேன். உன்னை என்னடா பண்ணுது. அதான் எல்லாத்தையும் குடுத்துட்டேனே. இன்னும் என்ன வேணும்` என முறைத்தபடியே கேட்டாள்
`யம்மா. நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக நீ யாரோ வீட்ல வந்து எதுக்கு வேலை செய்ற. சும்மா உட்கார்ந்து சாப்பிட்டா கூட முப்பது வருஷம் சாப்பிடலாம். சொத்த வித்த பங்குல உனக்குச் சேர வேண்டியது இரண்டு கோடி வந்துருக்கு. அது உனக்குத் தான் `

`அது ஒண்ணும் என் பணமில்லை. காசு காசுனு நீ தானே அலையுறே. நீயே வச்சி அனுபவி` என்றாள் கோகிலம்

`உனக்கு வேணாம்னா போ. ஆனா நாளைக்கு உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா கொள்ளி போட நான் தான் வந்தாகணும். அதை மறந்துராத` என்றான் மகன்
`ஏன் நான் செத்தா இவங்க எடுத்து போட மாட்டாங்களா `எனக்கேட்டாள்

அதைக் கேட்டதும் எனக்குச் சிலீர் என்றது. அந்தப் பையன் சொன்னான்

`உனக்குக் காசோட அருமை தெரியலை. இரண்டு கோடியை வேணாம்னு சொல்லுறே, பெத்த தாயேனு தான் திரும்ப வந்து நீயே வச்சிக்கோனு குடுக்குறேன். வேற யாராவது இருந்தா முழுங்கி ஏப்பம் விட்ருப்பான்`

`நீயும் வேணாம். உன் கோடி ரூபாயும் வேணாம். கிளம்பு. இனிமே என்னைத் தேடிகிட்டு இங்க வந்தா செருப்பாலே அடிப்பேன். போடா `
எனச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் போய்விட்டாள்

அந்தப் பையன் என்னை முறைத்தபடியே வெளியே போனான். கோகிலம் பேசியதை எல்லாம் கேட்டதும் எனக்குத் திகைப்பாக இருந்தது. கோகிலம் வெறும் வேலைக்காரியில்லை. இரண்டு கோடி பணமுள்ளவள். அதை விடவும் வசதியாக வாழ்ந்தவள். ஏதோ ஒரு பிடிவாதம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வந்து வேலைக்காரியாக இருக்கிறாள்.

கோகிலத்திடம் நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிரவு அவளாகவே வந்து சொன்னாள்

“எங்க வீட்டுக்காரு பெரிய டிராவல்ஸ் வச்சிருந்தாரு. பூந்தமல்லியில பெரிய வீடு. நாலு கார் இருந்துச்சி. நல்லா சம்பாதிச்சி மெயின்ரோட்ல ஒரு கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாரு. பம்மல்ல இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் இருந்துச்சி.எங்க வீட்லயும் ரெண்டு பேரு வேலைக்காரிகள் இருந்தாங்க. எங்க வீட்டுக்காரருக்கு தினமும் சாப்பாடு ருசியா இருக்கணும். விதவிதமா ஆக்கி போடுவேன்.

திடீர்னு ஒரு நாள் பெங்களுர் போயிட்டு வந்துகிட்டு இருந்த என் புருஷன் ரோடு ஆக்சிடெண்டில் செத்துப்போயிட்டாரு. கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி ஆகிருச்சி. என் மகனே என்னை ஏமாத்த ஆரம்பிச்சிட்டான். அவனுக்குச் சேர்க்கை சரியில்லை. ஒரு வருசத்துக்குள்ளே ஊர்பட்ட கடன். அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சேன். வந்தவ இன்னும் மோசம். ரெண்டு பேரும் சேந்துகிட்டு என்னை வீட்டை விட்டு துரத்தி அடிச்சிட்டாங்க.

அப்புறம் வீட்டுவேலை செய்து பிழைச்சிகிட்டு இருக்கேன். எப்படி வாழ்ந்த நாம இப்படி ஆகிட்டோம்னு நினைச்சி தான் வெறும் சோத்தை சாப்பிடுறேன். அதுலயும் உப்புப் போடுறது கிடையாது.

பெத்து வளர்ந்த மகனை அடிச்சி விரட்டிட்டான். ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. அவன் நல்லா இருக்கணும்னு காசு முடிச்சி போட்டு சாமி கும்பிட்டுகிடுவேன். எனக்குனு யாருமேயில்லை. அதான் இருக்கிற காலத்தை உங்கள மாதிரி யார் வீட்லயாவது ஒடிட்டு முடிச்சிரலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.
முந்தநாள் பஜார்ல என் மகனை பார்த்தேன். கல்யாண மண்டபத்தை விக்கப் போறேன். உன் கையெழுத்து வேணும். பத்திர ஆபீஸ்க்கு வந்துருனு சொன்னான்
அதைப் போட தான் நேத்து போனேன். எட்டு கோடி ரூபாய் வந்துச்சி. அதுல என் பங்கு ரெண்டு கோடி வச்சிக்கோனு குடுத்தான். உன் பிச்ச காசு எனக்கு வேணாம் போனு உதறிட்டு வந்துட்டேன். நான் செஞ்சது சரி தானே சார் “

எனக்கு அவள் பேசியதை கேட்க கேட்க மனதில் பாரமேறியது. தொண்டை வலித்தது.

“இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம்லே“

“வசதியா இருந்த ஆளை யாரு வேலைக்கு வச்சிகிடுவா`

“அதுக்கா ஏன் வீட்டுவேலை செய்து கஷ்டப்படுறே. அந்தப் பணத்தை வாங்கிப் பேங்கிலப் போட்டுட்டு காலாட்டிகிட்டு வாழலாம்லே“ எனக்கேட்டாள் என் மனைவி
“நம்மாலே அப்படி வாழ முடியாதும்மா. நமக்கெல்லாம் உழைச்சி சாப்பிடணும். அது அநாமத்தா வந்த பணம். அதை வச்சிருந்தா ஆயிரம் பிரச்சனை கூட வரும். அந்தக் கருமம் எனக்கு வேணாம். சோறு போடுறதுக்கு நீங்க இருக்கீங்க. படுக்க இடம் இருக்கு இது போதும்மா“

அவள் சொல்வது உண்மை. ஆனால் இவளை போன்ற துணிவும் மனவுறுதியும் எங்களுக்கு இருக்குமா என யோசனையாக இருந்தது. என் மனைவி அவளிடம் திரும்பத் திரும்பப் பணம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். கோகிலம் அது தன்னுடைய பணமில்லை. தன்னைப் பெற்ற மகனே ஏமாற்றியபிறகு யாரையும் நம்பத் தயராகயில்லை“ என உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

சரி அவள் இஷ்டம். எப்போதும் போல அவள் இந்த வீட்ல் இருக்கலாம். இனி அவளுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல மாட்டோம் என நாங்கள் முடிவு செய்தோம்
மறுநாள் விடிகாலையில் நாங்கள் எழுந்து வந்த போது கோகிலம் சமையல் அறையில் இல்லை. சிறிய கடிதம் மட்டுமே இருந்தது
அன்பு மிக்க நடராஜன் அய்யா, அம்மாவிற்கு

இத்தனை நாட்கள் எனக்குச் சாப்பாடு போட்டு தங்க இடம் கொடுத்ததிற்கு நன்றி. நான் யார் என்று தெரிந்தபிறகு முன்பு போல என்னை வேலை சொல்ல உங்களுக்கு மனம் வராது. ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும் போதும் இரண்டு கோடி ரூபாய் உங்கள் நினைவில் வந்து போகும். அது எனக்கும் சிரமம். உங்களுக்கும் சிரமம். ஆகவே வேறு ஊருக்கு வேலைக்குப் போகிறேன். இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள என் சம்பள பணத்தை அம்பத்தூரில் உள்ள அநாதை காப்பகத்திற்குக் கொடுத்துவிடவும்.

அம்மாவிற்குத் தைலம் தேய்த்துவிட முடியாமல் போய்விடுகிறதே என்று மட்டும் தான் எனக்குக் கவலை

என் சாப்பாடு உங்கள் இருவருக்கும் பிடிந்திருந்தது என்பது மகிழ்ச்சி. பலசரக்கு கடைக்காரன் 26 ரூபாய் பாக்கி தர வேண்டும். பால் பாக்கெட் ஒன்று கூடுதலாகப் போட வேண்டும்.

உங்கள் இருவரின் நினைவாக ஒரேயொரு டம்ளரை எடுத்துப் போகிறேன். அதில் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன்
உங்கள் வேலைக்காரி கோகிலம் என எழுதியிருந்தாள். அந்தக் கடிதத்தைப் படித்து முடிந்தவுடன் வேதனைபீறிட்டது

என் மனைவி படித்துவிட்டு வாய்விட்டு அரற்றினாள்

“நமக்கு தான் புத்தியில்லை. ஆள பாத்து தப்பா எடைபோட்டுட்டோம். விதவிதமா நமக்குச் சமைச்சி போட்டு கவனிச்சிட்டா. அவளுக்கு நாம ஒண்ணுமே பண்ணலே. இந்தப் பாவத்துக்கு என்ன பரிகாரம் பண்ணப்போறோம் சொல்லுங்க“

எனக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை

சமையல்கட்டின் ஒரம் நாங்கள் கொடுத்த புதுப்புடவைகள் அத்தனையும் ஒரு பையில் அப்படியே இருந்தன. அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது என் மனைவி வெடித்து அழத்துவங்கியிருந்தாள்

•••
தினமணி தீபாவளி மலரில் வந்த சிறுகதை

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Thursday, December 14, 2017

மந்திராலய மகான் ...

சோழ நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. தஞ்சையை அரசாண்ட மன்னன் விஜயராகவ நாயக்கர் எத்தனையோ பணம் செலவழித்தும் மக்களின் பஞ்சம் தீரவில்லை. ராகவேந்திரரை, கும்பகோணம் வந்து தஞ்சையின் நிலவரம் சொல்லி அரசர் அழைத்தார். சுவாமியும் மக்கள் நன்மையைக் கருத்தில் கொண்டு பல பூஜைகள், யாகங்கள் செய்து பிரார்த்தித்தார். வருண பகவான் மனம் மகிழ்ந்து மழை பொழிந்து நாடு செழிக்கச் செய்து பஞ்சம் தீர அருளினான். அரசர் மிகவும் மகிழ்ந்து ஒரு வைர மாலையை மடத்திற்கு அன்பளிப்பாகத் தந்தார். அதை ராகவேந்திரர் எரிந்து கொண்டிருந்த அக்னிக்குள் போட்டு விட்டார். அரசருக்குக் கோபம் வந்து குமுறினார். உடனே மகான் ராகவேந்திரர் அக்னி தேவனை மனதால் துதிக்க, வைரமாலை அப்படியே வெளியே வந்தது. அரசன் மகானின் பெருமையை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.
ஏன் அப்படி செய்தார் என்று சிஷ்யர்கள் கேட்டபோது மகான் சொன்னார், அக்னி தேவன் அந்த மாலையை அணிய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அதான் அப்படிச் செய்தேன் என்றாராம். அவரது அற்புதங்கள் இன்றும் தொடர்கிறது. கலியுக தெய்வம் மகான் ராகவேந்திரர். மந்திராலய மகான் கேட்டதைத் தரும் கற்பக விருட்சம் போன்றவர். அவர் அட்சதை துர்சக்திகளை விரட்டி உள்ளது. ஜாதி மத பேதம் பார்த்த பக்தரின் அட்சதையை கருப்பாக்கி அனைவரும் இறைவன் முன் சமம் என்பதை உணர்த்தியவர். அவர் மாஞ்சாலை கிராமத்தை தன் பிருந்தாவன இடம் என்று முடிவு செய்து அதைப் பெற நவாபை நாடிய போது அவர் மகானின் பெருமையை உணராமல் மூடிய தட்டில் மாமிசம் தர அது ராகவேந்திரரின் மகிமையால் ரோஜாப் பூவாக மாறியது. பிறகு நவாப் மன்னிப்பு கேட்டு அவர் விரும்பிய இடம் முழுவதையும் தந்தார்.
பூஜ்யாய குரு ராகவேந்திராய நமஹ

Saturday, December 9, 2017

பிணிகளை அகற்றும் சமயுரம் மாரியம்மன்



உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோவில்களுக்கும் தலைமை பீடம், சமயபுரம் தான். சமயபுரம் மாரியம்மனின் சிறப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மார்க்கண்டேயரை எமனிடமிருந்து காப்பாற்ற, ஈசன் கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை அழித்தார். இதனால் உலகில் பிறப்பு- இறப்பு நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. எமதர்மனின் சபையில் நோய்களின் அதிபதியாக இருந்த மாயாசூரன் என்பவன், பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான். அவனோடு அவனது சகோதரர்களும் சேர்ந்து மக்களை வாட்டி வதைத்தனர்.
இதனைக்கண்ட ஈசன் பார்வதி தேவியைப் பார்க்க, பார்வதி தேவி தன் அம்சமாக மாரியம்மனை தோற்றுவித்து, மாயாசூரனை வதம் செய்ய அனுப்பிவைத்தாள். மாரியம்மன் மாயாசூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்கள் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றினாள்.
பின்னர் ஈசனின் அருளுடன் தனது சகோதரர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘வைஷ்ணவி’ என்ற பெயரில் அமர்ந்தாள். பின்னர் இப்போதுள்ள சமயபுரத்தில் வந்தமர்ந்து மாரியம்மனாக அருள்பாலிக்கிறார்.
உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோவில்களுக்கும் தலைமை பீடம், சமயபுரம் தான். இன்றும் சமயபுரம் மாரியம்மனுக்கு தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து சீர்வரிசைகள் வருகின்றன. அதுபோல மாசியில் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் போது, சமயபுரத்தில் பூச்சொரிதல் விழா நடைபெறும். அப்போது சமயபுரம் மாரியம்மனுக்கு முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து வரும் பூவே பயன்படுத்தப்படுகிறது.
அதுபோல சித்திரை தேரோட்டத்தின் போது சமயபுரம் மாரியம்மனுக்கான சீர்வரிசைகள், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் இருந்து வருகிறதாம். சமயபுரத்தாளின் பேரழகு ததும்பும் அந்த செந்தூர முகத்தை கண்டாலே நம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
ஆலயக் கருவறையில் சமயபுரம் மாரியம்மனின் வலது திருப்பாதம், மாயாசூரனின் தலைமீது பதிந்துள்ளதைக் காணலாம். மாரியம்மன் தனது எட்டுக் கரங் களில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் மாயாசூரனின் தலைமீது பதித்துள்ளாள்.
இங்கு இரண்டு தீர்த்த குளங்கள் உண்டு. ஒன்று பெருவளை வாய்க்கால் தீர்த்தம், மற்றொன்று மாரி தீர்த்தம். இத்தல அம்மன் சிவரூபமாக அறியப்படுவதால், விபூதியே பிரசாதமாக தரப்படுகிறது. வேப்ப மரம்தான் இங்கு தல விருட்சம். உற்சவர் அம்மனின் திருநாமம் ‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்பதாகும். கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் இத்தலத்தை காவல் புரிகிறார். இந்த கோவிலில் மூன்று விநாயகர்கள் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக ஒரே கருவறையில் அருள்பாலிக்கின்றனர். சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் நோய்கள் அனைத்தும் நீங்கும்.
இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று தேரோட்டம் நடைபெறும். அப்போது அடியவர்கள் அலகு குத்தி, மொட்டையடித்து, தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து, அங்க பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
திருச்சி சத்திரம் பேருந்துநிலையத்தில் இருந்து திருவானைக்காவல் வழியாக 15 கி.மீ. தொலைவில் சமயபுரம் அமைந்துள்ளது.
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Wednesday, December 6, 2017

Wi Fi signals எச்சரிக்கை:

பள்ளி சிறுமிகள் 5 பேர் தங்கள் வகுப்புத் தேர்வுக்காக செய்த ஒரு சிறிய ஆராய்ச்சி, உலக உயிரியல் மற்றும் கதிரியக்க விஞ்ஞானிகளின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியுள்ளது.
டென்மார்க் நாட்டில் உள்ள வடக்கு ஜட்லேண்ட் தீவில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகளுக்கு உயிரியல் வகுப்பில் செய்முறைத் தேர்வு வந்தது. அந்த செய்முறைத் தேர்வுக்கு சிறிய அளவில் ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.
ஐந்து மாணவிகளும் ஸெஸ் எனப்படும் புல்வகையில் 400 விதைகளை 12 தட்டுகளில் விதைத்தனர். தட்டுகளை ஆறு ஆறாகப் பிரித்து, ஆறு தட்டுகளை சாதாரண அறையில் வைத்தனர். மீதம் ஆறு தட்டுகளை வைஃபை கருவி உள்ள அறையில் வைத்தனர். இந்த வைஃபை கருவியும் செல்போன் வெளியேற்றும் அதே அளவிலான கதிர் வீச்சைத் தான் வெளியேற்றும்.
இரண்டு அறைகளில் உள்ள தட்டுகளுக்கும் ஒரே அளவிலான தண்ணீர், சூரிய ஒளி ஆகியவற்றை அளித்தனர். 12 நாள்களுக்குப் பின்னர் ஆய்வு முடிவுகளைப் பார்த்த சிறுமிகள் வியந்துவிட்டனர். சாதாரண அறையில் வைத்திருந்த தட்டுகளில் உள்ள விதைகள் முளைத்து செழிப்பாக வளர்ந்திருந்தன.
வைஃபை கருவி உள்ள அறையில் வைத்திருந்த தட்டுகளில் விதைக்கப்பட்ட விதைகள் வளராமலும், சில விதைகள் அழுகி உயிரிழந்தும் போயிருந்தன.
இந்த ஆய்வு முடிவுகள் உலக அளவில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இங்கிலாந்து, ஹாலேண்ட், ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை பெரிய அளவில் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஸ்வீடன் நாட்டிலுள்ள கரோலின்ஸ்கா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓல் ஜொஹன்சன் என்ற பேராசிரியர் இது குறித்து கூறுகையில், "இந்தச் சிறுமிகள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் நேர்த்தியாகவும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
ஆய்வின் முடிவுகள் மிகவும் துல்லியமாக வெளிவந்துள்ளன. பயனுள்ள வகையை ஆராய்ச்சிக்குத் தேர்வு செய்ததும் மிகவும் புத்திசாலித்தனமானது. இந்த ஆய்வை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்ல இருக்கிறேன்'' என்றார்.
தங்களின் ஆய்வு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது சிறுமிகளை திக்குமுக்காடச் செய்துள்ளது. "பல்வேறு தரப்பிலும் இருந்து வரும் ஆதரவு எங்களுக்கு அதிக உற்சாகத்தை அளித்துள்ளது'' என்கின்றனர்.
எங்களில் சிலர் இரவில் செல்போனை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவதால் அடுத்த நாள் வகுப்பைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டது. சிலருக்கு செல்போன் இரவில் அருகில் இருப்பதால் தூங்குவதில் பிரச்னை இருந்தது. இதுகுறித்து சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கையில், அதைப் பற்றியே ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தற்போது இந்த ஆய்வு முடிவுகளைப் பார்த்த பிறகு யாரும் செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்க மாட்டோம். செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை வேறு அறையில் வைத்துவிட வேண்டும் அல்லது தூரமாக வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.
வைஃபை கருவிக்கு அருகில் உங்கள் படுக்கை இருந்தாலும் அதனை உடனே மாற்றிவிடுங்கள். தூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்கள்'' என்கின்றனர் அந்தச் சிறுமிகள்.
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

வாக்குறுதி

கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான்.
அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான். "குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா?" என்று கேட்டான்."ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே!" என்றான் காவலாளி.
அதற்கு மன்னன், "கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்" என்று கூறி அரண்மனைக்குள் சென்றான். மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான். அரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்தை மறந்து விட்டான்.காலையில் அந்த காவலாளி இறந்து கிடந்தான். அவனருகே ஒரு கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது.
"மன்னா!! இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மவுனமாக தாங்கி கொண்டிருந்தேன். ஆனால், குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குலைத்து என்னை கொன்று விட்டது".
ஆம்! சகோதரர்களே!
மற்றவர்களிடம் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி மற்றவரிடம் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு நம்பிக்கையை ஏற்படுத்தலாம். எனவே, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.நீங்கள் அறியமாட்டீர்கள்! உங்களின் நிறைவேற்றாத வாக்குறுதி நீங்கள் வாக்களித்தவருக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Tuesday, December 5, 2017

ஒருவரின் உருவத்தை வைத்து மதிப்பிடாதே

எப்போதும் நாம் ஒரு பொருளை,அல்லது மனிதர்களின் உருவத்தை வைத்தே எடை போடுகிறோம். அது சரியா? தவறா?.
தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவர் ஒரு நாள் தன் மகனை கடைக்கு கூட்டி சென்றார். தையற்காரர் வேலை செய்வதை அவனுடைய மகன் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
தையற்காரர் தனது கடைக்கு வந்த புது துணிகளை தைப்பதற்காக எடுத்து, அதனை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார். வெட்டிய பின்னர் கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்க ஆரம்பித்தார். துணியை முழுவதும் தைத்து முடித்த பிறகு, அவர் தைத்த சிறிய ஊசியை எடுத்து தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த மகனுக்கு குழப்பமாகியது. அது என்னவென்றால், கத்தரிகோல் ஆனது மிகவும் விலை உயர்ந்தது, அதை அலட்சியமாக தூக்கி போடுகிறார், ஊசி சிறியது... மலிவானது. ஆனால், அதை தலையில் பத்திரப்படுத்துகிறார் என்று. தனது மகனை பார்த்த தையற்காரர் என்ன குழம்பிக் கொண்டு இருக்கிறாய் என்று கேட்டார். 'அப்பா ! கத்திரிக்கோல் விலை உயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது... மலிவானது. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே. அது ஏன்...?" என்று கேட்டான்.
மகனே, 'நீ சொல்வது உண்மைதான்" என்றார் தையற்காரர். 'கத்திரிக்கோல் அழகாகவும், மதிப்புள்ளதாகவும் இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது. அதாவது #பிரிப்பது! அது ஒரு குடும்பத்திற்கோ அல்லது சமுதாயத்திற்கோ நல்லதல்ல. ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது. இது அனைவருக்கும் #நன்மை தரக்கூடிய செயலாகும்.
தத்துவம் :
ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் உருவத்தை வைத்து அல்ல. குடும்பம் ஒரு அழகான தோட்டம் அதில் உறவுகள் குலுங்கும் மலர்கள். எனவே ஒரு மனிதன் வாழ்நாளில் தன் குடும்பத்தாருடன் சேர்ந்து வாழவேண்டுமே தவிர, ஒருவருக்கு ஒருவர் பிரிவினையை ஏற்படுத்தி பிரிந்து வாழ்தல் கூடாது.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Monday, December 4, 2017

சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும் !

முதல் படி
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி.
இரண்டாம் படி
பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.
மூன்றாம் படி
கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.
நான்காம் படி
பாவ - புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.
ஐந்தாம் படி
நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.
ஆறாம் படி
கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது. இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே இறைவன் தான் என உணர்வது பிரம்ம ஞானம்.
எட்டாம் படி
எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.
ஒன்பதாம் படி
கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.
பத்தாம் படி
அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி.
பதினொன்றாம் படி
பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
பனிரெண்டாம் படி
இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு ஏழை - பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பனிரெண்டாம் படி.
பதிமூன்றாம் படி
எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி.
பதினான்காம் படி
யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி
தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி
இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி
சர்வம் பிரம்மம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.
பதினெட்டாம் படி
யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி.
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Friday, December 1, 2017

உன்னை ஏற்றுக் கொள் , உனக்கு மதிப்பளி

என்னுடைய முழு செய்தியும் நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே உன்னை ஏற்றுக் கொள்.
ஏனெனில் கடவுள் அதனை ஏற்றுக்கொள்கிறார்.
கடவுள் உனக்கு மதிப்பளிக்கிறார்,
நீ உனது இருப்பிற்கு இன்னும் மதிப்பளிக்கவில்லை.
கடவுள் உன்னைப் போல இருப்பதை தேர்ந்தெடுத்திருக்கிறார் என அதிக ஆனந்தம் கொள்.
கடவுள் இருப்பதற்கு உன்னை தேர்ந்தெடுக்கிறார்,
அவருடைய உலகத்தை பார்ப்பதற்கு,
அவருடைய இசையை கேட்பதற்கு,
அவருடைய நட்சத்திரங்களை பார்ப்பதற்கு,
அவருடைய மக்களை பார்ப்பதற்கு,
நேசிப்பதற்கு, நேசிக்கப்படுவதற்கு –
இன்னும் உனக்கு என்ன வேண்டும்?
கொண்டாடு!
நான் திரும்ப திரும்ப கூறுகிறேன்,
விழிப்புணர்வுடன் அதனை கொண்டாடு.!
அந்த விழிப்புணர்வுடன் கூடிய கொண்டாட்டத்தில் மெதுமெதுவாக, நீ தனிப்பட்ட சிறப்புடையவன் என்பது உனக்குள் மின்னலைப் போல வெடிக்கும்.
தன்னை மதிக்கும் ஒரு மனிதரை கண்டுபிடிப்பது மிகவும் அபூர்வம்.
ஏன் அது மிகவும் அபூர்வமாக உள்ளது ஏன் வாழ்வுக்கு மதிப்பு இல்லை
உன்னுடைய சொந்த வாழ்விற்க்கு மதிப்பு இல்லை
உன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு நீயே மதிப்பளிக்கவில்லை எனில் மற்றவர்களுக்கு எப்படி மதிப்பு இருக்கும்
உன்னுடைய சொந்த இருப்பை நீ மதிக்கவில்லை எனில்
நீ எப்படி ரோஜா இதழை, பைன் மரத்தை, மற்றும் நிலவை, மக்களை மதிக்க முடியும்?
நீ எப்படி உன்னுடைய குருவை, தந்தையை, தாயை, நண்பரை, உனது மனைவியை, கணவரை மதிக்க முடியும்?
நீ உன்னை மதிக்காதபோது, உனது குழந்தைகளை எப்படி மதிக்கமுடியும்?
தன்னை மதிக்கும் ஒரு மனிதரை காண்பது மிகவும் அபூர்வம்.
ஏன் அது மிகவும் அபூர்வமாக உள்ளது?
– ஏனெனில்
உனக்கு நகலாக இருக்க சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது
சிறு வயதிலிருந்தே ஏசுவைப் போல இரு அல்லது புத்தரைப் போல இரு என சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது.
ஆனால் ஏன் புத்தரைப் போல ஆக வேண்டும்?
புத்தர் உன்னைப் போல ஆக வில்லை,
புத்தர் புத்தராக இருந்தார்.
ஏசு ஏசுவாக இருந்தார். கிருஷ்ணர் கிருஷ்ணராக இருந்தார்.
நீ ஏன் கிருஷ்ணரைப் போல ஆக வேண்டும்? நீ என்ன தவறு செய்தாய்? நீ என்ன பாவம் செய்தாய்? நீ ஏன் கிருஷ்ணரைப் போல ஆக வேண்டும்?
கடவுள் ஒருபோதும் இன்னொரு கிருஷ்ணரைப் படைக்கவில்லை.
அவர் ஒருபோதும் இன்னொரு புத்தரைப் படைக்கவில்லை.
இன்னொரு ஏசு – ஒருபோதும் இல்லை ஏனெனில் அவர் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை படைக்க விரும்புவதில்லை.
அவர் ஒரு படைப்பாளி. அவர் ஒரு வரிசைகிரமமாக படைப்பவர் அல்ல – ஒரு கார் வருகிறது, அதே கார் இன்னொன்று, இன்னொன்று என கார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.
எல்லாம் ஒன்று போலவே வரிசைகிரமமாக வருகின்றன. கடவுள் வரிசைகிரமமாக படைப்பவர் அல்ல.
அவர் உண்மையான படைப்பாளி.
அவர் ஒருபோதும் அதே விஷயத்தை திரும்ப படைப்பதில்லை.
-- ஓஷோ --
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

""கோவிந்தா! கோவிந்தா!''

பெருமாள் பக்தர் ஒருவர் அதிகாலை நீராடி, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி பெருமாளைத் தரிசிப்பார். ஆனாலும், ஏதோ ஒரு குறையை உணர்ந்தார்.
ஒரு குருவிடம் சென்று, ""குருவே! பெருமாளின் கருணையால் செல்வத்திற்கு குறையில்லை. இருந்தாலும், மனதில் குறை இருப்பதை உணர்கிறேன்'' என்றார்.
குரு அங்கிருந்த ஒரு பக்தனை அழைத்து,""தம்பி! உன் குடும்பம் நலமா? ஏதேனும் உனக்கு குறை இருக்கிறதா?'' என்று கேட்டார்.
அந்த நபரோ, ""பெருமாளின் மகாமந்திரத்தைச் சொல்லும் எனக்கு ஏது குறை...?''என்றார்.
உடனே பெருமாள் பக்தர் ஆச்சரியத்துடன், ""எனக்கு அந்த மந்திரம் தெரியாதே! அதைச் சொல்லேன்!'' என்றார்.
வந்தவர்,""கோவிந்தா! கோவிந்தா!'' என்றார்.
பக்திமான் ஏமாற்றத்துடன்,""இது தானா! நான் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமமமே சொல்கிறேன். அதை விடவா இது பெரிது?'' என்றார்.
குரு அவரிடம்,""நீ தவறாக நினைக்கிறாய். ஆயிரம் பெயர்களால் விஷ்ணுவை வணங்குவதே சகஸ்ரநாமம். இது பீஷ்மர் அர்ஜூனனுக்கு உபதேசித்தது. இதைப் போல அற்புதம் வேறில்லை. ஆனால், எல்லாரும் பீஷ்மராக முடியுமா? பாமரனும், பெருமாள் அருள் பெற சொல்லப்பட்டதே கோவிந்த நாமம். திரவுபதியின் மானம் காத்தது அதுவே. எந்த மந்திரமும் அறியாதவன் கூட "கோவிந்தா' என்று உளப்பூர்வமாகச் சொன்னால் பெருமாள் ஓடி வருவார்'' என்றார் குரு. பக்தரின் மனதில் தெளிவு பிறந்தது.
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677